Skip to main content

உறவைத் துண்டிக்கச் சொன்னார்... புருஷனை கொலை செய்துவிட்டேன்! ஆண் நண்பருடன் சிக்கிய மனைவி திடுக்கிடும் வாக்குமூலம்!!

Published on 16/06/2022 | Edited on 16/06/2022
 

 

husband incident in salem district wife and boy friend arrested police

 

கொளத்தூர் அருகே, ஆண் நண்பருடன் உள்ள தவறான தொடர்பைக் கைவிடும்படி கணவர் அடித்துச் சித்ரவதை செய்ததால் மதுபானத்தில் விஷம் கலந்து குடிக்க வைத்து கொலை செய்து விட்டதாக, கைதான மனைவியும், ஆண் நண்பரும் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

 

சேலம் மாவட்டம், கொளத்தூர் அருகே உள்ள காரைக்காட்டைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 37). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி புகழரசி (வயது 27). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

 

சக்திவேலுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. ஜூன் 13- ஆம் தேதி இரவு வழக்கம்போல் தூங்கச் சென்ற அவர், மறுநாள் காலையில் எழுந்திருக்கவில்லை. கணவரை நீண்ட நேரம் எழுப்பியும் அவர் எழுந்திருக்கவில்லை. அதிர்ச்சி அடைந்த புகழரசியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவர் வீட்டு முன்னர் திரண்டனர். சக்திவேல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக புகழரசி கூறினார். உறவினர்கள் கதறி அழுதனர். 

 

தற்கொலை விவகாரம் வெளியே கசிந்தால், உடற்கூராய்வு செய்த பிறகே சடலத்தைத் தருவார்கள்; காவல்துறை விசாரணை என்று அலைய வேண்டியிருக்கும் என்று கருதிய உறவுக்காரர்கள், காதும் காதும் வைத்ததுபோல் இறுதிச்சடங்குக்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், சக்திவேலின் மரணத்தில் ஏதோ மர்மம் இருப்பதாகக் கருதிய அவருடைய தம்பி முத்துசாமி, இதுகுறித்து கொளத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

 

இந்த புகாரின் பேரில் நிகழ்விடம் விரைந்த கொளத்தூர் காவல்நிலைய காவல்துறையினர், சக்திவேலின் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில், புகழரசியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு, அவரை சக்திவேல் அடிக்கடி அடித்து உதைத்து வந்ததும், தன் மனைவி அதே ஊரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவருடன் தவறான தொடர்பிலிருந்து வந்ததும் தெரிய வந்தது. 

 

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் புகழரசி, அவருடைய ஆண் நண்பர் முத்துக்குமார் இருவரையும் காவல்நிலையத்தில் வைத்து கிடுக்கிப்பிடி  விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

 

அவர்கள் இருவரும் அளித்த வாக்குமூலம் குறித்து காவல்துறை தரப்பில் நம்மிடம் பேசினர். 'புகழரசி, பிற ஆண்களுடன் சிரித்துப் பேசி சகஜமாகப் பழகி வந்துள்ளார். யாரிடமும் சிரித்துப் பேசக்கூடாது என்று மனைவியை சக்திவேல் கண்டித்து வந்துள்ளார். மது போதையில் வீட்டுக்கு வரும் போதெல்லாம், பல ஆண்களுடன் தவறான தொடர்பு வைத்திருக்கிறாய் என்று கூறி, மனைவியை அடித்து சித்ரவதை செய்து வந்துள்ளார். 

 

இந்த நிலையில்தான், அதே ஊரைச் சேர்ந்த முத்துக்குமாருடன் புகழரசிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. தன் கணவரால் ஏற்பட்ட மன உளைச்சலை யாரிடமாவது பகிர்ந்து கொண்டால்தான் மனதில் உள்ள பாரம் குறையும் என்று தவித்து வந்த புகழரசிக்கு, முத்துக்குமார் ஆறுதலாக இருந்துள்ளார். இந்த பழக்கம், அவர்களிடையே நெருக்கமான உறவை மலரச் செய்துள்ளது. 

 

மனதால் ஒன்றுபட்டு விட்ட புகழரசியும், முத்துக்குமாரும் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் உடலாலும் ஒன்று கலந்தனர். அக்கம்பக்கத்தினர் மூலம் இதைத் தெரிந்து கொண்ட சக்திவேல், மீண்டும் மனைவியைக் கண்டித்துள்ளார். இதையே சொல்லிச் சொல்லி அடிக்கடி மனைவியைத் தாக்கியும் வந்துள்ளார். 

