Skip to main content

விட்டுச் சென்ற மனைவி; பரிதாபமாக உயிரிழந்த கணவர்

Published on 19/10/2023 | Edited on 19/10/2023

 

Husband lost their life due to family problems in Krishnagiri

 

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை பகுதிக்கு அருகே அமைந்துள்ளது குடிசாகனபள்ளி கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவருக்கு 35 வயதாகிறது. தான் வசிக்கும் சுற்று வட்டாரப் பகுதிகளில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், பாலாஜிக்கு அதே ஊரைச் சேர்ந்த ராதா என்ற பெண்ணுடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மேலும், பாலாஜி தன்னுடைய டிரைவர் தொழிலில் கிடைக்கும் பணத்தை வைத்து தனது குடும்பத்தை பாதுகாத்து வந்தார்.

 

ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்த இவர்களது குடும்பத்தில், காலப்போக்கில் சிறு சிறு விரிசல்கள் ஏற்பட்டு வந்துள்ளது. அதில், பாலாஜிக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்போதெல்லாம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், உறவினர்கள் என கணவன் மனைவியின் சண்டையை தீர்த்து வைப்பது வழக்கம். இந்நிலையில், பாலாஜிக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட தகராறு திடீரென உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 

 

ஒருகட்டத்தில், விரக்தியடைந்த பாலாஜியின் மனைவி தனது குடும்பத்தை விட்டுப் பிரிந்து இரண்டு மகன்களுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இதனிடையே, தன்னுடைய மனைவி தனியாக வாழச் சென்றதால் விரக்தியில் இருந்த பாலாஜி தனிமையிலேயே இருந்துள்ளார். இதையடுத்து, பாலாஜியை விட்டு அவர் பிரிந்து சென்று எட்டு ஆண்டுகள் ஆகிறது. இதற்கிடையில், பாலாஜிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. அவர் அடிக்கடி மது குடிப்பது வழக்கம். இத்தகைய சூழலில், மது போதைக்கு அடிமையான பாலாஜி அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார் எனவும் கூறப்படுகிறது. 

 

இத்தகைய சூழலில், கடந்த 16 ஆம் தேதி காலை பாலாஜியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து, அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வீட்டருகே சென்றபோது அந்த வீடும் வெளிப்புறமாக பூட்டிய நிலையில் காணப்பட்டுள்ளது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து பேரிகை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கிருந்த பாலாஜி உறவினர்களின் உதவியுடன் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.

 

அப்போது, அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பாலாஜி பாதி அழுகிய நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளார். ஒருகணம், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள், பாலாஜியை பார்த்து கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். அதன்பிறகு, பாதி அழுகிய நிலையில் இருந்த பாலாஜியின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

அதே வேளையில், பாலாஜியின் உடலில் இருந்த காயங்களை வைத்துப் பார்க்கும்போது அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை போலீசார் உறுதி செய்தனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பேரிகை போலீசார், இந்த கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலாஜியை வேறு யாராவது அடித்துக் கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றார்களா? அல்லது முன்விரோதம் காரணமா? அவருக்கு எதிரிகள் யாரேனும் இருக்கிறார்களா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். தற்போது, மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் பூட்டிய வீட்டில் டிரைவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பேரிகை பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.