Skip to main content

“கதவு வச்ச வீடும் படிக்க உதவியும் கேட்டேன்...இப்ப மாடி வச்ச வீடே கிடைச்சிடுச்சு...” - மகிழ்வோடு புது வீட்டுக்கு குடிபோன போரம் சத்தியா

Published on 07/12/2022 | Edited on 07/12/2022

 

I asked for a house next door and help to study.. Now I got a house upstairs.. Boram satya

 

போரம் சத்தியா. இந்தப் பெயரை நக்கீரன் வாசகர்களால் மறக்க முடியாது. ஆம், 2 ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் குன்றிய தன் தாயோடு, ஒரு மண்குடிசையில் வசித்து வந்தார். படிக்கப் போகவேண்டிய வயதில் வயல் வேலைக்குப் போய்க்கொண்டிருந்த போரம் சத்தியா, இன்று நக்கீரன் வாசகர்களான உங்களால் அவர் ஆசைப்பட்டது போல புது மாடி வீட்டிற்குள் மகிழ்ச்சியோடு அடியெடுத்து வைத்துள்ளார்.

 

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர் ஊராட்சி போரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணவி சத்தியா. தந்தை இல்லாத நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட தாயை வைத்துக் கொண்டு 10 அடி நீளம் 7 அடி அகலம் கொண்ட தென்னங்கீற்றுகள் மக்கி, கொட்டிய மழையில் கரைந்த மண்குடிசையில் வசித்துக்கொண்டு தனக்கும் தன் தாயாருக்குமான தேவைகளைப் பூர்த்தி செய்ய வீட்டு வேலை தொடங்கி விடுமுறை நாட்களில் விவசாய கூலி வேலைகள் வரை சென்று தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டார். மழை பெய்தால் படுக்க வசதியில்லை என்பதால் தன் தாயோடு பக்கத்து வீட்டில் இரவில் தூக்கம் பகலில் தோட்ட வேலை. இதனாலேயே +2வில் மதிப்பெண் குறைந்தாலும் மேலும் படிக்கணும் அரசு வேலைக்குப் போகணும்., அதுக்கு முன்னால கதவு வச்ச ஒரு சின்ன வீடு வேணும்; என்ற அவரது ஆசையை ‘மக்கள் பாதை’ மூலம் அறிந்து மாணவி சத்தியாவை சந்தித்து அவரது கோரிக்கைகளையும் வறுமையையும் அப்போதைய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கவனத்திற்குக் கொண்டு சென்றோம். அனைத்து உதவிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இவை நக்கீரன் இணையத்தில் செய்தியாகவும், வீடியோவாகவும் கடந்த 2020 செப்டம்பர் 3ந் தேதி வெளிக்கொண்டு வந்தோம்.

 

I asked for a house next door and help to study.. Now I got a house upstairs.. Boram satya

 

செய்தி வெளியான சில மணி நேரத்தில் உதவிகள் செய்ய நக்கீரன் வாசகர்கள் முன்வந்தனர். அடுத்த நாள் மாவட்ட ஆட்சியர் உத்தரவில் வருவாய்த் துறையினர் சத்தியா குடியிருக்கும் மண் குடிசைக்குச் சென்று ஆய்வு செய்து மாற்று இடத்தில் குடிமனைப் பட்டாவுக்கான இடம் தேர்வு செய்தனர்.


நக்கீரன் வீடியோவைப் பார்த்து கண்கலங்கிய அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், போரம் கிராமத்திற்கு நேரில் சென்று மாணவிக்கு தைரியம் சொன்னதோடு சில அடிப்படை உதவிகளும் செய்து தொடர்ந்து கல்லூரி படிப்பிற்கும், போட்டித் தேர்வுக்கும் படிக்க உறுதியும் அளித்தார். மேலும் அதற்கான ஏற்பாடுகளையும் செய்து போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களை வழங்கியதோடு கல்லூரி படிப்பு முடிந்ததும் சென்னையில் உள்ள பிரபலமான வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பயில அதற்கான உறுதி கொடுத்தார்.


மாவட்ட ஆட்சியர் உத்தரவில் மாவட்ட மனநல திட்ட அலுவலர் மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் மாணவிக்கு ஆலோசனைகள் வழங்கியதோடு அவரது தாயாருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு அழைத்து வந்து தங்க வைத்து சிகிச்சை அளித்தார்.


