Skip to main content

“என் கம்பெனில நான் வேலை கொடுக்கிறேன்...”-எச்.ராஜாவை டிவி வேலைக்கு அழைத்த ஊடகவியலாளர்!

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

nn

 

பா.ஜ.க. முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்திக்கும்போதெல்லாம் டென்ஷனாகி வரம்பு மீறிப் பேசுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.  

 

அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அவர்கள் வீட்டுப் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் ஆஜராவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த எச்.ராஜாவை செய்தியாளர்கள் சந்தித்தனர்.

 

அப்போது,  அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தை தொடர்புப்படுத்தும் விதத்தில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாக லீக்கான ஆடியோ குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு எச்.ராஜா “இந்தக் கேள்வியே தப்பு. நேற்று எங்கள் மதுரை மாவட்டத் தலைவர் இது ஃபேக் ஆடியோ என்று சொன்னது எல்லா சோஷியல் மீடியாவுலயும் வந்திருக்கு. அவர் சரவணன் மிமிக்ரி பண்ணி வெளியிட்டிருக்காருன்னு  கம்ப்ளைண்ட் கொடுத்திருக்காரு அப்புறம் என்கிட்ட என்ன?” என்று கோபமாக, நிருபர் ஒருவர்  “நாங்க கேள்வி கேட்கிறோம். அதற்கு பதில் இல்லையென்றால் முடிஞ்சு போச்சு..” என்று கூற, எச்.ராஜாவோ “நீங்க ஒவ்வொண்ணும் கேட்பீங்க.. அப்புறம் நான் கேட்டா தப்பா போயிரும்.  உங்க வீட்ல யாரையாவது பத்தி நான் சும்மா கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லுங்கன்னு..” என்று பேச்சை உஷ்ணமாக்க.. அந்த நிருபரும் விடாமல் “நான் உங்க வீட்ல உள்ள ஆள கேள்வி கேட்டா தப்பாயிரும்ல. அதேதான்..” என்று மடக்க, ஆத்திரமான எச்.ராஜா “என் கட்சி  என் வீடு. நீங்க பேசக்கூடாது. இந்த கேள்வியை அங்கே கேட்பீங்களா? முதுகெலும்பு இருக்கா? தைரியம் இருக்கா? ராஜாகிட்ட வந்து என்னமோ தைரியமா கேள்வி கேட்டுட்டோம்னு நினைச்சிக்கிறதா? இனிமே பொய்யா யாருகிட்டயும் கேட்காதீங்க. வேலையே இல்லைன்னா பரவாயில்ல. வாங்க என் வீட்ல நான்  வேலை தர்றேன்.” என்று தெனாவெட்டாகப் பேச, அந்த நிருபர் “நீங்க வாங்க சார்.. என் கம்பெனில நான் வேலை கொடுக்கிறேன்.”என்று பதிலடி கொடுக்க, எச்.ராஜா விருட்டென்று கிளம்பினார். அவருடன் வந்த பா.ஜ.க.வினர் அந்த நிருபரைத் திட்டியபடியே சென்றனர்.

 

எச்.ராஜா போன்ற பா.ஜ.க. தலைவர்கள்,  செய்தியாளர்களின் கேள்வியை எதிர்கொள்ள முடியாமல், அனைத்துச் செய்தியாளர்களையும் அவ்வப்போது விமர்சித்து வருகின்றனர்.  ‘நீங்க எந்த டிவி? நீங்க எந்தப் பத்திரிகை?’ என்றும் கேட்கின்றனர்.  ஒருபடி மேலே போய், செய்தியாளர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்களையும், அதனை நிர்வகிப்பவர்களையும் திட்டுகின்றனர்.

 

பா.ஜ.க. தலைவர்களின் கோபத்துக்கான  காரணத்தைச் சொன்னார் ஒரு மூத்த செய்தியாளர். “பா.ஜ.க.வினருக்கு தெரிந்ததெல்லாம் மத அரசியல்.. சாதி அரசியல்தான். தமிழ்நாட்டில் சாதி, மதம் பார்க்காமல் செயல்படுவது ஊடகங்கள் மட்டும்தான். அதனாலேயே, சமூக நீதி பக்கம் ஊடகங்கள் நிற்கின்றன. சனாதனத்தை தூக்கிப்பிடிக்கும் பா.ஜ.க. தலைவர்களுக்கு சமூக நீதி என்றால் வேப்பங்காயாகக் கசக்கும்.  அந்த வெறுப்பை ஊடக நிறுவனங்கள் மீதும், செய்தியாளர்கள் மீதும் காட்டுகின்றனர். இதிலேயே, அவர்களது போலி சனாதனதர்மம் வெளிப்பட்டுவிடுகிறது.” என்றார்.

 

செய்தியாளருக்கு வீட்டு வேலை தருவதாக எச்.ராஜா சொன்னது எத்தனை ஆணவமான பேச்சு! 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.