ஆக்கிரமிப்புகள் தொடர்பான தனி நபர் புகார்களைப் பொதுநல வழக்காகக் கருத முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசு நிலம் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி சண்முகம் என்பவர் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘அரசு நிலத்தை ஆக்கிரமிப்பதற்கு அனுமதிக்க முடியாது. அனுமதியின்றி கட்டுமானங்கள் மேற்கொள்வதை எதிர்த்த தனி நபர்களின் புகார்களைப் பொதுநல வழக்காகக் கருத முடியாது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளிக்க வேண்டும். அந்தப் புகார்களை சட்டப்படி பரிசீலித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தனிப்பட்ட முறையில் வழக்கு தொடரலாம். ஆனால், பொதுநல வழக்காக தொடர முடியாது.
இந்த வழக்கைப் பொறுத்தவரை, சட்டவிதிகளைப் பின்பற்றி மனுதாரரின் மனுவைப் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்’ என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ‘தனி நபர் புகார்கள் தொடர்பான வழக்குகளைப் பொதுநல வழக்காக விசாரணைக்கு எடுக்கக் கூடாது’ எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.