Skip to main content

''காங்கிரஸ் கட்சி இல்லை என்றால் இந்தியாவும் அப்படி இருந்திருக்கும்''-கே.எஸ்.அழகிரி பேச்சு! 

Published on 07/02/2021 | Edited on 07/02/2021

 

"If there was no Congress party, India would have been like that" - KS Alagiri speech!

 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் முசிறியில் 'விவசாயிகள் சங்கமம்' மற்றும் ஏர்கலப்பை பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி மற்றும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையேற்று பேசுகையில், ''இந்தியாவில் ஒரு பொருளாதார மேம்பாடு ஏற்பட்டது என்றால் அது காங்கிரஸ் ஆட்சியில் தான். ஆசிய நாடுகளில் எத்தனையோ நாடுகள் இன்று ஏழை நாடாகவும், பின் தங்கியும் உள்ளது. காங்கிரஸ் கட்சி இல்லை என்றால் இந்தியாவும் அப்படி  இருந்திருக்கும். பாஜகவுக்கு என்று பெரிய கொள்கையோ கோட்பாடோ கிடையாது. அது எதிர்பாராத ஒரு விபத்து காரணமாகவே ஆட்சிக்கு வந்துள்ளது.

 

காங்கிரஸ் கட்சியை கொள்கை ரீதியாக வலுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மக்களிடம் நேரடியாக சென்று கருத்துக்களை ராகுல்காந்தி கேட்டறிந்து வருகிறார். அவருடைய இந்த அணுகுமுறை பாஜகவை வீழ்த்தும். மக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிவதுதான் தேசத்தின் சிறந்த தலைமை ஆகும். புதிய வேளாண் சட்டங்களால் விளைபொருட்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே விற்க முடியும். 

 

பிரதமர் மோடிக்கும், அவரது நண்பர்களான 5 பணக்காரர்களுக்கு மட்டுமே புரியும் வகையில் இந்த வேளாண் சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல பொதுத்துறை நிறுவனங்கள்  அழிக்கப்பட்டுவிட்டது. அதில் பிஎஸ்என்எல் நிறுவனமும் ஒன்று. தென்னகத்தின் செல்போன் நிறுவனமான ஏர்செல் முடக்கப்பட்டு விட்டது.

 

எதிர்காலத்தில் ஜியோ மட்டுமே ஒரே செல்போன் நிறுவனமாக இந்தியாவில் இருக்கும். அதேபோன்றுதான் விவசாயத்தை அழிக்கும் நோக்கத்தில் வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. நாட்டில் கலப்பு பொருளாதாரம் இருந்தால் தான் தனியார் நிறுவனங்களும், அரசு நிறுவனங்களும் இணைந்து நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். ஆனால் மத்திய அரசு ரயில்வே, எல்ஐசி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்கிறது. பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளே வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

 

மத்தியில் நடக்கும் ஆட்சி இவ்வளவு மோசம் என்றால், தமிழ் நாட்டில் நடைபெறும்  ஆட்சி மிகவும் மோசமாக உள்ளது. 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரில் உயர் நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமியிடம் விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தடை பெற்றுள்ளார். இந்த தடை உத்தரவை மேல்முறையீடு செய்ய மோடி வசமுள்ள சிபிஐ நடவடிக்கை எடுக்கவில்லை.

 

தற்போது வேளாண் கடன்களை தள்ளுபடி செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். கடந்த ஓராண்டாக விவசாய கடன் தள்ளுபடி வேண்டும் என்று கத்தி கொண்டு இருந்தோம். ஆனால் தேர்தலுக்காவும், அரசியலுக்காகவும் வேளாண் கடன்களை தள்ளுபடி செய்வதாக அவர் அறிவித்துள்ளார். வேளாண் கடன்களை தள்ளுபடி செய்வது என்பது அவர்களது கொள்கையில் இல்லாத போது எதிர்க்கட்சியினர் பலம் பெற்று விடக்கூடாது என்பதற்காகவே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். விவசாயிகள் மீது எவ்வித பற்றும் எடப்பாடிக்கு இல்லை என்பதை விவசாயிகள் நன்கு அறிவார்கள்.

