Skip to main content

“இழப்பீடு உயர்த்தி வழங்கப்படுவதுதான் நியாயமானதாக இருக்கும்..” - ராமதாஸ்

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

"It is only fair that compensation be raised." - Ramadoss

 

வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் அதி கனமழை பெய்துவருகிறது. கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் வீடுகளும், வயல்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்த நவம்பர் மாத துவக்கத்தில் பெய்த கனமழையினால், ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வுசெய்ய தமிழ்நாடு அரசு அமைச்சர்கள் குழு அமைத்தது. மேலும், மத்திய குழுவும் தமிழ்நாட்டில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டுச் சென்றது. அதேவேளையில், தமிழ்நாடு அரசு பாதிப்புக்குள்ளான விளைநிலங்களுக்கு நிவாரணத் தொகையை அறிவித்தது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு அறிவித்த நிவாரண தொகை போதமானதல்ல; தற்போது கூடுதல் மழை பெய்து சேதங்கள் அதிகமாகியுள்ளன. அதனால், கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் தொடர்மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்குத்  தமிழக அரசு அறிவித்த இழப்பீடு போதுமானதல்ல என்று உழவர்கள் கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையால் கூடுதல் பரப்பிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன. ஏற்கனவே கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிய உழவர்களுக்கு இது மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்கள் கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத கனமழையை எதிர்கொண்டுவருகின்றன. சென்னையிலும், கடலூர் மற்றும் அதையொட்டிய பகுதிகளிலும் நவம்பர் மாதத்தில் மட்டும் 1000 மில்லி மீட்டருக்கும் கூடுதலான மழை பொழிந்துள்ளது. காவிரி டெல்டாவிலும் பருவ மழையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. கடந்த 15ஆம் தேதிவரை பெய்த மழையில் மட்டும் காவிரி பாசன மாவட்டங்களில் சுமார் 68,000 ஹெக்டேர் பரப்பளவில், அதாவது 1.70 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் சேதமடைந்ததாக அப்பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் குழு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் அறிக்கை அளித்திருந்தது.

 

பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீடும் வழங்கப்படாத நிலையில், கடந்த ஒருவாரமாக பெய்துவரும் மழையில் இன்னும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. காவிரி பாசன மாவட்டங்களில்  தொடங்கி கடலூர், விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களிலும் பல லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டன.

 

கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நீர்நிலைகள் நிரம்பியதால் திறந்துவிடப்பட்ட தண்ணீரும், நீர்நிலைகளின் கரைகள் உடைந்ததால் பெருக்கெடுத்த தண்ணீரும் பயிர்களை மூழ்கடித்துவிட்டன. இம்மாதத் தொடக்கத்தில் பெய்த மழையில் ஓரளவு பாதிக்கப்பட்டு, காப்பாற்றிவிட முடியும் என்ற நிலையில் இருந்த பயிர்களும் கூட இப்போது பெய்த மழையில் முற்றிலுமாக அழுகி சேதமடைந்துவிட்டன. இடைப்பட்ட காலத்தில் புதிதாக பயிரிடப்பட்ட சம்பா பயிர்களும் கூட வெள்ள நீரில் மூழ்கிவிட்டன. அந்தப் பயிர்களை இனி காப்பாற்ற முடியாது என்பதால் உழவர்கள் துயரத்தில் மூழ்கியுள்ளனர்.

 

தமிழ்நாட்டிலுள்ள உழவர்களால் முதன்மையாக சாகுபடி செய்யப்படும் பருவம் சம்பா பருவம்தான். கடந்த ஆண்டு பருவம் தவறி ஜனவரி மாதம்வரை பெய்த மழையால் சம்பா நெற்பயிர்களும், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஓரளவு இழப்பீடு வழங்கப்பட்ட போதிலும் அது உழவர்களின் பாதிப்பை முழுமையாக போக்கவில்லை. நடப்பு சம்பா பருவ நெற்பயிர்களை வெற்றிகரமாக அறுவடை செய்தால்தான் கடந்த ஆண்டு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய முடியும் என்று உழவர்கள் நம்பிக்கொண்டிருந்த வேளையில் அடுத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

எனவே, காவிரி பாசன மாவட்டங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் மழையால் பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தமிழக அரசு மீண்டும் ஆய்வும், கணக்கெடுப்பும் மேற்கொள்ள வேண்டும். அதன்படி எவ்வளவு ஏக்கரில் நெற்பயிர்களும், பிற பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன என்பதைத் தீர்மானித்து உழவர்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

