Skip to main content

“இன்னொரு இடி இடித்துவிடுங்கள் கட்டிடம் கீழே விழும்” என்றார்  உமாபாரதி - எம். எச். ஜவாஹிருல்லா!

Published on 30/09/2020 | Edited on 30/09/2020

 

Jawahirullah about babri masjid

 

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. பா.ஜ.க மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உட்பட 49 பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட இந்த வழக்கை சி.பி.ஐ விசாரித்து வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய 17 பேர் விசாரணைக் காலத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட 32 பேரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்துள்ளது லக்னோ சி.பி.ஐ நீதிமன்றம். 


இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள் அறிக்கையில், பாபரி பள்ளிவாசல் இடிப்பு வழக்கில் இன்று லக்னோ சி.பி.ஐ விசாரணை நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளது. 

 

பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குச் சதி செய்தார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட 49 நபர்களில், தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 32 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை அளிக்கவில்லை. இது எதிர்பார்த்த தீர்ப்பாகவே அமைந்துள்ளது.

 

பாபரி மஸ்ஜிதை இடிப்பதற்கு அத்வானி உள்ளிட்டோர் சதி செய்தார்கள் என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி 32 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். பாபரி மஸ்ஜிதை இடித்து அது இருந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்பது பா.ஜ.க உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளின் நீண்ட கால திட்டம். 


பா.ஜ.க.வின் தீர்மானங்கள் இதற்குச் சான்றாக இருக்கின்றன. பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் கரசேவை செய்வதற்காக 1989 முதல் இந்தியா முழுவதும் ரத்த ஆறுகளை ஒட்டிய ரத யாத்திரைகளை நடத்தியவர் அத்வானி. பாபரி மஸ்ஜித் இடிக்கும் இடத்தில் அத்வானி உள்ளிட்டோர் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று பள்ளிவாசல் இடிப்பு குறித்து விசாரித்த லிபராஹான் ஆணையம் மிகத் தெளிவாக இப்படிக் கூறுகின்றது: “அத்வானி, ஜோஷி, விஜய்ராஜே சிந்தியா ஆகியோர் கரசேவகர்களை பள்ளிவாசல் மேலிருந்து கீழே இறங்கும்படி வேண்டா வெறுப்பாக வேண்டுகோள்களை விடுத்தனர். நல்லெண்ணத்துடன் இதைச் செய்தார்களா அல்லது ஊடகங்களின் கண்துடைப்பிற்காகச் செய்தார்களா என்று தெரியவில்லை. ஆனால், கரசேவகர்களை பள்ளிவாசலின் புனித இடத்திற்குள் நுழைய வேண்டாம் என்றோ கட்டிடத்தை இடிக்க வேண்டாம் என்றோ யாரும் கேட்டுக்கொள்ளவில்லை. இவ்வாறு அவர்கள் கேட்டுக் கொள்ளாதது, அவர்கள் சர்ச்சைக்குரிய கட்டிடத்தை இடித்து விட வேண்டுமென்பதே அவர்களின் உண்மை அவா என்பதைக் காட்டுவதாக உள்ளது.” 

 

“இன்னொரு இடி இடித்து விடுங்கள் கட்டிடம் கீழே விழும்” என்ற உமாபாரதி கத்தியது அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பாகியது. 

 

பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கல்யாண் சிங் அதற்காக உச்சநீதிமன்றத்தால் ஒரு நாள் தண்டனை பெற்றார். பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட நாளில் அங்கு என்ன நடைபெற்றது என்பதை ஊடகங்கள் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த உலக மக்களே இடிப்பிற்குச் சதித்திட்டம் தீட்டியவர்கள் யார்..? என்பதற்குச் சாட்சியாக உள்ளார்கள். 

 

100க்கும் மேற்பட்ட யுமேடிக் காணொளி ஒலி நாடாக்கள் இந்த வழக்கில் நீதிமன்றத்தில் சாட்சியாகப் போட்டுக் காட்டப்பட்டுள்ளன. இருப்பினும் சி.பி.ஐ லக்னோ நீதிமன்றம் அத்வானி உள்ளிட்டோர் மீது சதி செய்ததற்குச் சான்று இல்லை என்று கூறி அவர்களை விடுவித்துள்ளது.