 

மத்தியிலும், மாநிலத்திலும் அதிகார மாற்றம் செய்ய காங்கிரஸ் கட்சி துணையாக இருக்கும்'' என்று பேசினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“காவிரி நீர் வேணுமா... ஈரோட்டில் கூட காவிரி ஓடுது பாருங்க...” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலால் எழுந்த விமர்சனம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Oh Cauvery water...? Even in Erode, see the Cauvery running'- Criticism caused by EVKS Elangovan's response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ''ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி என்பது சாதி மதங்களைக் கடந்த கூட்டணி. மத வெறித்தனத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல கொள்கைக்காக தான் இந்த கூட்டணி இருக்கிறது.

மற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி அவர்கள் கொள்கைக்காக ஒன்று சேரவில்லை. சில கோடி ரூபாய் பேரம் பேசி பெறுவதற்காக அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொல்கின்ற காங்கிரசுக்கு பத்து சீட்டுகள் கொடுத்தது நியாயமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இளங்கோவன், ''இல்லை காங்கிரசினுடைய கொள்கையே ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதுதான். மக்கள் குடிப்பதால் கெட்டுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய சிந்தை மாறி போயிருக்கிறது. அதனால் காங்கிரசை பொறுத்தவரை எங்களுடைய மகாத்மா காந்தியினுடைய கொள்கையே ஒரு சொட்டு மது தண்ணீர் கூட மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான்'' என்றார்.

உடனே செய்தியாளர் 'காவிரி தண்ணீர்' என சொல்ல, ''காவிரி தண்ணீரா... காவிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஈரோட்டில் இருக்கின்ற காவிரி ஆற்றை பார்த்தீர்கள் என்றால் கூட, இன்னைக்கு பாருங்கள் இருக்கின்ற பாறை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. வேண்டிய அளவிற்கு தண்ணீர் தர கர்நாடகா தயாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் சில தடங்கல்கள் இருக்கிறது'' என்றார்.

காவிரி நீர் குறித்த கேள்விக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடுத்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

Next Story

“கோட்சே பேரன்களின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும்” - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பிரச்சாரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சார உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினரும் விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான மாணிக்கம் தாகூர் பேசியபோது, “என்னுடைய பார்வையில், தளபதி மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ந்து உயர்ந்த நிலைக்கு சென்றபடியே இருக்கிறார். நாளை என்னவாக உயர்வார் என்பதற்குக் காலம் பதில் சொல்லும்.

 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

ஆனால் அவர் இந்தியாவினுடைய பிரதமராக ராகுல் காந்தி வருவதற்கு முழு ஆதரவு தருவார் என்பது மட்டும் நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தேர்தல், இரு கொள்கைகளுக்கான தேர்தல். ஒரு பக்கம் கோட்சேவின் பேரன்களும் அவருடைய கொள்கைகளும். 20 கோடி சிறுபான்மையின மக்களை அடிமைகளாக சிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கை. பெரும் பணக்காரர்களாக இருக்கின்ற அதானிக்கு இந்தியாவின் செல்வங்களை அள்ளிக் கொடுக்கத் துடிக்கும் மோடி, அமித்ஷாவின் கொள்கை.

இன்னொரு பக்கம், அனைவருக்கும் சமமான இந்தியாவை உருவாக்க வேண்டுமென்று மகாத்மா காந்தி மற்றும் தந்தை பெரியார் பேரன்களின் இந்தக் கூட்டணி. இந்த இந்தியா கூட்டணி அனைவருக்கும் அனைத்தும் என்ற கொள்கையைக் கொண்ட கூட்டணி. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால், உங்களுடைய ஆதரவு முழுமையாகத் தேவை. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால் கோட்சே தோற்கடிக்கப்பட வேண்டும். கோட்சேவின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும். காந்தியா? கோட்சேவா? என்ற நிலையிலே இன்று நிற்கிறோம். மோடியா? ராகுல் காந்தியா? என்ற நிலையிலே நிற்கிறோம். இதிலே தளபதியார் ராகுல் காந்தியோடு நிற்கிறார். அவருடைய ஆசியோடு கை சின்னத்துக்கு வாக்கு தாருங்கள் என்று இரு கரம் கூப்பி வேண்டி விடைபெறுகிறேன்.”  எனப் பேசினார்.