Skip to main content

துக்கம் விசாரிக்க வந்த எஸ்.பிக்கு போலீஸ் சல்யூட் செய்த எஸ்.ஐ மனைவி!

Published on 27/09/2020 | Edited on 27/09/2020
incident in thirupathur

 

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் உட்கோட்ட குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சண்முகம். 55 வயதான சண்முகத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் வந்துள்ளது. அதனை தொடர்ந்து அவர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்துக்கொண்டுள்ளார். பரிசோதனையில் அவருக்கு பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து வாணியம்பாடியில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா பிரிவில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் செப்டம்பர் 27ந்தேதி காலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

 

incident in thirupathur


அவரது உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் நேரில் சென்று பார்வையிட்டு அஞ்சலி செலுத்தினார். இறந்த சண்முகம் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியபோது, சண்முகத்தின் மனைவி, கீழ்நிலை காவல்துறையினர் உயர் அதிகாரிகளை காணும்போது, சல்யூட் செய்வது போல், சல்யூட் செய்து நெகழவைத்தார்.

 

incident in thirupathur


சண்முகத்தின் மனைவியிடம், உங்கள் கணவர், காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர். அவரது குடும்பத்தை காவல்துறை கைவிடாது. உங்களுக்கான உதவிகளை நிச்சயம் அரசு செய்யும், நானும் அதற்கான முயற்சிகளை செய்கிறேன் என நம்பிக்கை அளித்தார். மறைந்த சண்முகத்துக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

கருணை அடிப்படையிலான பணி சண்முகம் வாரிசுகளில் ஒருவருக்கு வழங்க எஸ்.பி முயற்சி எடுத்துள்ளார். அந்த குடும்பத்தில் யார் விரும்புகிறார்களோ, தகுதியின் அடிப்படையில் பணி கிடைக்கும் என்றார்கள் காவல்துறை வட்டாரத்தில்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.