Skip to main content

கர்ப்பிணிப் பெண் இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை!

Published on 16/11/2020 | Edited on 16/11/2020

 

INCIDENT IN KALLAKURICHI

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ளது கீழாத்துக்குழி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை என்பவரது மகன் ஈஸ்வரன் (30). இவருக்கு ரேவதி (25) என்ற மனைவியுள்ளார். இந்தத் தம்பதிக்கு, 5 வயதில் புஷ்பா, 2 வயது யமுனா என இரு பெண் குழந்தைகள் உள்ளனர். 

 

இந்நிலையில், ரேவதி தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். ஈஸ்வரனின் அண்ணன் மகேந்திரன், அவரின் மனைவி அலமேலு. இவர்களுக்கு, கதிரேசன், கேசவர்த்தினி என இரு பிள்ளைகள் உள்ளனர். மகேந்திரன் சில மாதங்களுக்கு முன்பு, ஆந்திர மாநிலத்தில் செம்மரக் கடத்தல் கும்பலுடன் செல்லும்போது நடந்த கார் விபத்து தீயில் கருகி பலியாகியுள்ளார்.

அதைத் தொடர்ந்து, அவரது மனைவி அலமேலுவை ஈஸ்வரனை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளுமாறு உறவினர்கள் ஒன்று கூடி ஊர் பஞ்சாயத்தில் பேசி முடிவு செய்துள்ளனர். இதனால் ஈஸ்வரனுக்கும் அவரது மனைவி ரேவதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த ரேவதி நேற்று முன்தினம் மாலை, தனது 2 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மறுநாள் காலை வரை அவரும் குழந்தைகளும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் ரேவதியும் குழந்தைகளும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், நேற்று காலை அதே ஊரைச் சேர்ந்த சின்னையன் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றின் அருகே ரேவதியின் செருப்பு கிடந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள், சந்தேகம் அடைந்துள்ளனர். உடனே கிணற்றில் இறங்கித் தேடியுள்ளனர். அந்தக் கிணற்றில் ரேவதி, புஷ்பா, யமுனா ஆகிய மூவரின் உடல்களும் கிடந்துள்ளன. மூன்று உடல்நிலையும் உடனடியாக வெளியே கொண்டு வந்தனர்.

 

cnc

 

இந்தத் தகவல் காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி ராமநாதன், கச்சராபாளையம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்துபோன மூவரின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, கரியாலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர். இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு கர்ப்பிணிப் பெண் இறந்து போன சம்பவம் கல்வராயன் மலைப் பகுதி கிராம மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.