சென்னை திருவொற்றியூரில் ரயில்வே மேம்பாலத்திலிருந்து வடமாநில இளைஞர் ஒருவர் குதிக்கப் போவதாகத் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை திருவொற்றியூர் ரயில்வே பாலத்தில் சுமார் 20 அடி உயரத்தில் இரும்புக் கம்பியின் மேல் வடமாநில இளைஞர் ஒருவர் அமர்ந்துகொண்டு கீழே குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். மது பாட்டில் வேண்டுமென அந்த இளைஞர் தற்கொலை மிரட்டல் விட்டதாகக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் அந்த இளைஞர் வர மறுத்து அடம்பிடித்தார். அதனைத் தொடர்ந்து போலீசார் மதுபாட்டில் ஒன்றை வாங்கி வந்து கொடுத்தனர். மது பாட்டிலை வாங்கி வைத்துக்கொண்ட அந்த இளைஞர் கீழே வராமல் மீண்டும் குதிக்கப் போவதாகப் போக்கு காட்டியதால் ஆத்திரம் அடைந்த போலீசார் உடனடியாக இறங்கி இளைஞரை வலுக்கட்டாயமாக மேலே தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
ஒருவேளை இளைஞர் தவறி கீழே விழுந்தால் அவரைப் பிடிப்பதற்காகத் தீயணைப்புத் துறையினர் தார்ப்பாயுடன் கீழே நின்றிருந்தனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதி சற்று நேரம் பரபரப்பில் ஆழ்ந்தது.