 

அதேபோல், சேதமடைந்த நெற்பயிர்கள் அறுவடை செய்யும் நிலையில் இருந்தால் அவற்றுக்கு ஏக்கருக்கு ரூ. 8000 இழப்பீடும், சம்பா பயிர்களை மறுநடவு செய்வதற்காக ரூ. 2415 மதிப்புள்ள விதை மற்றும் உரங்களும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது போதுமானதல்ல. நெல் சாகுபடிக்கான செலவுகள் கணிசமாக அதிகரித்துவிட்ட நிலையில், அதற்கேற்ற அளவில் இழப்பீடு உயர்த்தி வழங்கப்படுவதுதான் நியாயமானதாக இருக்கும். எனவே, மழையில் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30,000 வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'திமுக காங்கிரஸ் ஆட்சிக்கால சாதனை பட்டியலைச் சொல்லவா?'-தீவிர  பரப்புரையில் மு.க.ஸ்டாலின் 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'kalaingar himself calls him Balam Balu'- M.K.Stalin in intense lobbying

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத்  தீவிரபடுத்தியுள்ளன.

இந்நிலையில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''பாஜக எதிர்ப்பில் இபிஎஸ் உறுதியாக இல்லை. எடப்பாடி பழனிச்சமியால் பாஜகவை ஒருபோதும் எதிர்க்க முடியாது. இந்தியா கூட்டணிக்கான ஆதரவு அலை இந்தியா முழுவதும் வீசுகிறது. மக்களோடு இருந்து மக்களுக்காக பணியாற்றக் கூடியவர்கள் என்ற நம்பிக்கை எழந்துள்ளது. திமுக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒன்றியத்தில் எத்தனை சாதனைகளை செய்திருக்கிறோம் பெரிய பட்டியலே இருக்கிறது.

உதாரணத்திற்கு நம்ம டி.ஆர்.பாலு, மூன்று துறைகளில் ஒன்றியத்தில் அமைச்சராக இருந்த பொழுது செஞ்ச சாதனைகளை மட்டும் சொல்லவா? ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த பொழுது தமிழ்நாட்டுக்கு மட்டும் 22,78 கோடி ரூபாய் மதிப்பிலான 15 பெரிய திட்டங்களைக் கொண்டு வந்தார். சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சராக தேசிய பல்கலைக்கழக உயிரின வளங்கள் ஆணையத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தார். கப்பல் தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையில் இருந்த பொழுது 56,644 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தமிழகத்திற்கு கொண்டு வந்தார். இது மட்டுமா கிண்டி கத்திப்பாரா  மேம்பாலம், மாடி பாலம், தமிழ்நாட்டு தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமே 335 பாலங்களைக் கட்டி சாதனை பண்ணி இருக்கிறார். அதனால்தான் கலைஞரே பாலம் பாலு என்று அழைத்தார். இதேபோன்ற சாதனைகளை செய்வதற்காகவே ஒன்றியத்தில் நமது கூட்டணி ஆட்சியில் இருக்கும். அதற்காகத்தான் இந்த எலக்சனின் ஹீரோவாக தேர்தல் அறிக்கையை திமுகவும் காங்கிசும் வெளியிட்டு இருக்கிறோம். திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள சமூக நீதி அம்சங்கள் காங்கிரஸ் கட்சியினுடைய தேர்தல் அறிக்கையில் எதிரொலித்திருக்கிறது'' என்றார்.

Next Story

''உங்கள் மைண்ட் வாய்ஸ் என்னவென்று நல்லா கேட்கிறது''- உறுதியளித்த உதயநிதி 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 ``What is your mind voice asking?''-Udhayanithi assured

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அதன்படி, அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் பொள்ளாச்சியில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி அவர் பேசுவையில், ''நமது முதலமைச்சர் இந்தியாவிற்கே அறிமுகப்படுத்திய திட்டம் காலை உணவு திட்டம். காலையில் எழுந்து நீங்கள் சீக்கிரம் வேலைக்கு போய் விடுவீர்கள். குழந்தைக்கு சாப்பாடு ஊட்ட நேரம் இருக்காது. மதிய உணவு திட்டத்தில் சாப்பிட்டுக்கொள் எனச் சொல்லி அனுப்பிவிடுவீர்கள். ஆனால் உங்களுக்கு நினைவெல்லாம் குழந்தையைப் பசியோடு அனுப்பி வைத்தோமே சாப்பிட்டார்களோ இல்லையோ, பசி மயக்கத்தில் இருப்பார்களே, பள்ளிக்கூடத்திற்கு போனார்களா, தூங்கி விட்டார்களா? என்றெல்லாம் நினைப்பீர்கள். ஆனால் முதல்வர் அதற்காக கொண்டு வந்த திட்டம் தான் முதலமைச்சருடைய காலை உணவு திட்டம். இந்தத் திட்டத்தின் மூலமாக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய 31 லட்சம் மாணவர்கள் தினமும் காலை முதலமைச்சர் காலை உணவு திட்டத்தில் பயன்பெறுகிறார்கள். இந்த மாவட்டத்தில் மட்டும் 80 ஆயிரம் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் முதல்வர் காலை உணவு திட்டத்தின் மூலம் பயன் பெறுகிறார்கள்.

