Skip to main content

திமுக வேனில் சென்று அதிமுகவிற்கு வாக்களித்து துணை சேர்மன் ஆன காங்கிரஸ் வேட்பாளர்!

Published on 11/01/2020 | Edited on 11/01/2020

புதுக்கோட்டை மாவட்டக்குழு தலைவர் பதவிக்கு 13 இடங்களில் வெற்றிபெற்றுள்ள தி.மு.க கூட்டணிதான் வெற்றி பெறும் என்று அனைவரின் எதிர்பார்ப்பு இருந்தது. ஏனென்றால் ஆளும் அதிமுக 9 இடங்களை மட்டுமே பிடித்திருந்ததால் அவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்ற நிலையில் திமுக தில்லாக இருந்தது.

திமுக மாவட்ட சேர்மன் வேட்பாளர் பட்டியல் நேற்று இரவு வெளியான நிலையில் கலைவாணி சுப்பிரமணியன் வேட்பாளராக திமுக கட்சி அறிவித்தது.

 

pudukottai


காலை தலைவர் தேர்தலுக்கு 11 திமுக கவுன்சிலர்கள், 2 காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஒரு வேனில் மொத்தமாக வந்து இறங்கி உள்ளே சென்றனர். அதேபோல அதிமுக தரப்பில் 8 அதிமுக கவுன்சிலர்கள் ஒரு த.மா.கா கவுன்சிலர் என 9 பேர் ஒன்றாக வந்தனர். திமுக சார்பில் கலைவாணியும், அதிமுக சார்பில் ஜெயலெட்சுமியும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 

வாக்கெடுப்பு முடிந்து வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் 9 வாக்குகளுடன் இருந்த அதிமுக கூட்டணி வேட்பாளர் ஜெயலெட்சுமி 12 வாக்குகளும், 13 வாக்குகள் வைத்திருந்த திமுக கலைவாணி 10 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
குறைவான வாக்குகள் இருந்த அதிமுக மாவட்டசேர்மன் பதவியை பிடித்தது.

 

pudukottai


மாலையைில் அதேபோல துணைத் தலைவர் தேர்தல் நடந்த போதும் ஒன்றாகவே வந்தனர். திமுக சார்பில் துணைத் தலைவருக்கும் சேர்மன் வேட்பாளராக போட்டியிட்ட கலைவாணியே மனு தாக்கல் செய்ய.. அடுத்த நிமிடம் திமுக கூட்டணி கவுன்சிலர்களுடன் வந்த காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் உமாமகேஸ்வரியும் வேட்பாளராக மனுத்தாக்கல் செய்த போது திமுகவினருக்கு அதிர்ச்சி. வாக்குப்பதிவு முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டபோது 11 – 11 என சமநிலை வந்தது. 

குலுக்கல் முறையில் காங்கிரஸ் கட்சியின் உமாமகேஸ்வரி துணைத் தலைவர் ஆனார். திமுகவில் தொடர்ந்து மாவட்டத் துணைத்தலைவர் பதவி கேட்டும் கொடுக்க மறுத்துவிட்டனர். அதேபோல திருவரங்குளம் ஒன்றியத்தில் அதிக இடங்களை வென்று கொடுத்த ஒ.செ. தரப்பை வேட்பாளர் ஆக்காமல் தி.மு.க மாவட்ட நிர்வாகம் ஒருதலைப் பட்சமாக வேட்பாளர் ஆக்கியதால் காங்கிரஸ் உமாமகேஸ்வரி தரப்பிற்கு திமுக மீது கடும் கோபம். தாங்கள் சார்ந்துள்ள இனத்திற்கு திமுக தொடர்ந்து துரோகம் செய்வதாக கூட்டணிக்குள் பேசிக் கொண்டனர்.

 

pudukottai


இதை அறிந்து கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த நினைத்து காங்கிரஸ் கவுன்சிலர்களிடம் பேசியதுடன், ஒரு திமுக கவுன்சிலரையும் ரகசியமாக பேசி முடித்து வைத்துவிட்டு வேட்பாளரையும் தேர்வு செய்து அனுப்பி வைத்தார். சத்தமில்லாமல் திமுக வேனிலேயே சென்ற அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்ததுடன் அவர்கள் தயவில் துணைத் தலைவரும் ஆகிவிட்டார் காங்கிரஸ் உமா மகேஸ்வரி. வெற்றிக்கு பிறகு அதிமுகவினருடன் சென்று தலைவர்கள் சிலைகளுக்கும் மாலை அணிவித்தனர்.

இதை அரசியலில் மாற்றங்கள் எப்படி வேண்டுமானாலும் நிகழும் என்று சொல்லிவிட்டு செல்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.