 

ஒரு கட்டத்தில், தாலி கட்டிய கணவனா? ஆறுதலாக இருக்கும் ஆண் நண்பனா? என்று தனக்குள்ளேயே கேள்வி கேட்டுக்கொண்ட புகழரசி, முத்துக்குமாருடன் வாழ்க்கையைத் தொடர்வது என்று முடிவெடுத்தார். தன் எண்ணத்தைச் சொன்னபோது, அதற்கு முத்துக்குமாரும் ஒப்புக்கொண்டார்.  புகழரசியையும், அவருடைய குழந்தைகளையும் காப்பாற்றுவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார். 

 

அதன்பிறகுதான், சக்திவேலை தீர்த்துக் கட்டி விடலாம் என்று இருவரும் தீர்மானித்தனர். சக்திவேலை எந்த முறையில் கொல்வது என்றெல்லாம் யோசித்துள்ளனர். முதலில், உணவில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துக் கொன்று விடலாம் என்று திட்டம் போட்டனர். அதன்படி, ஜூன் 13- ஆம் தேதி இரவு வீட்டுக்கு வந்த சக்திவேலுக்கு, சாப்பாட்டில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துச் சாப்பிடக் கொடுத்திருக்கிறார் புகழரசி. உணவைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே சக்திவேல் வாந்தி எடுத்துவிட்டார். 

 

இந்த திட்டம் தோல்வி அடைந்ததால், கணவருக்குத் தெரியாமல் தண்ணீரிலும், மதுபானத்திலும் பூச்சிக்கொல்லி மருந்தைக் கலந்து, குடிக்க வைத்துள்ளார். சிறிது நேரத்தில் சக்திவேலுக்கு வலிப்பு ஏற்பட்டு, மூச்சுப்பேச்சின்றி கிடந்தார். தன்னுடைய ஒவ்வொரு நடவடிக்கையும் அவர், முத்துக்குமாருக்கு செல்போன் மூலம் 'லைவ் கமென்ட்ரி' போலக் கொடுத்து வந்துள்ளார். 

 

எனினும், கணவர் இறந்து விட்டாரா இல்லையா? என்று அவருக்கு ஒரு சந்தேகம் வந்துள்ளது. அதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்வதற்காக, அர்த்த ராத்திரியில் முத்துக்குமாரை தன் வீட்டுக்கு செல்போன் மூலம் தகவல் அளித்து, வரவழைத்துள்ளார். அவர் வந்து பார்த்தபோது, சக்திவேல் இறந்து விட்டது தெரிய வந்தது. 

 

காலையில் யார் கேட்டாலும், அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து படுத்தவர், மாரடைப்பில் இறந்து விட்டார் என்று சொல்லும்படி, புகழரசிக்கு யோசனை கொடுத்துவிட்டு முத்துக்குமார் இரவோடு இரவாக அங்கிருந்து கிளம்பி விட்டார். அங்கிருந்து செல்லும்போது புகழரசிக்கு தான் வாங்கிக் கொடுத்த செல்போனையும் உஷாராக வாங்கிச் சென்றுவிட்டார். 

 

காவல்துறை விசாரணையின்போது புகழரசியும், முத்துக்குமாரும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை அளித்து அவர்களே வசமாக மாட்டிக்கொண்டனர்,'' என்கிறார்கள் காவல்துறையினர். 

 

அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின் பேரில் முத்துக்குமாரை, சேலம் மத்தியச் சிறையிலும், புகழரசியை சேலம் பெண்கள் கிளைச்சிறையிலும் அடைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தனியார் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை; பெற்றோர் குற்றச்சாட்டு

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Student incident in private college hostel; Accusation of parents

திருச்சியில் தனியார் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் இந்த உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக பெற்றோர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து டோல் பிளாசா அருகே தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரி,பொறியியல் கல்லூரி, கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மாரியம்மன் தெருவைச் சேர்ந்த அமமுக நகர செயலாளர் பாலாஜியின் மகள் தாரணி (வயது 19) விடுதியில் தங்கி பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