இந்த நிலையில் சத்தியாவை தனது அலுவலகத்திற்கு அழைத்த மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி வீட்டுமனைப்பட்டா வழங்கியதோடு பசுமை வீடும் ஒதுக்கினார். தொடர்ந்து சத்தியாவிடம், உனக்காக நாங்கள் இருக்கிறோம் என்று ஆறுதல் கூறி படிக்க அரசு மகளிர் கல்லூரியில் இடம் ஒதுக்கினார். அரசு ஒதுக்கிய நிதியில் பசுமை வீடு கட்டுவது சிரமம் என்ற நிலையில் பெருங்களூர் ஊராட்சி மன்றத் தலைவர் சரண்யா ஜெய்சங்கர் தானாக முன்வந்து சத்தியாவின் வீட்டை நானே கட்டிக் கொடுக்கிறேன் என்றவர் பசுமை வீடு நிதி மற்றும் நக்கீரன் வாசகர்கள் வழங்கிய ரூ.1.5 லட்சம் ரூபாயோடு தன் பங்காக ரூ.2.5 லட்சம் செலவு செய்து ரூ.6 லட்சம் மதிப்பில் 400 சதுர அடியில் அனைத்து வசதிகளுடன் அழகான வீட்டைக் கட்டிக் கொடுத்திருக்கிறார்.


வீட்டு வேலைகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் கடந்த 4ந் தேதி ஞாயிற்றுக்கிழமை புதிய வீட்டில் ஆனந்தக் கண்ணீரோடு அடியெடுத்து வைத்திருக்கிறார் சத்தியா. புதுமனை புகுவிழாவிற்கு தனக்கு உதவிய பலரையும் அழைக்க முடியாவிட்டாலும் அவர்களின் வாழ்த்துகளோடு புதுவீட்டிற்குள் சென்றுள்ளார்.


புதிய வீட்டிற்குள் சென்றாலும் இன்னும் பல அடிப்படை வசதிகள் தேவையாகவே உள்ளது. பெரும் மகிழ்வோடு இருந்த மாணவி சத்தியா கூறும்போது, “மக்கள் பாதை மூலம் தகவல் அறிந்து நக்கீரன் என் குடும்ப சூழ்நிலையை வெளிக்கொண்டு வந்தது. அதன்பிறகு எனக்காக வீட்டு மனைப் பட்டா, வீடு, படிக்க சீட், விடுதி, அம்மாவுக்கு சிகிச்சை கிடைத்தது. மேலும் நக்கீரன் செய்தி பார்த்து ஏராளமானவர்கள் என்னிடம் ஆறுதலாக பேசி உதவிகளும் செய்தார்கள். நான் நினைத்தது போல கதவு வைத்த ‘என் கனவு இல்லம்’ கிடைத்துவிட்டது. அடுத்து அரசு அதிகாரியாக வேண்டும். அதற்கான முயற்சிகள் செய்து வருகிறேன். எனக்கு உதவிகள் செய்த அப்போதைய மாவட்ட ஆட்சியர் அம்மா உமாமகேஸ்வரி, அப்போதைய எஸ்.பி பாலாஜி சரவணன் அய்யா, மக்கள் பாதை, இன்னும் பெயர் சொல்ல முடியாத முகம் தெரியாத அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி சொல்வதோடு நான் விரும்பிய அரசு அதிகாரியாக வருவதே அனைவரின் விருப்பமாக உள்ளது. அதை நிறைவேற்றி என்னைப் போன்றவர்களுக்கு உதவிகள் செய்வேன்” என்றார்.

 

நக்கீரன் சார்பிலும், ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் அரசு அலுவலர்கள் உதவிகள் செய்த நக்கீரன் வாசகர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து! - கவனம் கொடுக்குமா அரசு?

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
 Will the government pay attention? children's lives!

புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி சாலையில் உள்ளது முத்துப்பட்டினம் என்கிற சின்னக் கிராமம். இங்குள்ள குழந்தைகள் வெகுதூரம் சென்று தொடக்கக் கல்வி கற்க வேண்டும் என்பதால் அதே ஊரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது இந்தப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட விவசாய கூலித் தொழிலாளிகளின் குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளிக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 2 வகுப்பறைக் கட்டடம் மற்றும் ஒரு வகுப்பறை கட்டடம் உள்ளது. இதில் 2 வகுப்பறைக் கட்டடத்தின் மேற்கூரை காங்கிரீட், சிமெண்ட் பூச்சுகள் கடந்த சில வருடங்களாகவே உடைந்து கொட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் குழந்தைகளை அந்த வகுப்பறைகளில் வைக்க அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆசிரியர்கள்.

