Skip to main content

’இடமில்லையா? அரசின் பதில் பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது’ - சீமான்

Published on 28/09/2018 | Edited on 28/09/2018
seeman

 

கோயில் சிலைகளை மீட்கும் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவினரின் முயற்சிக்கு தமிழக அரசு முட்டுக்கட்டைப் போடுவதா? நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது குறித்த அவரது அறிக்கை:

’’கோயில் சிலைகளை மீட்கும் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவினரின் முயற்சிக்கு தமிழக அரசு முட்டுக்கட்டைப் போடுவதற்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பொன்.மாணிக்கவேல் அவர்கள் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவினர் கோயில்களில் திருடப்பட்ட பழங்காலத்து சிலைகளை மீட்டெடுக்கும் பணியினைச் சிறப்பாகச் செய்து வருவது பாராட்டுக்குரியது. அதிலும் 60 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சைப் பெரிய கோயிலில் காணாமல் போன பல நூறு ஆண்டுகள் பழமையான இராஜராஜசோழன், உலகமாதேவியின் சிலைகள் மீட்கப்பட்டது அக்குழுவினரின் குறிப்பிடத்தக்க சாதனை.

 

இந்நிலையில் சிலைக்கடத்தல் பேர்வழி தீனதயாளன் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்னை, சைதாப்பேட்டையிலுள்ள ரன்பீர் ஷா என்பவரது வீட்டில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவினரால் சோதனையிடப்பட்டுச் சிலைகள், கோயில் தூண்கள் என 89 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் பொருளாதார மதிப்பு ஏறத்தாழ 100 கோடி எனக் கூறப்படுகிறது. மீட்கப்பட்ட இவ்வளவு கோடி மதிப்பு வாய்ந்த இச்சிலைகளை அரசு அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு இடமில்லை என்றும், சிலைகளை எடுத்துச்செல்ல அரசு சார்பாக எந்தப் பொருளாதார உதவியும் செய்யப்படமாட்டாது எனவும் தமிழக அரசுத் தரப்பில் கூறப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது.

 

மீட்கப்பட்ட சிலைகளை வைப்பதற்குக்கூடத் தமிழக அருங்காட்சியகத்தில் இடமில்லையென்றால் சிலைகள் மீட்கப்படும் என்கிற நம்பிக்கை அரசிடம் இல்லையா? அவ்வாறு மீட்கப்படும் சிலைகளை எங்குப் பாதுகாத்து வைப்பது என்பது குறித்தான ஒரு தொலைநோக்கும், திட்டமிடலும்கூட இல்லையென்றால் இவ்விவகாரத்தில் அரசினுடைய அக்கறையும், நிர்வாக மேலாண்மையும் இந்தத் தரத்தில்தான் இருக்கிறதா? இவ்வளவு பெரிய நிர்வாகக் கட்டமைப்பையும், பல்வேறு துறைகளையும் உள்ளடக்கியத் தமிழக அரசால் இதற்கு ஒரு மாற்றிடத்தை ஒதுக்கித் தர முடியாதா? மக்கள் பணத்தைக் கோடிக்கணக்கில் வீணாக விழாக்களில் விரயம் செய்யும் அரசு, சிலையை எடுத்து செல்லப் பணமில்லை என்பது எந்தவகையில் ஏற்புடையது? தங்கள் சொந்த பணத்தைப் போட்டு சிலையை எடுத்துச்செல்லும் சிலைக்கடத்தல் பிரிவு அதிகாரிகளுக்கு இருக்கும் அக்கறை, ஆட்சியாளர்களுக்கு இல்லாமல் போனது ஏன்? அரசின் இந்தப் புறக்கணிப்பு கடத்தல்காரர்களுக்கு மேலும் ஊக்கம் தராதா?

 

இவ்வழக்கைத் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவிடமிருந்து மத்திய புலனாய்வு பிரிவுக்கு மாற்றக்கோரி அரசியல் செய்த தமிழக அரசு, மீட்கப்பட்டச் சிலைகளை வைப்பதற்குரிய அறைகளைக் கட்டாமல் இழுத்தடித்து வந்தததோடு, இப்பிரிவின் அதிகாரிகளைத் தான்தோன்றித்தனமாக மாற்றியும் வந்தது. தற்போது அதன் நீட்சியாகவே மீட்கப்பட்டச் சிலைகளை வைப்பதற்கு அருங்காட்சியகத்தில் இடமில்லை என அறிவித்திருக்கிறது. இவைகளெல்லாம் சிலைக்கடத்தல்காரர்களைக் காப்பாற்றும் அரசின் நேரடி நடவடிக்கையே!

 

இவ்வாறு தொடக்கம் முதலே சிலைகளை மீட்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டைப் போடுகிற தமிழக அரசின் போக்கு வன்மையானக் கண்டனத்திற்குரியது. இதனை உடனடியாக மாற்றிக்கொண்டு பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, அவர்களுக்குரிய வசதிகளைச் செய்துதர வேண்டு மெனவும், மீட்கப்பட்ட சிலைகளை வைப்பதற்குரிய இடங்களை ஒதுக்கித் தர வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.’’


 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்