கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜவேல் என்பவரது மகன் ராஜபாலன். இவர் விருதாச்சலத்தில் தனியார் (கேப்டன்) தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த 02.08.2017 அன்ற அவரது சொந்த கிராமமான மருங்கூரில் குளிக்கச் செல்லும்போது, அறுந்து கிடந்த மின் கம்பியின் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
அதனைத் தொடர்ந்து அவரது மனைவி கிருஷ்ணவேணி, கருவேப்பிலங்குறிச்சி காவல்நிலையத்தில் உதவி மின்பொறியாளர் அலுவலகம்-மேலப்பாலையூர், செயற்பொறியாளர் அலுவலகம்-விருத்தாசலம், தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் ஆகியவற்றிற்கு எதிராகப் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து விருத்தாசலம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை 09.03.2020 அன்று முடிவுற்றது. வழக்கினை விசாரித்த விருத்தாசலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி இளவரசன் கடந்த 16.03.2020 அன்று தீர்ப்பு வழங்கினார்.
அதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 16 லட்சத்து 80 ஆயிரம் இழப்பீடு வழங்க தீீர்ப்பளித்தார். ஆனால் மின்சார வாரியம் உரிய காலத்தில் இழப்பீடு வழங்காததால், மக்கள் நீதிமன்றத்தில் நிறைவேற்றுப் புகார் அளித்தனர். இதனை விசாரித்த மக்கள் நீதிமன்றத் தலைவர் நீதிபதி இளவரசன், உறுப்பினர் சார்பு நீதிமன்ற நீதிபதி ஜெயசூர்யா அடங்கிய அமர்வு 16.80 லட்சத்துக்கு தீர்ப்பளித்த காலத்திலிருந்து 7.5% வட்டியுடன் சேர்த்து மொத்தம் 18 லட்சத்து 87 ஆயிரத்து 902 ரூபாய் மின்சார வாரியம் வழங்க வேண்டுமென வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கினார்.
அதையடுத்து இன்று விருத்தாசலம் வட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழு முன்பு, மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி இளவரசன், உயிரிழந்த தொலைக்காட்சி செய்தியாளர் ராஜபாலன் மனைவி கிருஷ்ணவேணியிடம், மேற்படி தொகைக்கான காசோலையை வழங்கினார். நிகழ்ச்சியில் சார்பு நீதிபதி ஜெயசூர்யா அரசு வழக்கறிஞர் விஜயகுமார், வாதியின் வழக்கறிஞர் கோ.பாலச்சந்திரன், தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் நாராயணசாமி, உதவி மின் பொறியாளர் பாரதிதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.