தாரணி காய்ச்சல் காரணமாக நேற்று காலை கல்லூரி வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விடுதிக்கு சென்றுள்ளார். மேலும் காய்ச்சல் அதிகமாக இருந்ததால் கல்லூரிக்கு செல்லாமல் விடுதியில் தங்கியுள்ளார். தாரணி காய்ச்சல் குறித்து பேராசிரியரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் விடுமுறை எடுக்கக்கூடாது நிர்வாகத்திடம் கேட்டு தான் விடுமுறை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். காய்ச்சல் அதிகமாக இருந்ததால் தாரணி விடுதியிலேயே தங்கி உள்ளார். விடுதியில் தங்கியிருந்த சக மாணவிகள் கல்லூரிக்கு சென்று மீண்டும் விடுதிக்கு வந்தபோது அறை உள்புறம் தாழ்பாள் போடப்பட்டு இருந்ததால் இது குறித்து விடுதி சக மாணவிகள் நிர்வாகத்திடம் தெரிவித்தனர். அதன்படி நிர்வாகத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஜன்னலில் துப்பட்டாவால் தூக்கு மாட்டி தற்கொலை செய்ததாக கூறி அவரை படுக்கையில் வைத்திருந்தனர்.

மேலும் இறந்த தாரணியை பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் தாரணிக்கு காய்ச்சல் காரணமாக தந்தை பாலாஜியிடம் தொலைபேசியில் மதியம் 12 மணி அளவில்  தொடர்பு கொண்டு காய்ச்சலால் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு தாரணி தெரிவித்துள்ளார். இதனால் நேற்று மதியம் 3 மணி அளவில் கல்லூரிக்கு வந்த தாரணியின் தந்தை பாலாஜி நெடு நேரமாகி அவரது மகளை பார்க்க விடாமல் காத்திருக்க வைத்துள்ளனர். நெடுநேரத்திற்கு பின் ஆறு மணி அளவில்  தாரணி இறந்துவிட்டார் என விடுதி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாலாஜி உறவினர்களுடன் தனது மகளுக்கு நீதி வேண்டும், தனது மகளை கல்லூரி நிர்வாகத்தினர் கொலை செய்துள்ளனர். மேலும் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ கதிரவனின் கல்லூரி என்பதால் காவல்துறையினர் மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்கள்.

இறந்த தாரணி ஜன்னல் கம்பியில் துப்பட்டாவைக் கட்டி ஒரு கையில் துப்பட்டாவை கழுத்தை நெரித்து தற்கொலை செய்ததாக விடுதி நிர்வாகம் தெரிவிக்கின்றனர். ஆனால் தாரணியின் கழுத்தில் பெல்டால் கழுத்தை நெரித்து இறந்தது போன்று உள்ளதால் இதற்கு உரிய விசாரணை வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் மாணவியின் தாய், 'தனது மகளை கல்லூரி நிர்வாகத்தினர் கொன்று விட்டனர். எனது மகளை பறிகொடுத்து விட்டேனே' எனக் கூறி கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க வைத்தது.

Next Story

திருமணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்த இளம்பெண்; முன்னாள் காதலனின் வெறிச்செயல்!

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Incident happened on A young woman preparing for marriage in madhya pradesh

மத்தியப் பிரதேச மாநிலம், டாடியா பகுதியைச் சேர்ந்தவர் காஜல் அஹிர்வார்(22). இவருக்கும், இளைஞர் ஒருவருக்கு நேற்று (23-06-24) திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மணப்பெண்ணான காஜல் திருமணம் நடைபெறுவதற்கு சில மணி நேரத்திற்கு மேக்கப் போடுவதற்காக உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்சியில் உள்ள அழகு நிலையத்திற்கு தனது சகோதரியுடன் வந்தார். மேலும், அந்த அழகு நிலையத்திற்கு உள்ளே சென்று காஜல் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார்.  அப்போது, அங்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முகத்தில் முகமூடி அணிந்து வெளியே நின்று கொண்டு, காஜலிடம் வெளியே வருமாறு கூறியுள்ளார். ஆனால், அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், அந்த நபர், ‘வெளியே வா காஜல், நீ எனக்கு துரோகம் செய்துவிட்டாய்’ என்று கூறியதாக கூறப்படுகிறது. 

ஆனாலும், அந்த பெண் வெளியே வர மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு காஜலை சரமாரியாக சுட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த காஜல் மயங்கி கீழே விழுந்தார். இதனிடையே, காஜலை துப்பாக்கியால் சுட்ட அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த காஜலின் சகோதரி, காஜலை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், காஜல் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். 

இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், இளம்பெண்ணை சுட்டுக்கொலை செய்தவர் தீபக்.  அந்தப் பெண் வசிக்கும் அதே ஊரில்தான் அவரும் வசித்து வந்துள்ளார். தீபக்கும், காஜலும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, காஜலுக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த தீபக், காஜலை சுட்டுக் கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, இளம்பெண்ணை சுட்டுக் கொன்ற தீபக்கை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருமணம் நடைபெறுவதற்கு முன்பு இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.