Skip to main content

“காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் வருகை அதிகரிப்பு”- தமிழக அரசு

Published on 12/11/2023 | Edited on 12/11/2023

 

“Increase in attendance due to breakfast program”- Tamil Nadu Govt

 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அரசுப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 1543 பள்ளிகளில் 1.14 லட்சம் மாணவர்களுக்கு இத்திட்டம் தொடங்கப்பட்டது. அடுத்த கட்டமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உள்ள 31,008 பள்ளிகளில் பயிலும் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் விரிவுபடுத்தினார்.

 

இந்நிலையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து சமூக நலத்துறை இயக்குநர் அமுதவல்லி கூறுகையில், “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் சென்னையில் உள்ள 358 பள்ளிகளில் படிக்கும் 65 ஆயிரத்து 30 மாணவர்கள் பயனடைகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள 30 ஆயிரத்து 995 அரசு பள்ளிகளில் படிக்கும் 18 லட்சத்து 53 ஆயிரத்து 595 மாணவர்கள் பயனடைகின்றனர். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது.

 

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் வேலைக்கு செல்லும் ஏழைப் பெண்கள் குழந்தைகளுக்கு காலை உணவு தயாரிக்கும் சுமையில் இருந்து விடுபட்டுள்ளனர். இந்த திட்டத்தை மேம்படுத்த தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம். ஒவ்வொரு மாவட்ட மற்றும் வட்டார அளவில் மூன்று நிலை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மாவட்ட ஆட்சியர்கள் குறைந்தபட்சம் 20 மையங்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குறைந்தபட்சம் 40 மையங்கள் வரை மாதந்தோறும் ஆய்வு செய்கின்றனர். தலைமை ஆசிரியருடன் மற்ற ஆசிரியர்களும் தினமும் காலை உணவை சுவைத்து அவற்றின் தரம் ருசியை ஆய்வு செய்கின்றனர். மேலும் இதுகுறித்து 1800 4258971 என்ற தொலைபேசி எண்ணில் வரும் குறைகளையும் புகார்களையும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான குழு விசாரித்து சரி செய்கின்றனர்” என தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்