Skip to main content

பணி நேரத்தில் போதையில் ஆட்டம் போட்ட சிறை அலுவலர்! -விவகாரத்தில் சிக்கிய விருதுநகர் மாவட்ட சிறை!

Published on 20/06/2020 | Edited on 20/06/2020
Jailed officer Virudhunagar

 

சிறைகளுக்குள் கரோனா பரவுகிறது என்ற பீதியில் சிறைவாசிகள் பரிதவித்துவரும் நிலையில், விருதுநகர் மாவட்ட சிறையில், பணி நேரத்தில், சிறை கண்காணிப்பாளர் பொறுப்பில் உள்ள சிறை அலுவலர் வடிவேல், மதுபோதையில் கண்டபடி உளறிக்கொண்டு இருந்திருக்கிறார். இந்த விவகாரம், உதவி சிறை அலுவலர் ராம்குமார் மூலம் மேலதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு, விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் புகாராகியுள்ளது. சிறை அலுவலர் வடிவேல், விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, A.R. காப்பி பதிவு செய்யப்பட்ட நிலையில், முதல் தகவல் அறிக்கையும்  பதிவாகியுள்ளது.

“உயர் பொறுப்பிலுள்ள நீங்கள் இப்படி குடி போதையில் பணிக்கு வரலாமா?” என்று கேட்டாராம், உதவி சிறை அலுவலர் ராம்குமார். அதற்கு வடிவேல், “நீங்கள் எல்லாம் யோக்கியமா? உன் வேலையைப் பார்..” என்று தகாத வார்த்தையில் பேசினாராம்.

இந்த வழக்கின் பின்னணியில் வேறொரு விவகாரம் இருப்பதாகச் சொல்கிறது விருதுநகர் சிறைத்துறை வட்டாரம். சிறை அலுவலர் வடிவேல் விடுப்பில் இருந்தபோது, சிறைவாசி ஒருவரை தவறுதலாக ‘ரிலீஸ்’ செய்துவிட்டனர். பிணை வழங்க மறுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை, பிணை உத்தரவு என்று தவறுதலாக கருதி, அந்தக் கைதியை விடுவித்துள்ளனர். அதன்பிறகு, வழக்கறிஞர் மூலம் அந்த கைதியை திரும்ப அழைத்துவந்து, செல்லில் அடைத்துள்ளனர். இந்தத் தவறுக்காக, சம்பந்தப்பட்டவர், துறை ரீதியான நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கிறார். இந்த எரிச்சலில்தான்,  மதுப்பழக்கம் உள்ள சிறை அலுவலர் வடிவேலுவை, அவர் சிக்க வைத்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவைப் படித்து புரிந்துகொள்ள இயலாத நிலையில்தான் தமிழகத்தில் சிறை அலுவலர்கள் பலரும் உள்ளனர். புழல் சிறை தொடங்கி, விருதுநகர் மாவட்ட சிறை வரை இதே நிலைதான்!

 

சார்ந்த செய்திகள்

Next Story

9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; கட்டடத் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
25 years in prison for a construction worker for A 9-year-old girl was misbehaviour in vellore

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு பகுதியை அடுத்துள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (39). இவர் கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு, அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியைக் கடத்தி அருகில் உள்ள மாங்காய் தோட்டத்தில் கட்டிப் போட்டு சுரேஷ்குமார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர், குடியாத்தம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் பேரில் மகளிர் போலீசார், சுரேஷ்குமாரை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கலைப்பொன்னி இந்த வழக்கில் நேற்று (15-03-24) தீர்ப்பளித்தார். அதில், சுரேஷ்குமார் மீது குற்றம் நிரூபணமானதால், அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், அபராதத் தொகையை கட்டத் தவறினால், கூடுதலாக 9 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

Next Story

எல்லாத்துக்கும் ஒரு ரேட்டு; லஞ்சப் புகாரில் சிறைத்துறை டி.ஐ.ஜி! 

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Bribery Complaint trichy prison DIG

திருச்சி மத்திய சிறையில் மொத்தம் 1500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைக்குள் இருக்கும் கைதிகளுக்கு படிப்பும், தொழிற்கல்வியும், உளவியல் ரீதியாக அறிவுரைகளும் வழங்கப்பட்டு வந்தன. அதேபோல், இச்சிறைச்சாலைக்குள் 250 ஏக்கர் பரப்பளவிலுள்ள விவசாய நிலத்தில், இதற்கு முன்பு சிறை கண்காணிப்பாளர்களாக இருந்தவர்கள், கைதிகளைக்கொண்டு விவசாயம் செய்து காய்கறிகள், கீரை வகைகளை விளைவித்து, விற்பனை மற்றும் உணவகம் என்று பெரிய அளவில் வர்த்தகமே செய்துவந்தனர்.

ஆனால் தற்போது சிறைத்துறை கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ள ஆண்டாள், கைதிகளுக்கு இதுபோன்ற ஆக்கப்பூர்வமான பணிகளை வழங்காமல், அலுவலகத்திற்கு வருவதும், அலுவலக ரீதியான பணிகளைச் செய்வதுமாக மட்டுமே தனது கடமையை முடித்துக்கொள்கிறார் என்று கூறப்படுகிறது. அதேபோல், சிறைத்துறையின் டி.ஐ.ஜி.யாக இருக்கும் ஜெயபாரதியும் கைதிகளின் நலனுக்காக பெரிய அளவில் எந்த பணிகளையும் முன்னெடுத்ததாகத் தெரியவில்லை. இரண்டு பெண் அதிகாரிகளும் பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரை எந்த செய்தியாளர்களின் அழைப்பையும் எடுப்பதில்லை.

டி.ஐ.ஜி. மட்டும் தன்னால் முடிந்தவரை சம்பாதிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், திருச்சி மண்டலத்திற்குட்பட்ட 29 கிளைச் சிறைகளில், ஒவ்வொன்றிலிருந்தும் மாதாமாதம் ஐயாயிரம் ரூபாய் கொடுத்தாக வேண்டுமென்ற வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சிறையிலுள்ள கைதிகளின் உணவுக்காக அரசு வழங்கும் படிக்காசு, சிறைக்குள் கைதிகளுக்கு தனிப்பட்ட சலுகைகள் செய்து தருவதற்கு தனியாக ஒரு ரேட் என்று கொடிகட்டிப் பறக்கிறார் டி.ஐ.ஜி. சமீபத்தில் கூட பட்டுக்கோட்டையைச் சேர்ந்த செந்தில்குமார் என்ற விசாரணைக் கைதி பண மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக பட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் திருச்சி மத்திய சிறையில் அவரை அடைத்தனர்.

இந்நிலையில், தன்னை தஞ்சாவூர் சிறைக்கு அனுப்ப வேண்டுமென்று உளவுப் பிரிவு முதல்நிலை தலைமைக் காவலர் பிரபாகரனிடம் கேட்டுள்ளார். இத்தகவலை பிரபாகரன் சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதியிடம் சொன்னதோடு மட்டுமல்லாமல், செந்தில்குமாரிடமிருந்து டி.ஐ.ஜி.க்கு 50 ஆயிரமும், அவருக்கு 40 ஆயிரமும் பெற்றுக்கொண்டு அவரை தஞ்சை சிறைக்கு பத்திரமாக அனுப்பி வைத்துள்ள செய்தி, காவலர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

டி.ஐ.ஜி. ஜெயபாரதி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் கேட்டபோது, "முற்றிலும் தவறான தகவல். சிறைக்குள் யாராவது கிளப்பிவிட்ட புரளியாக இருக்கும்'' என்று தன் மீதான லஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்தார்.

சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.