Skip to main content

'யார்க்கர்' நாயகன் நடராஜனுக்கு சொந்த ஊரில் கோலாகல வரவேற்பு; செண்டை மேளம் முழங்க சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்!

Published on 23/01/2021 | Edited on 23/01/2021

 

india cricket team player natarajan arrives native in salem district


ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு நாடு திரும்பிய இந்திய கிரிக்கெட் அணியின் இளம் புயல், ‘யார்க்கர் நாயகன்’ நடராஜனுக்கு, சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் கிராம மக்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். செண்டை மேளம் முழங்க, குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

 

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன். ஐபிஎல் தொடரில், சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடினார். அப்போது யார்க்கர் பந்துவீச்சு மூலம் எதிரணியைத் திணறடித்தார். அவருடைய பந்துவீச்சு, ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கவனத்தையும் பெரிதும் ஈர்த்தது.

 

இதையடுத்து, கடந்த நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணியில் நடராஜனுக்கும் முதன்முதலாக வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதுவும், வலைப்பயிற்சி பந்து வீச்சாளராக மட்டுமே இடம்பிடித்திருந்தார்.

 

இந்நிலையில், ஆடும் லெவன் அணியில் பும்ரா, முஹம்மது ஷமி ஆகியோர் அடுத்தடுத்து காயத்தால் அவதிப்பட டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் நடராஜனுக்கு பந்து வீசும் வாய்ப்பு கிடைத்தது.

india cricket team player natarajan arrives native in salem district

 

ஒரு நாள் தொடரை இந்தியா இழந்த நிலையில், டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது. அதில் யார்க்கர் நாயகன் நடராஜனின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. அதேபோல் கடைசி டெஸ்டிலும் நடராஜன் அசத்தலாக பந்து வீசி, இந்திய அணி தொடரை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

 

ஆஸியில் வரலாற்று வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்ததாக இங்கிலாந்து தொடருக்குத் தயாராகி வருகிறது. முன்னதாக ஆஸியில் இருந்து கிரிக்கெட் வீரர்கள் தாயகம் திரும்பினர். நடராஜன், ஜன. 21- ஆம் தேதி விமானம் மூலம் பெங்களூரு வந்து சேர்ந்தார். அங்கிருந்து காரில் சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு வந்தார்.

 

சேலம் - ஜலகண்டாபுரம் சாலையில் உள்ள சின்னப்பம்பட்டி சந்திப்புக்கு வந்தவுடன் நடராஜனுக்கு கிரிக்கெட் ரசிகர்கள், நண்பர்கள், உற்றார் உறவினர்கள், கிராம மக்கள் என அனைவுரும் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். நண்பர்கள் வழங்கிய தேசியக்கொடிக்கு முத்தமிட்டு வரவேற்பை ஏற்றுக்கொண்ட நடராஜன், கொடியை உயரே தூக்கிப்பிடித்து அனைவருக்கும் நன்றி செலுத்தினார்.

india cricket team player natarajan arrives native in salem district

 

சுமார் இரண்டு கி.மீ. தூரத்திற்கு செண்டை மேள வாத்தியங்கள் முழங்க, இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் அவரை ஊர்வலமாக அழைத்து வந்தனர். வழிநெடுகிலும் அவருக்கு மலர் தூவி வாழ்த்து தெரிவித்தனர். தாயார் சாந்தா, தந்தை தங்கராஜ், மனைவி பவித்ரா, தம்பி சக்தி, தங்கைகள் திலகவதி, தமிழரசி, மேகலா, நண்பர் ஜெயபிரகாஷ் ஆகியோர் நடராஜனுக்கு ஆரத்தி எடுத்தனர்.

 

முன்னதாக, ரசிகர்களின் வாழ்த்துகளை ஏற்றுக்கொள்ளும் வகையில் வீடு அருகே நடராஜனுக்கு என தனி மேடை அமைக்கப்பட்டிருந்தது. கொரோனா தொற்று அச்சம் காரணமாக சுகாதாரத்துறையினர் மேடைக்கு அனுமதி மறுத்தனர். இதையடுத்து, மேடை அகற்றப்பட்டது. மேலும், கூட்டம் கூடக் கூடாது என்றும் எச்சரித்தனர்.

 

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியதால் நடராஜன் 14 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினர். என்றாலும், சொந்த கிராம மக்கள் திரண்டு வந்து அதிகாரிகளிடம் அவருக்கு வரவேற்பு அளிக்க வேண்டும் என்று ஒரே குரலில் போராடியதால் வேறு வழியின்றி அதற்கு இசைவளித்தனர்.

india cricket team player natarajan arrives native in salem district

 

ஐபிஎல் தொடரில் விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில்தான், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நடராஜனின் மனைவி பவித்ராவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஐபிஎல் தொடர் முடிந்ததும், குழந்தையைக் கூட பார்க்க வராமல் நேராக ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுவிட்டார். அதனால் மூன்று மாதங்களுக்குப் பிறகு வியாழக்கிழமைதான் (ஜன. 21) குழந்தையைப் பார்த்து, முத்தமிட்டு, கொஞ்சி மகிழ்ந்தார் நடராஜன்.

