incident in vaniyampadi

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மாராபாபட்டு கிராமத்தை சேர்ந்த சிரஞ்சீவி (25) அக்டோபர் 21ந்தேதி சென்னை – பெங்களுரூ இடையிலான ரயில் பாதையில் வாணியம்பாடி நகரம் வழியாக செல்லும் பாதையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Advertisment

இதுகுறித்து ரயில்வே போலீஸாருக்கு தகவல் சொல்லப்பட, ஜோலார்பேட்டை இரயில்வே காவல்துறையினர் தற்கொலை வழக்கு பதிவு செய்தனர். ஏன் தற்கொலை செய்துகொண்டார் என காவல்துறை விசாரணையில், குடியாத்தம் பகுதியை சேர்ந்த பைனான்சியர் ஒருவரிடம், தனது பெயரில் உள்ள வீட்டை அடகு வைத்து 2018 ஆம் ஆண்டு 1.25 லட்சம் கடன் வாங்கியுள்ளார். மாதம் 5 ஆயிரம் ரூபாய் வட்டி, 2500 ரூபாய் அசல் என மாதந்தோறும் 15ந்தேதி 7500 ரூபாய் கட்டிவந்துள்ளார். தேதி தவறினால் அதற்கு தனியாக வட்டி வசூலித்துள்ளார் அந்த பைனான்ஸ் பிரமுகர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கடன் தவணை கட்டி வந்தவர், கரோனா காலத்தில் கட்ட முடியாமல் தவித்துள்ளார்.

Advertisment

incident in vaniyampadi

இதுகுறித்து கடந்த இரண்டு மாதங்களாக பைனான்ஸ் பிரமுகர் ஒருமையில் பேசி மிரட்டியதோடு, அடமானம் வைத்த வீட்டை அபகரிக்க முயற்சி செய்துள்ளார். இதனால் குடும்பத்தில் சண்டை வந்துள்ளது. இந்த மனஉளைச்சலால் தான் தற்கொலை செய்துகொண்டார் என தெரியவந்துள்ளது.

இந்த தற்கொலை வழக்கை கந்து வட்டி பிரச்சனையால் தற்கொலை என வழக்கை மாற்றி அமைக்க வேண்டும் என இறந்தவரின் உறவினர்கள் காவல்துறையினரிடம் கேட்டுள்ளனர். அதனை அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லையாம். இதனால் இறந்தவரின் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். வருவாய்த்துறையினர், போலீஸ் உயர் அதகாரிகள் சம்பவயிடத்துக்கு வந்து உறவினர்களிடம், நிச்சயம் விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம் என வாக்குறுதி தந்து தற்காலிகமாக பிரச்சனையை தீர்த்துள்ளனர்.

குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் பகுதியில் கந்து வட்டி பிரமுகர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.