Skip to main content

''சூர்யாவை உதைக்கச் சொன்னவரை வேண்டுமானால் உதைங்க, நான் காசு தருகிறேன்'' - சீமான் பேட்டி!

Published on 18/11/2021 | Edited on 18/11/2021

 

jai bhim issue - Seaman interview!

 

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ‘ஜெய் பீம்’ திரைப்படம் கடந்த 2ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டிவருகின்றனர்.

 

இதையடுத்து, ‘ஜெய் பீம்’ படத்தில் வன்னியர் சமூகத்தைத் தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி வன்னியர் சங்கம் சார்பில் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் பாமக, பாஜக கட்சிகள் ‘ஜெய் பீம்’ படத்திற்கு எதிராக குரல் கொடுத்துவருகின்றன. இதனைக் கண்டித்து சூர்யாவுக்கு ஆதரவாகப் பலர் அறிக்கை வெளியிட்டுவருகின்றனர். அந்த வகையில், சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாமக, பாஜக கட்சிகளுக்கு எதிராகப் பதிவிட்டுவருகின்றனர். அதிலும் பாமக கட்சியின் மாவட்டச் செயலாளர் ஒருவர் நடிகர் சூர்யாவை மிதித்தால் ஒரு லட்சம் ரூபாய் பணம் பரிசு என செய்தியாளர்கள் சந்திப்பில் வெளிப்படுத்தியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

 

jai bhim issue - Seaman interview!

 

இந்நிலையில், இன்று (18.11.2021) கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் நினைவுநாளுக்கான நினைவேந்தல் விழாவில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ‘ஜெய் பீம்’ சர்ச்சை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த சீமான், ''அதை தவிர்த்திருக்கலாம். இந்தப் பிரச்சனை வெளியானவுடனே அந்த புகைப்படம் நீக்கப்பட்டு லட்சுமி உள்ள காலெண்டரை வைத்துவிட்டனர். இதை தொடக்கத்திலேயே செய்திருக்கலாம் என்பதுதான் எனது கருத்து. ஒரு சமுதாய மக்களின் வலியை வெளிப்படுத்தும்போது மற்ற சமுதாயத்திற்கு வேதனையை ஏற்படுத்திவிடக்கூடாது என்பது என் கருத்து. சூர்யாவை தாக்குவது, தரக்குறைவாகப் பேசுவது அநாகரிகமானது. அந்த மாதிரியெல்லாம் பதிவிடக் கூடாது. எனக்குத் தெரிந்து இதில் சூர்யாவிற்கு சம்பந்தம் இருக்காது. அவர் கதை கேட்டிருப்பார், நடித்திருப்பார். ஆனால் பின்புலத்தில் என்ன இருக்கிறது என்பது கலை இயக்குநர், இயக்குநர், ஒளிப்பதிவாளர் இவர்கள்தான் பார்ப்பார்கள். அவருக்குத் தெரிந்து இதைச் செய்திருப்பாரா என்ன...? சூர்யாவை மட்டுமல்ல அவரது குடும்பத்தினரையே எனக்கு நன்று தெரியும். சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் எந்தப் பிரச்சனைக்கும் தீர்வுகாண நினைப்பார்களே தவிர, புதியதாக ஒரு பிரச்சனையை வளர்க்க வேண்டும் என எப்பொழுதுமே நினைக்க மாட்டார்கள். அவர்கள் உண்டு அவர்கள் வேலை உண்டு என்று இருப்பார்கள். தேவையில்லாமல் அவர்களை மிதியுங்கள் உதையுங்கள் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. சூர்யாவை உதைக்கச் சொன்னவரை வேண்டுமானால் உதைங்க, நான் காசு தருகிறேன்'' என்றார்.

 

''அந்தக் காலெண்டரை நீக்கியதில் லட்சுமி படம் உள்ள காலெண்டரை வைத்தீர்கள். ஏன் இயேசு உள்ள காலெண்டரை வைக்கலாமே என  பாஜகவை சேர்ந்த ஹெச். ராஜா விமர்சித்துள்ளார்'' எனச் செய்தியாளர் கேள்வி எழுப்ப, அதற்குப் பதிலளித்த சீமான்,

 

“அவர்களுக்கு சாதி, மதம் இரண்டும் இரண்டு கண். மதத்தின் வேர் சாதியில்தான் உள்ளது. அவங்களுக்கு சாதி இருந்தால்தான் அவர்களுக்கு அரசியல். எனவே அவர் அப்படித்தான் பேசுவார். அவருக்கு சாதி வேணும், எங்களுக்கு சாதி வேண்டாம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்