Skip to main content

"வருமானம் இல்ல திருட போனேன்!!!" -கரோனா கால கொடுமைகள்

Published on 22/06/2020 | Edited on 22/06/2020
 "I was robbed of no income" -Corona period bullies

 

இந்த கொடிய கரோனா காலம் வேலை இழப்புகளை ஏற்படுத்தியதால், தனிமனித பொருளாதார தேவை வேறு வழியில்லாமல் அவனை குற்றச் செயல் செய்யும் எல்லைக்கும் கொண்டு போகிறது என்பதை இந்த சம்பவம் மூலம் அறியலாம்,

ஈரோட்டில் நள்ளிரவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ஒரு இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு பெருந்துறை ரோடு, சங்கு நகர் பிரிவு அருகே எச்டிஎஃப்சி என்ற தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் செயல்படுகிறது. அந்த ஏடிஎம் அறையில் காவலாளி இல்லை. அங்கு பொருத்தப்பட்டிருக்கிற சிசிடிவி கேமரா மூலமே அந்த ஏடிஎம் கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் அந்த ஏடிஎம் மையத்திற்குள் புகுந்த ஒரு நபர் ஏடிஎம்மில் இருந்து பணம் வரும் அந்த முகப்பு பகுதியை உடைத்து உள்ளேே இருக்கும் பணத்தை கொள்ளையடிக்க முயன்றிருக்கிறார். 

ஆனால் ஏடிஎம் இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு வசதி மூலம், வங்கி ஊழியர்களுக்கு அலர்ட் மெசேஜ் செல்போன் மூலம் சென்றது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வங்கி ஊழியரான ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்த சுரேஷ் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து, ஏடிஎம் மையம் அமைந்துள்ள ஈரோடு தெற்கு போலீஸ் ஸ்டேஷன் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்த தகவலின் பேரில், போலீசார் சம்மந்தப்பட்ட ஏடிஎம் மையத்திற்கு விரைந்து சென்று ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த இளைஞரை, கையும் களவுமாக பிடித்தனர். இதனால் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பல ஆயிரம் ரூபாய் கொள்ளை போகாமல் தப்பியது. அந்த நபரை போலீசார் ஸ்டேஷன் கொண்டு சென்று நடத்திய விசாரணையில், அவர் ஈரோடு திண்டல் வள்ளியம்மை நகரை சேர்ந்த தங்கராஜ் மகன் கார்த்தி என்பது தெரிய வந்தது. "எதற்காக கொள்ளை முயற்சியில் ஈடுபட்டாய்?" என போலீஸ் விசாரிக்க அந்த இளைஞனான கார்த்தி, "நான் கார் டிரைைவர், ஏற்கனவே தொடர்ந்து வேலை கிடைக்காமல் ஆக்டிங் டிரைவராக யார் கூப்பிட்டாலும் கார் ஒட்டப் போவேன். அப்படி கிடைக்கும் வருவாயை வைத்துதான் குடும்பம் நடத்தினேன். கரோனா வந்த பிறகு ஒரு வேலையும் கிடைக்கவில்லை. பெரும் மன உளைச்சலுக்கு உள்ளானேன். வேறு வழியில்லாமல்தான் திருட முடிவு செய்தேன். மற்றவர் பொருளையோ, பணத்தையோ வீடு புகுந்து திருடக்கூடாது என முடிவு செய்து பேங்க் பணம், அரசாங்க பணம்தானே அதை எடுக்கலாம் என இந்தச் செயலில் இறங்கினேன்..." என பரிதாபமாக கூறிியிருக்கிறார். அதற்காக போலீசார் பரிதாபப்படவா முடியும்? அவரை கைது செய்து, சிறையில் அடைத்து விட்டார்கள். கரோனா கால கொடுமைகள் இப்படியெல்லாம் மனிதர்களை கொண்டு செல்கிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.