 

நாட்டின் உயர்ந்த நீதி பரிபாலன அவையான உச்சநீதிமன்றமே பாபரி பள்ளிவாசல் இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் பாபரி பள்ளிவாசல் இருந்த இடத்தில் அதற்கு முன்பு அங்குக் கட்டடங்கள் எதுவும் இருக்கவில்லை என்று சொல்லியதுடன், தொடர்ச்சியாக முஸ்லிம்கள் அங்கு வழிபாடு நடத்தினார்கள் என்று குறிப்பிட்டது. மேலும், பாபரி பள்ளிவாசல் இடிப்பு நாட்டின் சட்டத்தின் ஆட்சியின் மீது நடத்தப்பட்ட அக்கிரமம் நிறைந்த அத்துமீறல் என்று குறிப்பிட்டது. 

 

Ad

 

இத்தனையும் தெரிவித்துவிட்டு பாபரி பள்ளிவாசல் இடத்தை எதிர் தரப்பிற்கு அளித்துத் தீர்ப்பு வழங்கியது. நீதி பரிபாலன படித்தரத்தில் கீழ் நிலையில் உள்ள லக்னோ சி.பி.ஐ விசாரணை மன்றம் இதே அடிப்படையில் பாபரி பள்ளிவாசலை இடித்தவர்களைத் தேச விரோதிகள் என்று கூறிவிட்டு அத்தகைய தேசத் துரோகிகளை அயோத்திக்கு கரசேவை செய்வதற்குத் தொடர்ந்து அழைப்பு கொடுத்தவர்களை விடுவித்துள்ளது.

 

நமது நாட்டில் நடைபெறும் இந்த அநீதியைக் களைந்து நீதிக்கு உயிர் அளிக்கக் காந்தியடிகள் விரும்பிய இந்தியாவை மீண்டும் கட்டமைக்க விரும்புவோர் ஒன்று சேர்ந்து எல்லா நிலைகளிலும் போராடுவது காலத்தின் கட்டாயமாகும். நீதித்துறையைக் காப்பாற்றுங்கள் என்ற கோரிக்கையுடன் நாளை மாலை 4 மணிக்கு மாவட்ட தலைநகரங்கள் மற்றும் நகரங்கள், பேரூர்களில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரளாகப் பங்கு கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை பொதுக்குழு கூட்டம் (படங்கள்)

Published on 07/02/2024 | Edited on 07/02/2024

 

 

2024 ஆம் ஆண்டுக்கான மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை பொதுக்குழு கூட்டம் இன்று (07-02-24) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். 

Next Story

ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் த.மு.மு.க.!  

Published on 28/10/2023 | Edited on 28/10/2023

 

Governor bungalow prisoners issue

 

இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட 49 ஆயுள் சிறைவாசிகளின் முன் விடுதலைக்காக தமிழ்நாடு அரசு அனுப்பியுள்ள கோப்பை கிடப்பில் போட்டிருப்பதைக் கண்டித்தும், விரைந்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியும் ஆளுநர் மாளிகையை  முற்றுகையிடும் போராட்டத்தை இன்று 28ம் தேதி நடத்துகிறது தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம். 

 

இது குறித்து த.மு.மு.க.வின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.விடம் நாம் பேசியபோது, “முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட 49 ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்ய பரிந்துரைத்துக் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி  ஆளுநருக்குக் கோப்பு அனுப்பி வைத்தது தமிழ்நாடு அரசு.  இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி,  அக்கோப்பிற்கு ஒப்புதல் அளிக்காமல்  கால தாமதம் செய்து வருகிறார்.  முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட 49 ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலைக்கான கோப்பிற்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதை  வலியுறுத்தி ஆளுநர் மாளிகையை முற்றுகை போராட்டத்தை நடத்துகிறோம். மாநில அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களையும் கோப்புகளையும் நிலுவையில் வைத்துக் கொண்டிருப்பது ஆளுநரின் ஜனநாயக விரோதத்தைக் காட்டுகிறது” என்கிறார் ஜவாஹிருல்லா. 

 

இவரது  தலைமையில் நடைபெறவுள்ள இந்த முற்றுகை போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, மதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்ற உள்ளனர். இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொள்ளவிருப்பதால் பாதுகாப்பைப்  பலப்படுத்த காவல்துறை தயாராகி வருகிறது.