
நாகை அருகே வெளிப்பாளையம் என்ற பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க கூலி வேலை செய்யும் பெண் ஒருவர், நேற்று வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது இரு நபர்களால் வழிமறிக்கப்பட்டு, கோவிலுக்குள் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், ‘நாகை மாவட்டம் நாகூர் நாகத்தோப்பு என்ற இடத்தில் கூலி வேலைக்குச் சென்று திரும்பிய இளம்பெண்ணை இரு இளைஞர்கள் கோவிலுக்குள் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
மனித நேயமற்ற மிருகத்தனமான இந்த செயலை செய்த மனித மிருகங்கள் மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். மனித மிருகங்களுக்குத் துணை போனவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தரமான சிகிச்சை வழங்க வேண்டும்.
பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக 2013-ஆம் ஆண்டில் ஜெயலலிதா அறிவித்த 13 அம்சத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். அதன்மூலம் பெண்கள் பாதுகாப்பாக நடமாடுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்’ என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.