Skip to main content

சேலத்தில் கால் டாக்ஸி ஓட்டுநர் கழுத்து அறுத்து கொலை!

Published on 07/05/2020 | Edited on 07/05/2020
INCIDENT IN SALEM... POLICE INVESTIGATION

 

சேலத்தில், வீட்டு மொட்டை மாடியில் படுத்துத் தூங்கிய கார் ஓட்டுநரை மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து படுகொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மணியகாரனூர் பாண்டு நகரை சேர்ந்தவர் அபிஷேக் மாறன் (29). இவர் சொந்தமாக 3 கார்கள் வைத்துள்ளார். அவற்றை தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு கொடுத்துள்ளார். அதே நிறுவனத்தில் கால் டாக்ஸி ஓட்டுநராகவும் பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ஜெபினா. காதல் திருமணம் செய்து கொண்ட இத்தம்பதி, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆறு ஆண்டுக்கு முன்பு பிரிந்து விட்டனர். அதன்பின் ஜெபினா, வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.


அபிஷேக் மாறனின் தந்தை மாறன், முன்னாள் ராணுவ வீரர். 2004ம் ஆண்டு இறந்து விட்டார். தாயார் யசோதா, ராணுவத்தில் செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அபிஷேக், மணியனூரில் உள்ள பாட்டி கண்ணம்மாவுடன் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் (மே 5) இரவு சாப்பிட்டுவிட்டு, வீட்டு மொட்டை மாடியில் சென்று படுத்து தூங்கினார். மறுநாள் காலையில் அபிஷேக்கின் உறவினர் ஒருவர் அவரை செல்போனில் அழைத்துள்ளார். பலமுறை முயற்சித்தும் அவர் அழைப்பை ஏற்காததால் அவரே நேரடியாக வீட்டுக்கு வந்து பார்த்துள்ளார். அப்போது மொட்டை மாடியில் அபிஷேக் மாறன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

மர்ம நபர்கள், வீட்டின் படிக்கட்டு வழியாக மொட்டை மாடிக்குச்சென்று அங்கு கட்டிலில் படுத்திருந்த அபிஷேக் மாறனை கழுத்து அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றிருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர். சடலத்தை, உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையுண்ட அபிஷேக் மாறனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு அபிஷேக், அன்னதானப்பட்டியில் இளம்பெண் ஒருவர் மீது காதல் தகராறில் ஆசிட் வீசினார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு அந்தப் பெண் உயிர் பிழைத்தார். வழக்கில் இருந்தும் அபிஷேக் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கருவாட்டு மண்டியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவர் தவிர மேலும் சில பெண்களுடனும் அபிஷேக்கிற்கு தொடர்பு இருந்துள்ளது. அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பில் யாராவது அபிஷேக்கை கொலை செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர்.

 

ி



இச்சம்பவத்தில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கும் காவல்துறை, வழக்கை விசாரிப்பதற்காக தனிப்படையும் அமைத்துள்ளது. அபிஷேக்கின் நெருக்கமான நண்பர்கள், அவர் வேலை செய்து வந்த நிறுவனம், அன்றாடம் அவருடைய காரில் சென்று வரும் நபர்கள் ஆகியோரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அபிஷேக்கின் செல்போனில் பதிவாகியுள்ள எண்களை வைத்தும், அவர் கடைசியாக யார் யாரிடம் பேசினார் என்ற ரீதியிலும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.