Skip to main content

திருமணத்தை மீறிய உறவு; ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி

Published on 06/11/2023 | Edited on 06/11/2023

 

husband who lost his life along with wife's boyfriend for extramarital affair

 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (38). இவர் அந்த பகுதியில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று (05-11-23) அந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த, அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

 

தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோவிந்தராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இது குறித்து கோவிந்தராஜின் மனைவி கார்த்திகாவிடம் (35, பெயர் மாற்றப்பட்டுள்ளது) கேட்ட போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதில் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். 

 

அதில், கார்த்திகாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமிக்கும் (35) பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம், நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இவர்கள் ஓராண்டுக்கு முன்பு வீட்டை வெளியேறினர். இதனால், இது குறித்து கோவிந்தராஜ் ஏலகிரி மலை போலீஸில் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில் அவர்களை கண்டுபிடித்து அறிவுரைகள் கூறி கோவிந்தராஜையும், கார்த்திகாவையும் காவல்துறையினர் சேர்த்து வைத்தனர். இருப்பினும், கார்த்திகாவின் உறவு தொடர்ந்துள்ளது. இதனால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 

 

இந்த நிலையில், நேற்று முன் தினம் (04-11-23) இரவு கார்த்திகாவும், கோவிந்தசாமியும் மாட்டு கொட்டகையில் சந்தித்து பேசியுள்ளனர். இதனை கண்ட கோவிந்தராஜ் அவர்களை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள், அங்கிருந்த மண்வெட்டியை எடுத்து கோவிந்தராஜை சரமாரியாக வெட்டி தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. ஆண் நண்பருடன் கணவரை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்