Skip to main content

கரோனாவால் கடன் கட்டாததால் பைனான்சியர் மிரட்டல்... இளைஞர் தற்கொலை!

Published on 21/10/2020 | Edited on 21/10/2020
incident in vaniyampadi

 

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மாராபாபட்டு கிராமத்தை சேர்ந்த சிரஞ்சீவி (25) அக்டோபர் 21ந்தேதி சென்னை – பெங்களுரூ இடையிலான ரயில் பாதையில் வாணியம்பாடி நகரம் வழியாக செல்லும் பாதையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

இதுகுறித்து ரயில்வே போலீஸாருக்கு தகவல் சொல்லப்பட, ஜோலார்பேட்டை இரயில்வே காவல்துறையினர் தற்கொலை வழக்கு பதிவு செய்தனர். ஏன் தற்கொலை செய்துகொண்டார் என காவல்துறை விசாரணையில், குடியாத்தம் பகுதியை சேர்ந்த பைனான்சியர் ஒருவரிடம், தனது பெயரில் உள்ள வீட்டை அடகு வைத்து 2018 ஆம் ஆண்டு 1.25 லட்சம் கடன் வாங்கியுள்ளார். மாதம் 5 ஆயிரம் ரூபாய் வட்டி, 2500 ரூபாய் அசல் என மாதந்தோறும் 15ந்தேதி 7500 ரூபாய் கட்டிவந்துள்ளார். தேதி தவறினால் அதற்கு தனியாக வட்டி வசூலித்துள்ளார் அந்த பைனான்ஸ் பிரமுகர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கடன் தவணை கட்டி வந்தவர், கரோனா காலத்தில் கட்ட முடியாமல் தவித்துள்ளார்.

 

incident in vaniyampadi


இதுகுறித்து கடந்த இரண்டு மாதங்களாக பைனான்ஸ் பிரமுகர் ஒருமையில் பேசி மிரட்டியதோடு, அடமானம் வைத்த வீட்டை அபகரிக்க முயற்சி செய்துள்ளார். இதனால் குடும்பத்தில் சண்டை வந்துள்ளது. இந்த மனஉளைச்சலால் தான் தற்கொலை செய்துகொண்டார் என தெரியவந்துள்ளது.

 

இந்த தற்கொலை வழக்கை கந்து வட்டி பிரச்சனையால் தற்கொலை என வழக்கை மாற்றி அமைக்க வேண்டும் என இறந்தவரின் உறவினர்கள் காவல்துறையினரிடம் கேட்டுள்ளனர். அதனை அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லையாம். இதனால் இறந்தவரின் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். வருவாய்த்துறையினர், போலீஸ் உயர் அதகாரிகள் சம்பவயிடத்துக்கு வந்து உறவினர்களிடம், நிச்சயம் விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம் என வாக்குறுதி தந்து தற்காலிகமாக பிரச்சனையை தீர்த்துள்ளனர்.

 

குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் பகுதியில் கந்து வட்டி பிரமுகர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

பார் மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் மீது வழக்கு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Bar roof collapses, 3 lost live Case against 12 people

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமாக இயங்கி வந்த பாரின் முதல் தளத்தின் மேற்கூரை நேற்று இரவு திடீரென யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக் கொண்டுள்ளதாகத் தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள அபிராமபுரம் போலீசார், பாரின் மேலாளர் சதீஷ் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.