Skip to main content

''பார்த்தால் பப்பர மிட்டாய் மாதிரிதான் இருக்கும்...மூன்றாவது நாள் முழுக்க அடிமையாக்கிவிடும்''- துரைமுருகன் பேச்சு!

Published on 12/08/2022 | Edited on 12/08/2022

 

"If you look at it, it will look like a candy...the third day will be completely addicting" - Durai Murugan speech!

 

நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் 'போதை ஒழிப்பு மாநாட்டில்' போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் அமைச்சர்கள் தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வானது நடைபெற்றது.

 

இந்நிலையில் வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ''கடுமையான வெயிலில் நீங்கள் உட்கார்ந்து இருக்கிறீர்கள். எனவே இந்த கூட்டத்தை எவ்வளவு சீக்கிரம் முடிக்க வேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் முடித்து நீங்கள் பேரணியாக செல்லலாம். நீண்ட நேரம் உங்களை உட்கார வைக்க மாட்டோம். தமிழ்நாட்டில் இப்பொழுது புது வியாதி பரவி இருக்கிறது. ஏற்கனவே கரோனா வந்தது, அந்த வியாதியை முறியடித்திருக்கிறோம். இப்பொழுது குரங்கு அம்மை என்று ஒன்று வருகிறது என்று சொல்கிறார்கள். குரங்கு அம்மை வந்தாலும் சரி, வேறு எந்த வியாதி வந்தாலும் இந்த அரசாங்கம் அவற்றை சமாளிக்க தயாராக இருக்கிறது. அவையெல்லாம் கண்ணுக்குத் தெரிந்தது. ஆனால் இப்பொழுது மாணவர்களிடையே, பொதுமக்கள் மத்தியில் ஒரு கடுமையான வியாதி பரவி இருக்கிறது. அதுதான் போதைப் பொருட்களுக்கு அடிமையாவது. ஒரு காலத்தில் இவை எல்லாம் யாரோ படிக்காதவர்களிடம் தான் பரவி இருக்கும். ஆனால் இப்பொழுது சமூக விரோதிகள் கொண்டு வந்து கொடுத்து ஒரு இளம் தளிராக இருக்கக்கூடிய பிள்ளைகளையே கருக வைக்கிறார்கள்.

 

பார்த்தால் பப்பர மிட்டாய் மாதிரி இருக்கும். ஒரு பப்பர மிட்டாயை சாப்பிட்டாலே போதை ஏறும். இரண்டாவது நாள் அதைத் தேடும். மூன்றாவது நாள் முழுக்க அடிமையாகி விடுவார்கள். பாக்கெட்டில் வைத்திருக்கும் அந்த மிட்டாயை பக்கத்தில் உள்ள நண்பனிடம் கொடுத்தால் மறுநாள் அவன் காலி. இவ்வளவு பயங்கரமான நிலை இருக்கிறது. போதைக்கு அடிமையானால் சுயநினைவை இழந்து விடுவோம். அதற்குப் பிறகு வாழ்க்கையில் எதையும் எதிர்க்க வேண்டும், போதைப் பொருட்களை தடுப்பவர்களை கொல்ல வேண்டும் என்று கூட அவர்களுக்கு வைராக்கியம் ஏற்பட்டுவிடும். இதைச் சமூகவிரோதிகள் ஆந்திராவிலிருந்து கடத்திக் கொண்டு வந்து அன்றைக்கு எங்கேயோ ஒரு மூலை முடுக்கில் இருளிலே விற்றுக்கொண்டு இருந்தவர்கள் இன்று பள்ளி வளாகத்திலும், கல்லூரி வளாகத்திலுமே விற்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை எப்படியும் தடுத்தாக வேண்டும். இல்லாவிட்டால் வருங்காலத்திலே வளர வேண்டிய இந்த குழந்தைகள் அரும்பாக இருக்கும் பொழுதே கருகிவிடுவார்கள்'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது