Skip to main content

ஆலய விழாவுக்கு கொண்டு வரப்பட்ட யானை திடீர் உயிரிழப்பு!!! பக்தர்கள் கண்ணீர்...

Published on 19/10/2020 | Edited on 20/10/2020
incident in thenkasi

 

 

தென்காசி மாவட்டத்தின் பாப்பாக்குடி சமீபம் உள்ள முக்கூடல் முத்துமாலையம்மன் ஆலயத்தின் தசரா விழா நிகழ்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த விழா நிகழ்ச்சியின் பொருட்டு, சப்பரப் பவனியின் விசேஷத்திற்காக நேற்று முன்தினம் இரவு ரவணசமுத்திலிருக்கும் தாவூர் மீரான் என்பவர் தன்னுடைய 54 வயதான லட்சுமி என்ற பெண் யானையை அழைத்து வந்திருக்கிறார். இந்த யானையைப் பராமரித்து வரும் தாவூத் மீரான் அந்த பகுதிகளின் கோவில் திருவிழா நிகழ்ச்சிக்காக அழைத்துச் செல்வது வழக்கமானது தான்.

 

மறுநாள் முக்கூடலின் தாமிபரணியாற்றில் யானையைக் குளிப்பாட்டிய தாவூத், அதற்கு உணவு அளித்துவிட்டு அன்று இரவு அங்கு தங்கினார். அன்றைய நடு இரவின்போது யானைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்படவே உடனே கால் நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு சிகிச்சையும் அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் போகவே அந்த லட்சுமியின் உயிர் நள்ளிரவு பிரிந்தது. அதனைத் தொடர்ந்து முக்கூடல் போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை வன கால்நடை மருத்துவர் மனோகரன், மற்றும் ஆலங்குளம் கால்நடை உதவி இயக்குனர் ஜான்சுபாஷ் முக்கூடல் கால் நடைமருத்துவர் சிவமுத்து ஆகியோர் இறந்த யானையை உடற்கூறு ஆய்வு செய்தனர். பின்னர் தாமிரபரணியின் ஆற்றங்கரைப் பக்கம் யானையின் உடலை அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

 

இறந்த யானையின் உடற்கூறு ஆய்வுகள் வெளியிடப்படாவிட்டாலும் அதற்கு வலிப்பு நோய் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதுவும் காரணமா என்பது உடற்கூறு ஆய்வில்தான் தெரியும் என்கிறார்கள். கேரளாவின் மலப்புரம் காட்டில் கடந்தசில மாதங்களுக்கு முன் அன்னாசிப்பழத்தில் வைத்த வெடிகுண்டைக் கடித்து தின்றதில் வாய் சிதறி, ஒருவாரம் வதைபட்டுச் செத்து மடிந்தது கர்ப்பிணி யானை.

 

கடந்த வாரம் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சிப் பொட்டல் பகுதியில் வாய்ப் புண்ணோடு வைத்தியம் கிடைக்காமல் ஒருவாரமாக வேதனையில் அலறிக் கொண்டிருந்த நிறைமாதக் கர்ப்பிணி யானை வனத்துறையினரின் பாராமுகத்தால் மரணமடைந்தது. ‘தெய்வத்திற்கு ஒப்பான யானைகள் அனாதைகளாக மடிவது லோகத்திற்கு விசேஷமல்ல என்பது கடவுள்களின் தேசத்தில் உறுதியாக நம்பப்படுபவை.’

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

யானை துரத்தி வந்ததில் ஆடு மேய்க்கும் தொழிலாளி கீழே விழுந்து படுகாயம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 goat herdsman fell down after being chased by an elephant

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்ட குண்டா, இருளர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (40) இவர் 20க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் மாடுகளை வைத்து வனப்பகுதியை  ஒட்டியுள்ள விவசாய நிலம் மற்றும் வனப்பகுதியில் தினமும் மேய்த்து வந்துள்ளார். வழக்கம் போல் இன்று ஆடு மாடுகளை வனப்பகுதிக்கு ஓட்டி சென்ற அவர் தமிழக ஆந்திர எல்லையான சுட்டகுண்டாவிலிருந்து பெத்தூர்  செல்லும்  சுனை என்ற வனப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது யானை துரத்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்த அவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

பின்னர் தனது  வீட்டிற்கு செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வனத்துறை மற்றும் உமராபாத் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் காயமடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கால் மற்றும் முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் .

மேலும் ஆம்பூர் வனச்சரக அலுவலர் பாபு மற்றும் உமராபாத் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.