Skip to main content

இந்தியாவிலேயே தலைசிறந்த கூட்டுறவு கல்லூரி இங்குதான் உருவாகிறது - அமைச்சர் ஐ. பெரியசாமி

Published on 07/12/2022 | Edited on 07/12/2022

 

india greatest cooperative college  i periyasamy

 

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 75 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டும் பணிக்கு இன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் விசாகன் தலைமை தாங்கினார். விழாவில்  கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கி வைத்தார்.

 

விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, "தமிழக முதல்வர் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் அந்த திட்டங்களின் பயன்கள் அனைத்து மக்களையும் சென்றடையும் வகையில்,செயல்பட்டு வருகிறார். கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

 

தமிழகத்தில் கிராமப் பகுதிகளில் புதிதாக அரசுக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அரசுக் கல்லூரிகளில் கட்டணம் மிகவும் குறைவுதான். திண்டுக்கல் மாவட்டத்தில் கல்வி மேம்பாட்டுக்காக புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் ஓராண்டில் உயர் கல்வி மேம்பாட்டிற்காக 4 கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளன. மேலும்,  பழனியில் ஒரு சித்த மருத்துவக்கல்லூரி, கொடைக்கானலில் ஒரு கூட்டுறவு பயிற்சி மையம் என 6 கல்வி நிறுவனங்கள் தொடங்க அனுமதி பெறப்பட்டு, கல்லூரிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

 

ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சீவல்சரகு ஊராட்சியில் உள்ள சுதநாயகிபுரத்தில், கூட்டுறவுத்துறை சார்பில் ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதே போல், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரெட்டியார் சத்திரத்தில் உயர்கல்வித்துறை சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரிக்கும்  விரைவில் புதிய கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கப்படும்.

 

கிராமப் பகுதிகள் சூழ்ந்த பின்தங்கிய பகுதியில் தற்போது அரசுக் கல்லூரிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதி மாணவர்கள் உயர்கல்வி பெற சிறந்த வாய்ப்பாக இது அமைந்துள்ளது. எளிய மக்கள், விவசாயிகளின் குழந்தைகள் உயர்கல்வி பெற வேண்டும், நிதி பற்றாக்குறையால் அவர்களின் கல்லூரி கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதே இந்த அரசின் லட்சியம். தேவைக்கேற்ப இன்னும் பல கல்லூரிகள் தொடங்கப்படும். ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் விரைவில் 100 படுக்கைகளுடன் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்கப்பட உள்ளன.

 

முதல்வர், கூட்டுறவுத்துறையில் ஒரு பொற்காலத்தை ஏற்படுத்தியுள்ளார். மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். இந்தியாவில் கூட்டுறவு வங்கிகள் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கூட்டுறவுத்துறையில் யூரியா, டிஏபி, பொட்டாஷ் போன்ற உரங்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

கூட்டுறவு கடன் அதிகளவில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ரூ.10,000 கோடி அளவுக்கு கடன் வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டில்  தற்போதுவரை ரூ.8,300 கோடி கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் 3 மாத காலத்திற்குள் கடந்த ஆண்டை விடக் கூடுதலாகக் கடன் உதவிகள் வழங்கப்படும். கூட்டுறவுத்துறையில் 6,500 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளன. வெளிப்படைத்தன்மையுடன் இந்தப் பணி நியமனம் நடைபெறும். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 ஊராட்சிகளும் சீரான வளர்ச்சி அடைய வேண்டும். தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் திண்டுக்கல் மாவட்ட மக்களுக்குக் கிடைக்கச் செய்யும் வகையில் உறுதுணையாக இருப்பேன். இங்கு அமையப்போகும் இந்தக் கூட்டுறவு கல்லூரி இந்தியாவில் தலைசிறந்த கூட்டுறவு கல்லூரியாக உருவாகப் போகிறது" என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும்” -அமைச்சர் ஐ.பெரியசாமி!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை வாக்குப்பதிவு ஓரளவுக்கு நடந்து வருகிறது. காலை ஏழு மணிக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கள்ளிமந்தையத்தில்  தனது வாக்கை பதிவு செய்தார். அதுபோல் சி.பி.எம் வேட்பாளர் சச்சிதானந்தம் ராமலிங்கம்பட்டியில் தனது ஓட்டை பதிவு செய்தார்.

அதைத் தொடர்ந்து தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மனைவி சுசிலாவுடன் உடன் திண்டுக்கல் கோவிந்தாபுரம் ஸ்ரீவாசவி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

அதன் பின் பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது, “இந்தியா கூட்டணி 350க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி  மத்தியில் ஆட்சி அமைக்கும். வட மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிர்ப்பு அலைகள் அதிகமாக உள்ளது. 150க்கும் குறைவான இடங்களை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றும். எப்பொழுதும்  போலவே  குடும்பத்துடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்ற வந்துள்ளேன்” என்று கூறினார்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.