பெற்றோர்கள் குழந்தைகளை நிம்மதியாக அனுப்புகிறீர்கள் 'என் பையனை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினால் போதும் அவனுக்கு காலையில் தரமான உணவு கொடுத்து கல்வியைக் கொடுப்பார்கள். திராவிட மாடல் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும்' எனத் தைரியமாக அனுப்புகிறீர்கள். இதற்குப் பெயர்தான் அம்மா திராவிட மாடல் அரசு. இந்தத் திட்டத்தையும் சிறப்பான திட்டம் என்று சொல்லி தெலுங்கானா, கர்நாடக மாநில அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டு சென்றுள்ளார்கள். அவர்களுடைய மாநிலத்தில் விரிவுபடுத்துவதற்கு. இங்க மட்டும் அல்ல கனடா நாடு தெரியுமா... அமெரிக்கா பக்கத்தில் இருக்கின்ற கனடா நாடு, பணக்கார நாடு. அந்த நாட்டின் பிரதம மந்திரி பெயர் ஜஸ்டின். அவர்  ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார் 'உலகத்திலே மிகச் சிறந்த திட்டம் முதலமைச்சர் காலை உணவு திட்டம் தான். பள்ளி குழந்தைகளைப் பள்ளிக்கூடத்திற்கு வர வைப்பதற்கு இதை விட சிறப்பான திட்டம் எங்குமே இல்லை' என்று சொல்லி கனடா நாட்டில் காலை உணவு திட்டத்தை அமல்படுத்தி உள்ளார்கள். இதற்கு பெயர்தான் அம்மா திராவிட மாடல் அரசு.

அடுத்து நீங்கள் என்ன கேட்கப் போகிறீர்கள் என்று தெரியும். மகளிர் எல்லாம் வந்திருக்கிறீர்கள் உங்கள் மைண்ட் வாய்ஸ் என்னவென்று நல்லா கேட்கிறது. அதுதான் இன்று தேதி 16. கலைஞர் உரிமைத் தொகை திட்டம் தேர்தல் 2021 தேர்தலில் முதல்வர் வாக்குறுதி அளித்தார். தகுதிவாய்ந்த இல்லத்தரசிகள் அத்தனை பேருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று சொன்னோம். கடும் நிதி நெருக்கடி. ஒன்றிய அரசு நமக்கு காசு தரவே மாட்டேன் என்கிறார்கள். இருந்தாலும் தமிழக முதல்வர் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளில் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க சொன்னார். விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா? ஒரு கோடியே அறுபது லட்சம் பேர். அதில் சரி பார்த்து வெரிஃபிகேஷன் செய்து ஒரு கோடியே 18 லட்சம் மகளிர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் இப்பொழுது வரை போய்க்கொண்டிருக்கிறது. சில இடங்களில் குறை இருக்கிறது. எனக்கு வரவில்லை, பக்கத்து வீட்டு பொண்ணுக்கு வந்துவிட்டது. எதிர் வீட்டு பெண்ணுக்கு வந்து விட்டது எனக் குறைகள் இருக்கிறது. அது சரி செய்யப்படும். தேர்தல் நேரம் நானும் நிதியமைச்சரும் தான் அதற்கு பொறுப்பு. கண்டிப்பாக இன்னும் 5 மாதங்களில் நிச்சயம் தகுதி வாய்ந்த இல்லத்தரசிகள் அத்தனை பேருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் நிச்சயம் கொடுப்பார். ஒரு கோடியே 18 லட்சம் பேருக்கு மகளிர் உதவி தொகைத்கொடுக்க மனசுள்ள முதலமைச்சர் இன்னும் ஒரு 40 லட்சம் மகளிருக்கு கொடுக்க மாட்டாரா?'' என்றார்.