Skip to main content

ஊர் சுற்றிய மாணவர்களை அடிச்சது குத்தமாய்யா? தலைமை ஆசிரியரை முற்றுகையிட்ட மக்கள்!

Published on 21/02/2020 | Edited on 21/02/2020

தர்மபுரியில், பள்ளி முடிந்து சீருடையில் மோட்டார் சைக்கிளில் ஊர் சுற்றிக்கொண்டிருந்த மாணவர்களை சாலையிலேயே சரமாரியாக தாக்கிய அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியரை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் - மொரப்பூர் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

 

incident in salem govt school...


இப்பள்ளித் தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, புதன்கிழமை (பிப். 19) மாலையில், பாலக்கோட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் அவருடைய பள்ளி மாணவர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களை வழிமறித்த கிருஷ்ணமூர்த்தி, ''தேர்வு நேரத்தில் எதற்காக பொறுப்பில்லாமல் இந்த நேரத்தில் ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறீர்கள்?'' எனக்கேட்டு, அவர்களை எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவருக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மாணவர்கள் எதிர்த்துப் பேசியதால் கோபம் அடைந்த தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, சாலையிலேயே மாணவர்களை சரமாரியாக அடித்தார். இதைப்பார்த்த அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் சிலர், தலைமை ஆசிரியரை தடுத்து, தட்டிக்கேட்டனர்.

அதற்கு தலைமை ஆசிரியர், ''இவர்கள் என் பள்ளி மாணவர்கள். அவர்களை நான் அடிப்பேன். நீங்கள் கேட்கக்கூடாது. ஊர் சுற்றிய மாணவர்களை அடிப்பது குற்றமா?,'' என்று பதில் சொன்னார். இந்த பதிலால் திருப்தி அடையாத பொதுமக்கள் அவரை சுற்றிவளைத்து எங்கும் செல்ல முடியாதபடி முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தலைமை ஆசிரியரை பத்திரமாக மீட்டனர்.

பள்ளி மாணவர்களை அடிக்கக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அவர்களை சாலையிலேயே சரமாரியாக தாக்கிய தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தர்மபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அவரிடம் விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பி உள்ளார்.

இந்தப்பள்ளியில் பணி நேரத்தில் வெளியே சுற்றிக்கொண்டிருந்ததாக 11 ஆசிரியர்களுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு, மாவட்டக்கல்வி நிர்வாகம் குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கியது. ரியல் எஸ்டேட் தகராறில் அதிமுக பிரமுகர் ஒருவர், இப்பள்ளி ஆசிரியர் ஒருவரை சிறைப்பிடித்த சம்பவமும் நடந்துள்ளது. அண்மையில், பெண் ஆசிரியர் ஒருவர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். தொடர்ந்து இப்பள்ளி ஏதாவது ஒரு பிரச்னையில் சர்ச்சையில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று  வருகிறது. இந்நிலையில் சேலத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''பிரம்மாண்டமான கட்டிடத்தை கட்டி கொடுத்திருக்கிறோம். கட்டி 3 வருடம் ஆகிறது. 1200 கோடியில் கட்டிக் கொடுத்திருக்கிறோம். ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா என பல கட்டிடங்களை கட்டி வைத்திருக்கிறோம். ஆனால் ஒற்றைச் செங்கலை தூக்கிக்கொண்டு ஊர் ஊராக போகிறீர்களே உதயநிதி ஸ்டாலின் பல லட்சம் செங்கலில் கட்டி இருக்கிறோம் ஏன் அதை திறக்க மாட்டேன் என்கிறீர்கள்.

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடம் என்று இன்றுவரை ரிப்பன் வெட்டுவதற்கு உங்களால் முடியவில்லை. மூன்று வருடம் ஆகிறது. இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது. என்ன கொடுமை பாருங்கள் நிறைவேற திட்டத்தை செங்கல்லை தூக்கிக்கொண்டு விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் கட்டிமுடித்த திட்டத்தை திறக்க முடியாத ஒரே அரசு திமுக அரசு. இந்த திட்டம் கொண்டுவரக் கூடாது என்று பார்க்கிறார்கள்.

இது ஆசியாவிலேயே மிகப்பெரிய திட்டம். கால்நடை பூங்கா திட்டம் முழுக்க முழுக்க விவசாயிகளுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம். அமெரிக்கா செல்லும் பொழுது அங்கு ஒரு பால் பண்ணைக்கு சென்றேன். அங்கு ஒரு பசு ஒரு நாளைக்கு 65 லிட்டர் பால் கறக்கிறது. அந்த பசு போல நம்முடைய மாநில சீதோசன நிலைக்குத் தக்கவாறு கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகள் கொடுக்க வேண்டும். 40 லிட்டர் பாலை ஒரு நாளைக்கு கறந்து அவர்கள் வருமான பெருக வேண்டும் என்பதற்காக இந்த அற்புதமான திட்டத்தை கொண்டு வந்தேன். அதில் கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் உள்ளது . அதன் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு கிடைக்கும் கால்நடைகளை விவசாயிகளுக்கு கொடுத்து இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் குறிக்கோள். இன்று நாம் ஒரு ஆடு வளர்த்தால் 20 கிலோ தான் கிடைக்கும். ஆனால் கலப்பின ஆடு வளர்த்தால் 40 கிலோ கிடைக்கும். இந்த திட்டத்தை முடக்கி வைத்த அரசாங்கம் திமுக அரசாங்கம். கால்நடை பூங்கா வந்திருந்தால் இந்தப் பகுதி பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும். உலக அளவில் நம்முடைய சேலம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி பிரசித்தி பெற்றிருக்கும்'' என்றார்.

Next Story

'அரசியல் வேறுபாடு வன்முறையாக மாறக்கூடாது'- கல்வீச்சுக்கு முதல்வர் கண்டனம்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
'Political difference should not turn into violence'- CM condemns stone pelting

ஆந்திராவில் தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கல் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனால் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வர இருக்கிறது. இதனால் அங்கு அரசியல் கட்சிகளால் தீவிர பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தனித்து களம் காண்கிறது. இதனையொட்டி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்த தேர்தல் பரப்புரையில் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீசப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்தச் சம்பவத்திற்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'ஆந்திர முதல்வர் மீது கல் வீசப்பட்டதைக் கண்டிக்கிறேன். அரசியல் வேறுபாடுகள் வன்முறையாக மாறக்கூடாது. ஜனநாயக செயல்பாட்டில் ஈடுபடும் போது நாகரீகத்தையும், பரஸ்பர மரியாதையையும் நிலைநாட்டுவோம். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.