 

குழந்தையின் பிஞ்சு கைகளால் பூங்கொத்து கொடுத்து நடராஜனை வரவேற்க பவித்ரா ஏற்பாடு செய்திருந்த நிலையில், நோய்த் தொற்று அபாயம் கருதி, அதற்கு அதிகாரிகள் தடை விதித்ததால் அவருடைய மனைவி ஏமாற்றம் அடைந்தார்.

 

நடராஜன் கூறுகையில், ''இவ்வளவு பெரிய வரவேற்பு அளிக்கப்படும் என கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. சொந்த ஊர்க்காரர்கள், நண்பர்கள், உறவினர்கள் எல்லோரும் சேர்ந்து வரவேற்றது ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது,'' என்றார்.

 

ஊடகத்தினர் அவரை பேட்டி எடுக்க முயன்றபோது, இந்திய கிரிக்கெட் வாரியம் பேட்டி கொடுக்கக் கூடாது என்று தடை விதித்துள்ளதாக நடராஜன் தரப்பில் சொல்லப்பட்டது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

நடராஜன் ஒரு கடின உழைப்பாளி,மேட்ச்வின்னர்; புகழ்ந்து தள்ளிய இந்திய வேகம்!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 Natarajan is a hard worker, match winner; Praised by Indian pacer

நடராஜன் ஒரு கடின உழைப்பாளி, அவர் ஒரு மேட்ச்வின்னர் என்கிற பாராட்டைப் பெற்றுள்ளார் தமிழ்நாடு வேகப்பந்து வீச்சாளர் நடராஜன்.

ஐபிஎல் 2024இன் 35 ஆவது லீக் ஆட்டம் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி வழக்கம் போல அட்டகாசமாய் ஆரம்பித்தது. பந்துகளை சிக்சருக்கு அனுப்புவதை மட்டுமே எண்ணமாக வைத்து ஹெட் சிறப்பாக ஆடினார். 16 பந்துகளில் அரைசதம் கடந்தார். 

ஹெட்டின் அனுபவ பேட்டிங்கை தூக்கி சாப்ப்பிடும் அளவுக்கு அபிஷேக் ஷர்மாவின் பேட்டிங் இருந்தது. 12 பந்துகளில் 6 சிக்சர்கள், 2 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.பவர்பிளேயின் முதல் 6 ஓவர்களில் 125 ரன்கள் எடுத்து, பவர்பிளேயில் அதிக ரன்கள் எடுத்த அணி என்கிற கொல்கத்தா அணியின் சாதனையை முறியடித்தது. ஹெட் 32 பந்துகளில் 6 சிக்சர்கள் மற்றும் 11 பவுண்டரிகளுடன் 89 ரன்களில் ஆட்டமிழந்தார். நித்திஷ் ரெட்டி 37, ஷபாஸ் அகமது 59 என மிரட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் குவித்தது. டெல்லி அணி தரப்பில் குல்தீப் 4 விக்கெட்டுகளும், அக்சர், முகேஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் இமாலய இலக்கை எதிர்கொண்ட டெல்லி அணிக்கு தொடக்கம் சொதப்பினாலும், அந்த அணியின் ஜேக் ஃப்ரேசர் பேட்டில் இருந்து பட்டாசு சிதறுவது போல பவுண்டரிகளும், சிக்சர்களும் வெடித்து சிதறியது.18 பந்துகளில் 7 சிக்சர்கள் 5 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து அபிஷேக் பொரேல் 42, பண்ட் 41 தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 10 புள்ளிகளுடன் தரவரிசைப் பட்டியலில் 2 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

 Natarajan is a hard worker, match winner; Praised by Indian pacer

ஆட்டம் நிறைவடைந்த பின்பு மூத்த வீரர் புவனேஷ்வர் குமாரிடம் வெற்றி குறித்து கருத்து கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர் “இவ்வளவு ரன்களை நாங்கள் எடுத்து அதை எதிரணி துரத்தும் போது நாங்கள் அதிகமாக ரன்களை வாரி வழங்கினோம் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் எங்கள் திட்டங்களை செயல்படுத்த விரும்பினோம். நீங்கள் விக்கெட் எடுக்கத் தொடங்கி விட்டால் எல்லாம் சரியாக நடக்கும். நடாரஜன் யார்க்கர் வீசுவதில் வல்லவர் என்பது எங்களுக்கு தெரியும். அவர் அமைதியான ஒரு வீரர் மற்றும் கடின உழைப்பாளி. சொல்லப்போனால் நடராஜன் உண்மையில் ஒரு மேட்ச் வின்னர். ஐபிஎல் ஆரம்பித்து இத்தனை வருடங்களில் எங்கள் பேட்டிங் இந்த அளவு சிறப்பாக இருப்பது இதுதான் முதல்முறை. இப்போது எங்களுக்கு 200 முதல் 220 ரன்களே குறைவான் இலக்கு போலத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு எங்கள் பேட்டிங் யூனிட் உள்ளது. வலைப்பயிற்சியில் அபிஷேக் மற்றும் ஹெட்டின் பேட்டிங் பயிற்சியில் பந்து வீசியதின் மூலம் என்களை மெருகேற்றிக் கொண்டோம். பேட்டிங் உங்களுக்கு ஸ்பான்ஸர்ஷிப்பைப் பெற்றுத் தரும். பவுலிங் தான் உங்களுக்கு சாம்பியன்ஷிப்பைப் பெற்றுத் தரும்” என்றார்.