உள்பக்கத்தின் மேல் சிமெண்ட் பூச்சுகள் உடைந்து கொட்டி துருப்பிடித்த கம்பிகளும் தொங்கிக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் இருக்கும் போது கொட்டாமல் இரவில் கொட்டுவதால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இதுவரை பாதிப்பு இல்லை. இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு வேறு கட்டடம் கட்ட வேண்டும் என்று பெற்றோர்கள் தொடர்ந்து வைக்கும் கோரிக்கை ஏனோ அதிகாரிகள் கவனம் பெறவில்லை. 

அதிகாரிகளின் அலட்சியத்தால் தினம் தினம் திக் திக் மனநிலையில் மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளனர். தலைக்கு மேலே ஆபத்து இருக்கும் போது எப்படி நிம்மதியாக படிக்க முடியும் மாணவர்களால். கவனம் எல்லாம் இடிந்து கொட்டும் மேற்கூரை மேலே தானே இருக்கும். பெற்றோர்களும் கூட கூலி வேலைக்குச் சென்ற இடத்திலும் பள்ளியில் தங்கள் குழந்தைகளின் நிலை பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் எத்தனையோ அரசுப் பள்ளிகளை அரசு நிதியை எதிர்பார்க்காமல் அந்தந்த ஊர் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் தங்கள் சொந்தச் செலவில் மாணவர்களின் நலனுக்காக கட்டடம், திறன் வகுப்பறைகள் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மாணவர்களின் உயிர் காக்க அரசோ அல்லது தன்னார்வலர்களோ உடனே ஒரு இரண்டு வகுப்பறைக் கட்டடம் கட்டிக் கொடுக்க முன்வந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் அந்த கிராம மக்கள். 

Next Story

ஒரு ரோட்டுக்கு 2 டெண்டர்கள்! அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணாகும் மக்கள் வரிப்பணம்!

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
2 tenders per road! People's tax money is wasted due to negligence of officials!

ஒரு ரோடு போட ரூ.1 கோடி நிதி ஒதுக்கி அமைச்சர் பூமி பூஜை போட்ட பிறகு அதே ரோட்டில் ரூ.5 லட்சத்திற்கு சிமென்ட் சாலைப் பணிக்கு நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கியுள்ள அவலம் நடந்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீரமங்கலம் - பட்டுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் இருந்து கீரமங்கலம், செரியலூர் இனாம், செரியலூர் ஜெமின், வேம்பங்குடி மேற்கு ஊராட்சி வரை சென்று கீரமங்கலம் - பேராவூரணி சாலையில் இணையும் சுமார் 3 கி.மீ இணைப்பு கிராமச் சாலை உள்ளது. இந்தச் சாலையை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிராம மேம்பாட்டுச் சாலை (ஆர்.ஆர்) திட்டத்தில் இணைத்து நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைத்து திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூ.1 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனை அழைத்து வந்து சாலைப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடத்தினர். மழைக்காலம் என்பதால் சாலைப் பணி தாமதம் செய்யப்பட்டிருந்தது. இன்னும் சில நாட்களில் பணிகள் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் தான் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள வேம்பங்குடி கிழக்கு ஊராட்சியில் பேராவூரணி சாலையில் (ஆர்.ஆர்.க்கு ஒப்படைக்கப்பட்ட சாலை) இருந்து சுமார் 200 மீட்டர் நீலத்திற்கு சிமெண்ட் சாலை அமைப்பதற்கான முதல்கட்டப் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த சாலையில் தான் ஆர்.ஆர். சாலையும் வரப்போகிறது. அதாவது தற்போது அவசர கதியில் போடப்படும் சிமெண்ட் சாலையில் இன்னும் சில நாளில் ஆர்.ஆர். சாலைப் பணிக்காக உடைத்துவிட்டு தார்ச்சாலை போடப் போகிறார்கள். இதனால் மக்கள் வரிப்பணம் ரூ.5 லட்சம் வீணாகப் போகிறது.

