Skip to main content

"அரைவேக்காட்டு விமர்சனங்களுக்கு நான் பதில் கூற தயாராக இல்லை.." - மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 02/07/2022 | Edited on 02/07/2022

 

dmk



கொங்கு மண்டலம் எனப்படுகிற மேற்கு மண்டலத்தின் கிழக்கு வாசலாக உள்ள கரூரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 1,2 ஆகிய இரு நாள் பயணமும், ஏறக்குறைய ஒரு லட்சம் மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்வும் அடுத்து 3 ந் தேதி நாமக்கல்லில் நடைபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளின் மாநாடு பிரமாண்ட விழாவாக நடந்தது, அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கியும், நடைபெற்று முடிந்த பணிகளை திறந்து வைத்தும், தொடர்ந்து செய்ய வேண்டிய மக்கள் நல திட்டங்களைத் தொடங்கி வைப்பது என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் சென்று அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்களைச் சந்தித்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.

 

அதன் தொடர்ச்சியாக முதல்வராக பொறுப்பேற்றபின் முதன் முதலாக கரூருக்கு 1 ந் தேதி மாலை வந்தார்.

 

திருச்சி விமான நிலையத்திலிருந்து கரூர் வரும்வரை இருபுறமும் மக்கள் காத்திருந்து வரவேற்பு கொடுத்தனர். இரவு 8 மணிக்கு கரூர் பயணியர் விடுதிக்கு வந்தபோது அங்கு அமைச்சர் செந்தில்பாலாஜியால் ஏற்பாடு செய்யப்பட்ட கரூர் மாவட்ட,நகர தொழில் முனைவோர்கள் குறிப்பாக ஜவுளி உற்பத்தியாளர்கள் காத்திருந்தனர். ஜவுளி தொழிலில் ஏற்பட்ட தேக்கத்திற்கு என்ன காரணம்? அதை முன்னேற்ற செய்ய என்ன செய்ய வேண்டும் என ஒரு மணி நேரத்திற்கு மேல் அவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு தொழில் முனைவோர்களையும், இந்த தொழிலை நம்பி வாழும் தொழிலாளர் குடும்பங்களையும் தி.மு.க. அரசு காப்பாற்றும் என்ற உறுதியை முதல்வர் வழங்கினர்.

 

DMK

 

2 ந் தேதி காலை 85 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கரூர் நகரம் முழுக்க மக்கள் கடல்போல் திரண்டிருந்தனர். விழா பந்தலில் லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்த பிரமாண்டத்தை ஏற்பாடு செய்த அமைச்சர் செந்தில்பாலாஜியை தட்டிக் கொடுத்து மகிழ்ச்சியுடன் மேடை ஏறினார் முதல்வர் ஸ்டாலின்.

 

"ஒருபுறம் அமராவதி மறுபுறம் காவேரி என கரூரில் இரண்டு நதிகள் ஓடுவதுபோல தமிழக முதல்வர் தனது இரண்டு திருக்கரங்களால் கரூரை காக்கிறார்"  என கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "திராவிட பேரரசே"... என்ற கவிதையை வாசித்தார். அதை ரசித்த முதல்வர்,

 

பிறகு பேசுகையில்,

DMK

 

"கரூர் மாவட்டத்திற்கு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றியிருக்கிறோம். இங்கிருப்போரின் முகங்களில் திமுக ஆட்சி மக்களை முன்னேற்றும் ஆட்சியாக அமைந்துள்ளதை தெளிவாக அறிய முடிகிறது. இதனால்தான் வீண் விமர்சனங்களுக்கு எல்லாம் பதில் சொல்லி என்னுடைய நேரத்தை வீணடிப்பதில்லை. இப்போது எனக்கு மக்களுக்கு நன்மை செய்வதற்கே நேரம் போதவில்லை. அதனால் ஒரு சில அக்கப்போர் மனிதர்களின் அரைவேக்காட்டு விமர்சனங்களுக்கு நான் பதில் கூற தயாராக இல்லை. அதற்கு நேரமும் இல்லை.

