Skip to main content

முதல்வர் தொகுதியில் டாஸ்மாக் பார் ஊழியர் வெட்டிப் படுகொலை! காவல்துறை விசாரணை!!

Published on 13/03/2020 | Edited on 13/03/2020

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியில், சட்ட விரோதமாக இயங்கி வந்த டாஸ்மாக் பார் ஊழியர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள தண்ணீர்தாசனூர் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதன் அருகே அனுமதியின்றி மதுக்கூடம் (பார்) செயல்பட்டு வருகிறது. எடப்பாடி ஆலச்சாம்பாளையத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி (32) என்பவர் இந்த மதுக்கூடத்தில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். இதே மதுக்கூடத்தில் அண்ணாமலை (30) என்பவரும் வேலை செய்து வருகிறார்.

 

INCIDENT IN EDAPPADY


எடப்பாடி நெடுங்குளம் பூமணியூரைச் சேர்ந்த துரைராஜ் என்பவர், புதன்கிழமை (மார்ச் 11) மதியம் மேற்படி மதுக்கூடத்தில் அமர்ந்து மது அருந்தினார். அப்போது மதுக்கூடத்தின் பக்கவாட்டு சுவர் மீது துரைராஜ் சாய்ந்து உட்கார்ந்தபோது, திடீரென்று அந்த சுவர் இடிந்து விழுந்தது. இதுகுறித்து பார் ஊழியர்கள் ராமமூர்த்தி, அண்ணாமலை ஆகியோர், உன்னால்தான் சுவர் விழுந்தது எனக்கூறி துரைராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பாரில் மது குடித்துக் கொண்டிருந்த மற்றவர்கள், அவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் துரைராஜ் அங்கிருந்து வேகவேகமாக வெளியே சென்று விட்டார்.

இந்நிலையில், புதன்கிழமை இரவு 10 மணியளவில், 7 பேர் கொண்ட கூலிப்படை கும்பலுடன் குறிப்பிட்ட அந்த மதுக்கூடத்திற்கு துரைராஜ் சென்றார். மதுக்கூடத்திற்குள் நுழைந்த வேகத்திலேயே அந்த கூலிப்படை கும்பல், ராமமூர்த்தி, அண்ணாமலை ஆகிய இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டது. இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த ராமமூர்த்தி, சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அண்ணாமலையை அக்கம்பக்கத்தினர் மீட்டு, எடப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த எடப்பாடி காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்தனர். ராமமூர்த்தியின் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை தொடர்பாக துரைராஜ், மேட்டூர் தங்கமாபுரிபட்டணத்தைச் சேர்ந்த மகேந்திரன், வாசுதேவன் உள்ளிட்ட 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“விதிமீறலில் ஈடுபட்ட டாஸ்மாக் பார்” - குரல் கொடுத்த குடிமகன்!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Tasmac Bar Irregular  Citizen Speaks Out

டாஸ்மாக் பாரில் மது அருந்தியபடியே நம்மைத் தொடர்புகொண்ட ஒருவர், “அண்ணே.. போதையெல்லாம் இறங்கிப்போச்சு..” என்று பேசினார். ‘கலப்படச் சரக்கா? என்ன விஷயம்?’ என்று கேட்டோம். “அதெல்லாம் இல்ல. டாஸ்மாக்ல 21 வயசுக்கு குறைவா உள்ளவங்களுக்கு சரக்கு விற்கக் கூடாதுன்னு சட்டம் சொல்லுது. ஆனா இந்த விருதுநகர் பார்ல (கடை எண் 11881) டவுசர் போட்ட சின்னப் பையனை வேலைக்கு வச்சிருக்காங்க. சிறுவன் தான் டேபிள் டேபிளா போயி பாட்டில வச்சிக்கிட்டிருக்கான். அவன் சின்னப் பையன்ங்கிறதுனால சரக்கடிக்க வந்தவங்க ஆளாளுக்கு அவனை விரட்டி வேலை வாங்குறாங்க. கண்டபடி திட்டுறாங்க.

பாக்குறதுக்கு பரிதாபமா இருக்கு. குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுக்க சட்டம் இருக்கு. டாஸ்மாக் சட்டம் வேற இருக்கு. ஆனா பாருங்க சட்டமீறலா இங்கே அநியாயம் நடக்குது. மனசு பொறுக்காமத்தான் ஒருத்தர்கிட்ட நக்கீரன் நம்பரை வாங்கி உங்ககிட்ட பேசுறேன். நான் ஒரு குடிமகன்தான். ஆனாலும் எனக்கும் மனசாட்சி இருக்குல்ல. அந்தப் பையனோட எதிர்காலத்த நெனச்சா ரொம்ப வேதனையா இருக்கு. உங்க வாட்ஸ்-ஆப் நம்பருக்கு போட்டோ எடுத்து அனுப்பிருக்கேன் சார்.” என்று நா தழுதழுக்கப் பேசினார்.

Tasmac Bar Irregular  Citizen Speaks Out

மது அருந்தினாலும் ஒரு பொறுப்புள்ள இந்தியக் குடிமகனாக நடந்துகொண்ட அந்த நபர், நம்மிடம் தன் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. விருதுநகர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ரவிச்சந்திரனை தொடர்புகொண்டு விஷயத்தைச் சொன்னோம். “உடனே அங்கே போய் பார்த்து விசாரிச்சு நடவடிக்கை எடுக்கிறேன்.” என்று உறுதியளித்தார். 

Next Story

பேருந்து நிலையத்தில் மது கடத்தல்; மூன்று பெண்கள் கைது

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Liquor smuggling at bus station; Three women were arrested

மதுபான பாட்டில்களை கடத்திய பெண்கள் 3 பேர் கைது செய்யப்பட்டது நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் மூன்று பெண்கள் சந்தேகத்திற்கிடமாக மூன்று பைகளுடன் நின்றுகொண்டிருந்தனர். அப்போது  அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசாரை பார்த்த அப்பெண்கள் அவசர அவசரமாக ஆட்டோ ஒன்றில் ஏறி தப்பிக்க முயன்றனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் மூன்று பேரையும் பிடித்து அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்ததில் அந்த பைகளில் மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. உடனடியாக மூன்று பேரையும் கைது செய்த போலீசார் முழுமையாக சோதனை செய்ததில் 300க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களும், சாராயமும் இருந்தது தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் மூன்று பெண்களையும் கைது செய்ததோடு, இந்த மதுபாட்டில் கடத்தல் தொடர்பாக அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகையில் மூன்று பெண்கள் பேருந்து நிலையம் வழியாக மதுபாட்டில் கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.