Skip to main content

4  கோடி ஆன்லைன் பரிசு...  அப்பாவிகளை ஏமாற்றும் ஆன்லைன் டுபாக்கூர்கள்... தப்பிய கோவில்பட்டி தொழிலாளி!!

Published on 13/08/2020 | Edited on 13/08/2020
incident in kovilpatti

 

ஜெட் வேகமெடுக்கும் கரோனா பரவல் தற்போது தமிழ்நாட்டின் குக்கிராமங்கள் வரை வந்துவிட்டது. ஐந்து மாதங்கள் கடந்தும் தடுப்பு மருந்து இல்லாத நிலையில், தடுப்புக்கு ஊரடங்கு மட்டுமே மருந்து என்பது கூட பயனற்றுப் போய்விட்டது. ஒருபுறம் மிரட்டும் கரோனா, மறுபக்கம் வேலையின்மையால் வருமானம் பாதிப்பு. பசி, பிள்ளைகளோடு தவிக்கும் பல தட்டு மக்கள். கரோனா வைரசைக் காட்டிலும் கொடிய கிருமியான வறுமையை எதிர் கொள்ளமுடியாமல் பரிதவிப்பிலிருக்கிறார்கள்.

இந்நிலையில், மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் அந்த அப்பாவி மக்கள் லாக்டவுணில் முடங்கியிருப்பதை வாய்ப்பாக்கிக் கொண்ட ஆன்லைன் கும்பல்கள், ஆன்லைன் சூதாட்டம், ஆன்லைன் பரிசு என்று மக்களிடம் உள்ளதையும் உருவிக் கொண்டிருக்கிறது.

இந்த டுபாக்கூர்களிடமிருந்து அதிர்ஷ்டவசமாக ஒரு சிலரே புத்திசாலித்தனமாகத் தப்பியுள்ளனர். அதில் ஒருவர்தான் தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி நகரின் சங்கர்ராஜ் என்ற ஹோட்டல் தொழிலாளி.

 

incident in kovilpatti


சங்கர்ராஜின் செல் நம்பருக்கு 4 கோடி பரிசு விழுந்துள்ளதாக ஒரு குறுந்தகவல் வந்திருக்கிறது. அதையடுத்த சில நொடிகளில் அவரது நம்பரில் தொடர்பு கொண்ட ஒரு நபர், பிரிட்டீஷ் மோட்டார் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், வாழ்த்துக்களைச் தெரிவித்தவர், இந்தப் பரிசுத் தொகையைப் பெறுவதற்காக 16 ஆயிரம் வரி செலுத்த வேண்டும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சிறிது நேரத்தில் ரிசர்வ் வங்கியிலிருந்து வரும் அழைப்பில் சொல்லுவார்கள் என்ற பிறகு லைனில் வந்த பெண் ஒருவர் அதையே வலியுறுத்தியிருக்கிறார்.

அதன்படியே தொடர்பு கொண்ட நபர் ஒருவர் 16 ஆயிரம் ஸ்டேட் வங்கிக் கணக்குக்கு அனுப்புப்படியும், அனுப்பிய பிறகு ரிசர்வ் வங்கிக்கு அதன் விபரத்தை ரிசர்வ் வங்கியின் இ மெயிலுக்கு அனுப்பவேண்டும் என்றும் கூறியவர் எப்போது செலுத்துவீர்கள் என்றும் கேட்டுள்ளார். தொடர்ச்சியாகப் போன் அழைப்பு வந்ததால் சங்கர்ராஜ் தன் வீட்டு நகையை அடகு வைத்து பணம் செலுத்தத் தயாரானவர்,ஏதோ ஒரு சந்தேகத்தில் தன் ஹோட்டல் முதலாளி கணேஷ்குமாரிடம் விசயத்தைச் சொல்ல, அவரோ ஏமாற வேண்டாம் பணம் செலுத்த வேண்டாம் என்று சொன்னதும், தன் முடிவை மாற்றிக் கொண்டார் சங்கர்ராஜ்.

விடாக் கண்டனாக இது குறித்து தொடர் போன் வர, அவர்களிடம் பேசிய கணேஷ்குமார். 4 கோடி பரிசு விழுந்திருப்பதால் வரியாக அதில் 16 ஆயிரத்தைக் கழித்துக் கொண்ட மீதிப் பணத்தைத் தாருங்கள் என்று கொடாக் கண்டனாய்ப் பதிலளித்தவரிடம், பணம் செலுத்தியே ஆகவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். வாட்ஸ் அப் நம்பர் கொடுங்கள் என்று கேட்டதற்கு மறுத்திருக்கிறது எதிர்முனை.

இந்தத் தொல்லை தாங்க முடியாமல் போன கணேஷ்குமார் இது குறித்து கோவில்பட்டி நகர ஸ்டேட் பேங்க் மேலாளரிடம் தெரிவித்ததில், அவரோ இது போன்ற நடைமுறைகள் ரிசர்வ் வங்கியில் கிடையாது. அவர்களின் நம்பர் டெல்லியிலுள்ள ஒரு பெண்ணின் கணக்கு என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கிக்குப் புகார் தெரிவித்தவர்கள், சைபர் க்ரைமிலும் புகார் செய்ய உள்ளனர்.

ஆன்லைன் டூபாக்கூர் பரிசு தொடர்பான விடாக்கண்டன் கொடாக்கண்டன் விவகாரம்,நகரைப் பரபரப்பாக்கியிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.