Skip to main content

சிதம்பரம் அரசு கலைக் கல்லூரி வழியாக பேருந்துகள் இயக்க இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை

Published on 23/09/2022 | Edited on 23/09/2022

 

Indian Students Union demand to run buses through Chidambaram Government Arts College

 

சிதம்பரம் அருகே சி.முட்லூர் கிராமத்தில் சிதம்பரம் அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் இருவேளை பாடப்பிரிவுகளாக சிதம்பரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலிருந்து மாணவர்கள் 3500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். சிதம்பரம் மார்க்கத்தில் இருந்து கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பிச்சாவரம் செல்லும் பேருந்தில் ஏறி மண்டபம் என்ற நிறுத்தத்தில் இறங்க வேண்டும். பின்னர் அங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரம் கல்லூரிக்கு நடந்து செல்ல வேண்டும். அதேபோல் கடலூர் மார்க்கத்திலிருந்து வரும் மாணவர்கள் தீத்தாம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி 2.5 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லும் அவல நிலை உள்ளது.

 

கல்லூரி நேரத்தின் போது சரியான பேருந்து இல்லாததால் மாணவர்கள் கல்லூரிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. மாணவர்கள் கல்லூரி நேரத்தின் போதும், கல்லூரி நேரம் முடிந்தும் சாலையின் இரு புறங்களிலும் நடந்து செல்வதை பார்க்க முடிகிறது. இது புறவழிச்சாலை என்பதால் அடிக்கடி விபத்தில் சிக்கி மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிலர் உயிரிழந்தும் உள்ளனர். கல்லூரி நேரத்திற்கு அரசு பேருந்து இல்லாததால் ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் மாணவர் மத்தியில் புகார் கூறப்படுகிறது.

 

மாணவர்கள் பல ஆண்டுகளாக  கல்லூரி வழியாக பேருந்துகளை இயக்க வேண்டும் என பல்வேறு கட்ட போராட்டத்தை இந்திய மாணவர் சங்கம் தலைமையில் முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் இதற்கு சரியான நிரந்தர தீர்வு ஏற்படுத்தவில்லை என மாணவர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

 

இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் லெனின் கூறுகையில், ''கல்லூரி நேரத்திற்கும், கல்லூரி நேரம் முடிந்து மாணவர்கள் செல்லும் வகையில் பேருந்துகளை இயக்க வேண்டும் என பல போராட்டங்களை நடத்தியுள்ளதாகவும்.  கடந்த 2  நாட்களுக்கு முன்பும் கல்லூரி நேரத்தின்போது பேருந்து இயக்க வேண்டும் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் விளைவாக அன்று ஒருநாள் மட்டும்  8 பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக இயக்கப்பட்டது. ஆனால் அடுத்த நாளிலிருந்து பேருந்துகள் வரவில்லை.  இதனால் மாணவ மாணவிகள் கல்லூரி நேரம் முடிந்தும் கல்லூரிக்கு வரும்போதும் மிகவும் அவதி அடைகிறார்கள்.

 

மேலும்  அதிக வெயில் காரணமாக நடந்து செல்வதில் மாணவ மாணவிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. சிலர் நடந்து செல்லும்போது மாணவிகளை கிண்டல் செய்வதால் தேவையில்லாத பிரச்சனை ஏற்படுகிறது.  எனவே கடலூர், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பேருந்துகளில் சிலவற்றை கல்லூரி வழியாக இயக்க வேண்டும். அப்படி இயக்கினால் கல்லூரி வழியாக பேருந்து சென்றால் மாணவர்கள் கல்லூரிக்கு வந்து செல்வதில் சிரமம் இருக்காது. எனவே அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

சித்ரா பௌர்ணமி; அரசு போக்குவரத்துக் கழகம் முக்கியத் தகவல்! 

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Chitira Poornami Govt Transport Corporation Important Information

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “23.04.2024 (செவ்வாய் கிழமை) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 22/04/2024 அன்று 527 பேருந்துகளும் மற்றும் 23/04/2024 அன்று 628 பேருந்துகளும்  இயக்கப்பட உள்ளன.

மேலும் சென்னை மாதவரத்திலிருந்து 22/04/2024 அன்று 30 பேருந்துகளும் 23/04/2024 அன்று 30 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். அதே போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 அன்று 910 பேருந்துகளும் 23/04/2024 அன்று 910 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.