புதுச்சேரி அடுத்த லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் சுந்தர், முரளி. ரவுடிகளான இவர்கள் இருவரும் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தனர். இதுதொடர்பாக அவர்களுக்கிடையே முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 15.2.2017 அன்று முரளி வெட்டி கொலை செய்யப்பட்டான்.

Advertisment

இந்த கொலை வழக்கு தொடர்பாக சுந்தர், தட்டாஞ்சாவடி செந்தில், லாஸ்பேட்டை பாண்டியன் மகன் அமரன் (24), அசோக், சுரே‌‌ஷ், பிரகா‌‌ஷ், சூர்யா, சரத், மணிமொழி, கார்த்திகேயன், ஜெயகுமார் மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகிய 12 பேர் மீது கோரிமேடு போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இதில் சிறுவன் சீர்திருத்த பள்ளியிலும், சுந்தர் உள்ளிட்ட 11 பேர் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

Advertisment

incident in puducherry...

இந்த வழக்கை விசாரித்த புதுச்சேரி 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் சுந்தர், அமரன் உள்ளிட்ட 11 பேரையும் விடுதலை செய்து நேற்று உத்தரவிட்டது.

இதையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த அமரன் புதுச்சேரிக்கு சென்றால் பழிக்கு பழியாக தாம் கொலை செய்யப்படுவோம் என கருதி தஞ்சாவூரை சேர்ந்த அவரது மைத்துனர் உதயகுமாருடன் தஞ்சாவூருக்கு நேற்று இரவு காரில் சென்று கொண்டிருந்தார். அவர்களுடன் பாண்டியன் என்பவரும் சென்றார். காரை தஞ்சாவூரை சேர்ந்த மாரிமுத்து என்பவர் ஓட்டினார்.

Advertisment

கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த கருங்குழி அருகேயுள்ள டாஸ்மாக் கடை அருகே இரவு 9.30 மணி அளவில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது உதயகுமாரும், பாண்டியனும் மது அருந்துவதற்காக காரை நிறுத்துமாறு மாரிமுத்துவிடம் கூறினர். உடனே அவர் டாஸ்மாக் கடை அருகில் காரை நிறுத்தினார். பின்னர் உதயகுமார், பாண்டியன், மாரிமுத்து ஆகியோர் காரில் இருந்து இறங்கி டாஸ்மாக் கடைக்கு சென்றனர்.

அமரன் மட்டும் காரில் தனியாக இருந்தார். அப்போது அங்கு 4 மோட்டார் சைக்கிள்களில் 7 பேர் கொண்ட கும்பல் வந்தது. அந்த கும்பல் திடீரென அமரனை காரில் இருந்து வெளியே இழுத்து போட்டு, அவரது தலையில் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் தலை முழுவதும் பலத்த காயமடைந்த அமரன் அதே இடத்தில் உயிரிழந்தார். இதனிடையே மதுவாங்கிக் கொண்டு வந்த பாண்டியனையும் அந்த கும்பல் வெட்டி விட்டு, தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பி விட்டது.

incident in puducherry...

இந்த கொடூர கொலையால் டாஸ்மாக் கடைக்கு வந்த மதுபிரியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த வடலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயமடைந்த பாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த அமரன் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதுடன், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் முரளி கொலைக்கு பழிக்குப்பழியாக அமரன் கொலை செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது. மேலும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.