 

தந்தை பெரியார் கூறுவார், மானத்தை பற்றி கவலைப்படும் ஆயிரம் பேருடன் கூட போராடலாம். ஆனால் மானத்தை பற்றி கவலைப்படாத ஒரே ஒரு ஆளுடன் நாம் போராடவே முடியாது என அடிக்கடி சொல்வார். அப்படி மானத்தைப் பற்றி கவலைப்படாத மனிதர்கள் வைக்கும் விமர்சனத்தை பற்றி நான் மதிக்க விரும்பவில்லை.

 

dmk

 

ஊடக துறையினரிடம் நான் உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன், திமுக ஆட்சியானது எப்படி செயல்படுகிறது என்பதை இது போன்ற மனிதர்கள் முன்னால் மைக்கை நீட்டாமல் தமிழ்நாட்டு மக்களிடம் கேளுங்கள். பெண்களிடம் கேளுங்கள், இருளர்கள், நரிக்குறவர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் என விளிம்பு நிலைக்கு கீழே இருக்கக்கூடிய மக்களிடம் இந்த ஆட்சியைப் பற்றி கேளுங்கள். இந்த ஆட்சியில் சமூக நீதி எந்த அளவுக்கு போற்றி பாதுகாக்கப்படுகிறது என்பது குறித்து சமூக நீதிக்காக போராடுபவர்களிடம் கேளுங்கள், அவர்கள் இந்த ஆட்சியின் சாதனை பற்றி சொல்வார்கள். நியாயமான கோரிக்கையை யார் வைத்தாலும் அதை நிறைவேற்றித் தர நாங்கள் தயாராக இருக்கிறோம். அனைவருடைய கருத்தையும் கேட்டு, அதனைச் செயல்படுத்தி தருபவனாகத்தான் நான் இருக்கிறேனே தவிர, நான் நினைப்பது மட்டும் தான் நடக்க வேண்டும் என நான் நினைப்பவன்  அல்ல.

 

அப்படி மக்களிடம் கருத்துக்களை பெற்று ஊடகங்கள் ஆட்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். தாங்களும் இருக்கிறோம் என்பதை தங்களின் இருப்பை காட்டிக் கொள்வதற்காக நாள்தோறும் மைக் முன்னால் வாந்தி எடுப்பவர்கள் அளிக்கும் பேட்டிகளுக்கும் நான் பதில் சொல்வதற்கு என்றைக்கும் தயாராக இல்லை.

 

DMK

 

திமுக ஆட்சியை விமர்சிப்பதன் மூலம் என்னை எதிர்த்து கருத்துச் சொல்வதன் மூலம் பிரபலம் அடையலாம் என நினைப்பவர்களைப் பார்த்து நான் வருத்தப்படுகிறேன். கோடிக்கணக்கான தமிழக மக்களின் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும் என விரும்புகிறவன் நான், அதுவும் சாதாரண விளக்காக அல்ல, அது அறிவு விளக்குகளாக, அன்பு விளக்குகளாக, சேவை விளக்குகளாக, மக்களுக்கு பயன் தரும் விளக்குகளாக அமைய வேண்டும் என நினைக்கின்றேன். உங்களில் ஒருவனாக என்னை ஏற்றுக்கொண்டு முதல்வர் நாற்காலியை தமிழக மக்கள் எனக்கு வழங்கி இருக்க காரணம் என்ன? மக்களுக்கு இந்த ஸ்டாலின் நல்லது செய்வான் என்ற நம்பிக்கையில்தான், அந்த நம்பிக்கையை நான் எந்நாளும் காப்பாற்றுவேன்.

 

 

DMK

 

கரூர் என்றாலே பிரம்மாண்டம தான். அமைச்சர் செந்தில்பாலாஜியால் தான் இந்த பிரம்மாண்டத்தை முறியடிக்கும் மற்றொரு பிரமாண்டத்தை செய்ய முடியும். கடல் இல்லா கரூரில் மக்கள் கடலை ஏற்படுத்திவிட்டார் செந்தில் பாலாஜி.." என உள்ளப் பூரிப்புடன் கூறி மீண்டும் மக்கள் கடலில் நீந்தி நாமக்கல் சென்றார் முதல்வர். அங்கும் திரும்பிய திசையெல்லாம் ஆண்கள், பெண்கள், என மலர்ந்த முகங்கள்தான்.

 

பா.ஜ.க. அண்ணாமலையை அடையாளப்படுத்தாமல் செய்த முதல்வரின் விமர்சனமும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உழைப்பை முதல்வர் பாராட்டியதும் கரூர் மக்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.