Skip to main content

திட்டக்குடி அருகே மீன் குத்தகைதாரர்கள் அட்டகாசம்! தண்ணீரில் மூழ்கிய 50 ஏக்கர் விளைநிலம்

Published on 27/06/2020 | Edited on 27/06/2020
thittakudi

 

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்துள்ள பெருமுளை ஊராட்சிக்கு உட்பட்ட 136 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் கடந்த ஆண்டு முதல் கடுமையான வறட்சி ஏற்பட்டிருந்த நிலையில், பொதுமக்கள் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி, பெருமுளை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம ஏரிகளில் நீர் தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அனைத்து ஏரிகளிலும் தண்ணீர் வந்ததால் விவசாயிகள்,  கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சியும் பலனும் அடைந்தனர்.

இந்த சூழ்நிலையில் பெருமுளை ஏரியில் மீன்பிடிக்க பொதுபணித்துறை அதிகாரிகள் குத்தகைக்கு விடுத்துள்ளனர். குத்தைகைக்கு எடுத்த மீன்பிடி குத்தகைதாரர்கள் மீன் பிடிப்பதற்காக ஏரியில் உள்ள மதகை இரவோடு இரவாக உடத்து தண்ணீரை நான்கு பகுதிகளிலும் திறந்து விட்டனர். இதனால் சுற்றுவட்டாரத்தில் உள்ள 50 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்களிலும் தண்ணீர்  புகுந்து நாசமாகியது.

 

thittakudi

 

அதையடுத்து  பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஏரிக்கரையில் திரண்டு மாவட்ட நிர்வாகத்தையும், பொதுப்பணித்துறை அதிகாரிகளையும் கண்டித்தும், நீரை திறந்துவிட்ட குத்தகைதாரர்களை கண்டித்தும், 'விவசாயம் செய்வதற்கு தண்ணீர் விட்டீர்களா அல்லது மீன் பிடிப்பதற்காக தண்ணீர் விட்டீர்களா... என கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தும் யாரும் வந்து நடவடிக்கை எடுக்காததால், ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் அனைவரும் அதிகாரிகள் வரும்வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதுபற்றி தகவலறிந்த திட்டக்குடி வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், காவல்துறையினர் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.  மேலும் குத்தகைதாரர்களிடம் மீன் பிடிப்பதற்காக தண்ணீரை வெளியேற்றக்கூடாது என்று உத்தரவிட்டனர். அதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.