Skip to main content

இருதரப்பினருக்கு இடையே மோதல்; அரிவாள் வெட்டு! - போலீஸ் குவிப்பு!

Published on 21/01/2021 | Edited on 22/01/2021

 

Incident in villupuram

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரினை ஒட்டி உள்ளது ரோஷனை. இந்தப் பகுதியைச் சேர்ந்த இயேசுவின் மகன் சந்துரு. அதே பகுதியைச் சேர்ந்த செந்தாமரையின் மகன் தியாகு. இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக நேற்று மதியத்தில் இருந்து மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

 

இதையடுத்து நேற்று இரவு சுமார் எட்டு மணி அளவில் செஞ்சி சாலையில் உள்ள அங்காளம்மன் கோவில் அருகே இருதரப்பினரும் கத்தி, அரிவாள், இரும்பு போன்ற பயங்கரமான ஆயுதங்களைக் கொண்டு மோதிக் கொண்டனர். இதில் சந்துரு, தியாகு மற்றும் ரோசனை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய 3 பேரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதில் மூவரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் 3 பேரையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சந்துரு, கார்த்தி ஆகிய இருவரையும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

தியாகு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த இருதரப்பினரின் கோஷ்டி மோதல் தொடர்பாக திண்டிவனம் டிஎஸ்பி கணேசன் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து ரோஷனை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு ஏகப்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். கோஷ்டி மோதல் தொடர்பாக ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதில் அரிவாள் வெட்டு போன்ற சம்பவங்கள் திண்டிவனம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.