2 tenders per road! People's tax money is wasted due to negligence of officials!

ஒரு சாலை நெடுஞ்சாலைக்கு ஒப்படைத்து அந்த சாலை பணிக்காக ஒப்பந்தம் விடப்பட்ட பிறகு ஊராட்சி ஒன்றியம் எப்படி சிமெண்ட் சாலைக்கு நிதி ஒதுக்கி டெண்டர் விட்டது? இப்போது போடப்படும் சிமென்ட் சாலையை தார்ச்சாலை போட வருபவர்கள் உடைத்துவிடுவார்களே என்று அறந்தாங்கி ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டால், வேம்பங்குடி கிழக்கு ஊராட்சியில் யூனியனில் இருந்து எந்த வேலையும் நடக்கலயே என்று சொன்ன ஒன்றிய அதிகாரிகள் சிறிது நேரத்திற்கு பிறகு அது அண்ணா மறுமலர்ச்சித் திட்டப் பணியாம் என்றனர். எந்தப் பணியானாலும் அதே சாலைக்கு மற்றொரு டெண்டர் விடப்பட்ட பிறகு அதில் சிமெண்ட் ரோடு வேலை செய்தால் அந்தப் பணம் வீணாகாதா? என்ற நமது கேள்விக்கு ஒன்றிய அதிகாரிகளிடம் இருந்து பதில் இல்லை.

தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை ஆர்.ஆர் திட்டப் பொறியாளர் கவனத்திற்கு கொண்டு சென்ற போது, எங்களிடம் ஒப்படைத்த சாலையில் வேறு யாரும் பணி செய்யக் கூடாது. ஒன்றிய நிதியில் வேலை நடப்பது பற்றி தகவல் கிடைத்ததும் மாவட்ட திட்ட அலுவலர் கவனத்திற்கு கடிதம் அனுப்பிவிட்டோம். இனிமேல் அவர்கள் வேலை செய்யமாட்டார்கள். எங்கள் டெண்டர் படி முழுமையாகத் தான் தார்ச்சாலை போடுவோம் என்றார். ஆனால் இன்று வரை தற்காலிக சிமென்ட் சாலைக்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது, ரொம்ப வருசமா குண்டும் குழியுமா கிடந்த ரோட்டுக்கு இப்ப ஆர்.ஆர்.ல நிதி ஒதுக்கின பிறகு பஞ்சாயத்தில் இருந்து சிமென்ட் ரோடு போடுறாங்க. இவங்க போட்ட ரோட்டை நெடுஞ்சாலைத்துறையினர் இன்னும் சில நாளில் உடைச்சுட்டு தார் ரோடு போடப் போறாங்க. கேட்டா மரம் நிக்கிது தார் ரோடு உடைஞ்சிடும்ன்னு சொல்றாங்க. ஆனா ஆர்.ஆர். ரோட்டுக்காரங்க எங்களுக்கு ஒதுக்குன அளவு ரோடு போடுவோம்னு சொல்றாங்க. இதனால ஒரு ரோடு போட்டு பில் எடுத்ததும் ஒரு வாரத்தில் உடைக்கப் போறாங்க. மக்கள் வரிப்பணத்தை இந்த அதிகாரிகள் எப்படி வீணடிக்கிறாங்கன்னு பாருங்க. சிமென்ட் ரோட்டை வேறு ஒரு தெருவில் கூட போடலாம் என்கின்றனர்.

இதே போல தான் கறம்பக்குடி ஒன்றியத்தில் கருக்காகுறிச்சி தெற்கு தெருவில் ஒரு தனி நபரின் பட்டா இடத்தில் சுமார் 50 மீ பேவர் பிளாக் ரோடு போட வந்த போது நிலஉரிமையாளர் தடுத்து யாருக்குமே பயன்படாமல் என் நிலத்தில் போட வேண்டாம் என்று சொன்ன போது இன்று ரோடு போடுறோம் ஒரு வாரத்தில் பில் எடுத்ததும் நீங்க ரோட்டை உடைச்சுட்டு விவசாயம் பண்ணுங்கனு சொல்லி இருக்கிறார்கள். அதாவது அரசு பணத்தை பில் போட்டு எடுக்கத்தான் டெண்டர்கள் கொடுக்கிறார்களா அதிகாரிகள்? என்ற கேள்வி சில சம்பவங்களில் இருந்து எழுந்துள்ளது.