நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடுமுழுவதும் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளும் தீவிர படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பிலும் விழா கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மிக முக்கிய இடங்களான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், தலைமைச் செயலகம், சென்னை மாநகராட்சி கட்டிடம் உள்ளிட்ட கட்டிடங்கள் தேசியக் கொடியை நினைவுபடுத்தும் விதமாக மூவர்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் கொடியேற்ற வந்த முதல்வருக்கு காவலர்களின் சார்பில் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்னர் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
சுதந்திர போராட்டத்தில் தமிழக போராட்ட வீரர்களின் பங்கு குறித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் 18 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் குடும்ப ஓய்வூதியம் 9 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. சுதந்திரப் போராட்ட வீரர்களின் வழித் தோன்றல்களுக்கான சிறப்பு மாத ஓய்வூதியம் 9 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்படுகிறது. அதேபோல் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வால் 16 லட்சம் பேர் பயன்பெறுவர். அரசுக்கு ஆண்டிற்கு 1947.60 கோடி ரூபாய் இதனால் கூடுதல் செலவு ஏற்படும் என்றும் தெரிவித்தார்.