கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் முன்பு நேற்று நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் தனியார் பள்ளியின் உடைமைகள் அடித்து நொறுக்கப்பட்டது. அதேபோல் காவல்துறை வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. பல மணி நேரம் போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை எனவும், தற்போது நடைபெற்றுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை தகவல்களில் தெளிவு இல்லை என்பதால் இரண்டாவது முறை மாணவியின் உடலை உடற்கூறாய்வு செய்ய வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.
நேற்று பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்பொழுது பேசிய வானதி சீனிவாசன், ''தமிழகத்தில் இம்மாதிரியான சம்பவங்கள் நடைபெறுவது முதல் தடவை இல்லை. இதற்கு முன்பாகவும் இதே மாதிரி பல்வேறு முறை லாக்கப் மரணங்கள் ஆகட்டும் அல்லது பெண் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் இது மாதிரி பல்வேறு விஷயங்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது.
திமுக எதிர்க்கட்சியாக இருந்த பொழுது இம்மாதிரியான விஷயங்களில் எப்படி நடந்து கொண்டார்கள் என தெரியும். இப்போது அவர்கள் ஆட்சிக்கு வந்ததற்கு பின்பாக முழுமையாக தமிழகத்தினுடைய காவல்துறை அவர்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறதா இல்லையா என்று தெரியாத அளவிற்கு இன்று நிலைமை இருக்கிறது. ஒரு சாதாரண விசாரணைகளுக்குக் கூட இன்றைக்கு பொதுமக்கள் காவல் நிலையங்களை அணுகுவதற்கு யோசிக்கக் கூடிய சூழல்தான் தமிழகத்தினுடைய சூழலாக மாறிக்கொண்டிருக்கிறது'' என்றார்.