Skip to main content

நடவடிக்கை எடுக்காததால் விரக்தி -செல்போன் டவரில் ஏறி கூலித்தொழிலாளி தற்கொலை முயற்சி!

Published on 19/08/2020 | Edited on 19/08/2020

 

incident in pennadam

 

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் பேரூராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கனகசபை(42). கூலித் தொழிலாளியான இவருக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மூர்த்தி ஆகியோருக்கும் நீண்டகாலமாக இடம் சம்பந்தமான பிரச்சினை இருந்து வந்துள்ளது. வருவாய்த் துறையில் இடத்தை அளக்க பணம் கட்டி, பல முறை சர்வேயரை அழைத்தும், அவர் அளந்துதந்தபாடில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் பிரச்சினை ஏற்பட்டதால் பெண்ணாடம் காவல் நிலையத்திலும் புகார் செய்துள்ளார். ஆனால் அவர்களும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று (18.08.2020) பக்கத்து வீட்டுக்காரர் வீடு கட்ட ஆரம்பித்துள்ளார். தற்போது அந்த இடத்தை அளிக்காமல் வீடு கட்டினால் தன் இடம் போய்விடும் என்பதால் பெண்ணாடம் காவல் நிலையத்திற்கு புகார் அளிப்பதற்காக அவர் புகார் எழுதிக் கொண்டு சென்றுள்ளார். ஆனால் அந்தப் புகாரை போலீசார் வாங்க மறுத்துள்ளனர்.

இதனால் விரக்தியடைந்த கனகசபை பெண்ணாடம் பேரூராட்சி மற்றும் காவல் நிலையம் பின்புறம் உள்ள தனியார் செல்போன் டவரில் ஏறிக்கொண்டு போராட்டம் செய்தார். மேலும் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டார்.
 
பின்னர் இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும்  தீயணைப்பு துறையினர்  அங்கு விரைந்து சென்று சமரசம் செய்து கனகசபை பிரச்சினையைத் தீர்த்து வைப்பதாக வாக்குறுதி அளித்ததால் கனகசபை கீழே இறங்கி வந்தார். அதையடுத்து மயங்கிய நிலையில் இருந்த கனகசபையை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் கனகசபையின் கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் இருந்துள்ளது. இதனால் அவர் செல்போன் டவரின் உச்சியில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரது புகார் மனுவின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
பகல் நேரத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவம் பெண்ணாடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.