தி.மு.க. தலைமை மீது ஆயிரம் விளக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க. செல்வம் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாகவும் தகவல் வந்த நிலையில், நேற்று டெல்லியில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனுடன் பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.
அதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க நிர்வாகிகளுடன் அவசர ஆலோனையில் ஈடுபட்டார். ஆலோசனைக்கு பிறகு, ''தி.மு.க தலைமை நிலைய அலுவலக செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் கு.க.செல்வம், அவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து இன்று முதல் (05.08.2020) விடுவிக்கப்படுகிறார்'' என தி.மு.க தலைமை அறிவித்தது.
அதேபோல் நேற்று அயோத்தியில் ராமஜென்ம பூமி பூஜை விழா நடைபெற்றதை ஒட்டி தமிழக பா.ஜ.க அலுவலகமான கமலாலயத்தில் ராமர் படம் திறக்கப்பட்டது. திடீரென கமலாலயத்திற்கு தி.மு.க எம்.எல்.ஏ. கு.க.செல்வம் வருகை தந்து பா.ஜ.க. அலுவலகத்தில் திறக்கப்பட்ட ராமர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தி.மு.கவை விட்டு என்னை நீக்கினாலும் கவலை இல்லை” என தெரிவித்திருந்தார்.
அவருக்கு தி.மு.க மீது அதிருப்தி ஏற்பட, மாவட்ட செயலாளர் பதவி வழங்காததே காரணம் என கூறப்பட்ட நிலையில், தற்பொழுது தி.மு.கவில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் தெரிவித்துள்ளார். தி.மு.கவில் வளர்ச்சி இல்லை என்ற காரணத்தினால் விலக முடிவு செய்தேன். தி.மு.கவில் இருக்க பிடிக்கவில்லை என்பதால் பொறுப்பை நீக்கி கொள்ளுங்கள் என கூறிவிட்டேன். வயதாகிவிட்டது, உடல் நிலை சரி இல்லை, பணம் இல்லை என தி.மு.க.வில் என்னை ஒதுக்கினார்கள். மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்காதது காரணமல்ல, குடும்ப அரசியல் காரணமாகவே விலகுகிறேன் என தெரிவித்துள்ளார்.