Skip to main content

முதல்வர் வருகைக்காக பழமையான ஆலமரங்கள் வெட்டி அகற்றமா..? கொதிக்கும் இயற்கை ஆர்வலர்கள்!

Published on 19/09/2020 | Edited on 19/09/2020

 

INCIDEDNT IN PUDUKOTTAI

 

கரோனா தொற்று பரவத் தொடங்கிய பிறகு, பல கட்ட ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டு, தற்போது தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஆய்வுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்று வருகிறார். இந்தச் சுற்றுப்பயணம், அரசு செலவில் ஏற்பாடாகி வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எதிர்வரும் 25 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகைதர உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்தநிலையில் தான், அவர் வந்து செல்லும் சாலையை மறுமராமத்து செய்யத் தொடங்கியுள்ளனர். அதேபோல அனைத்துத் துறையும் அவசரகதியில் கோப்புகளைத் தயார் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மற்றொரு பக்கம் முதல்வர் வருகைக்காக சாலை ஓரத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள மரங்களை அகற்றி வருகின்றனர். விராலிமலையிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் வீரடிப்பட்டி ஊராட்சியில் உள்ள தாண்டீஸ்வரம் கிராமத்தில், சாலையின் தூரத்தில் நின்ற பழமையான 3 ஆலமரங்களை, வேகமாக வெட்டி பொக்கலின் மூலம் லாரியில் ஏற்றிச் சென்றுள்ளனர். இப்படி மாவட்டத்தில் எத்தனை மரங்களைக் கொன்று முதல்வரை வரவேற்கப் போகிறார்களோ என அப்பகுதி வாழ் மக்கள் கவலை தெரிவிக்கிறார்கள்..

 

INCIDEDNT IN PUDUKOTTAI


இது குறித்து மரங்களின் மரங்களின் மீது காதல் கொண்ட இயற்கை ஆர்வலர்கள் கூறும் போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலை ஓரங்களில் மரங்கள் அதிகமாக இருந்தது. ஆனால் கடந்த 2018 இல், தாக்கிய 'கஜா' புயல் அத்தனை மரங்களையும் அடியோடு சாய்த்துவிட்டது. அப்படியும் ஆங்காங்கே பழமையான மரங்கள் நிலைத்து நின்றது. சாலையோரம் இருக்கும் சாய்ந்த மரங்களை மீட்க, நெடுஞ்சாலைத்துறை மூலம் சுமார் 20 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். பல இடங்களில் பராமரிப்பின்றி கன்றுகள் கருகிப் போனது. இப்படி நிலைத்து நின்ற மரங்களையும் முதல்வர் வருகையைக் காரணம் காட்டி, வெட்டி அகற்றுவது பெரும் வேதனையாக உள்ளது. மரங்களை வளர்க்க இன்று சின்னக்குழந்தைகள் கூட முனைப்புக் காட்டும் போது வளர்ந்த மரங்களை வெட்டி அகற்றலாமா?
 

Ad

 

விராலிமலை தொகுதி எம்.எல்.ஏவும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கர், உயிர் மரங்களை வெட்டினால் வழக்குப் பதிவு செய்து நடடிக்கை எடுக்கப்படும் என்று 'கஜா' புயல் நேரத்தில் சொன்னதோடு பலர் மீது வழக்கும் பதிய வைத்தார். ஆனால், அவரது தொகுதியிலேயே முதல்வரின் பெயரால் மரங்கள் வெட்டப்படுவது அமைச்சருக்குத் தெரியாமல் இருக்குமா என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.