சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜசேகர். இவருக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு 27 வயதான இளம்பெண் ஒருவருடன் திருமணம் ஆனது. இணையதள திருமண தகவல் மையத்தின் மூலம் ராஜசேகருக்கு வரன் பார்க்கப்பட்டு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், பெண் வீட்டாரிடம் இருந்து வரதட்சனையாக 50 பாவுன் நகையும், 2 லட்சம் ரூபாய் ரொக்கமும் பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் திருமணமாகி ஐந்து வருட திருமண வாழ்க்கைக்கு பின் ராஜசேகரின் மனைவி, கணவன் தலையில் விக் வைத்து ஏமாற்றியதாக புகாரளித்துள்ளார்.
இதுகுறித்து கணவர் ராஜசேகர் நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது மனைவி திருமங்கலம் மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். அந்த புகாரில், இணையதள திருமண தகவல் மையத்தின் மூலம் ராஜசேகர் என்பவருடன் எனக்கு 26.9.2015-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது இணையதளத்தில் அவர் கொடுத்திருந்த புகைப்படத்தில் தலையில் முடி இருந்தது. இயற்கை முடி போல விக் இருந்ததால் எங்களால் அது விக் என கண்டுபிடிக்க முடியவில்லை. திருமணத்திற்காக 50 பவுன் நகையும், கார் வாங்க 2 லட்சம் ரூபாய் பணமும் பெற்றுக்கொண்டார். கணவர் ராஜசேகருக்கு தாம்பத்ய உறவு வைத்துக்கொள்வதில் ஈடுபாடு இல்லை. ஒருமுறை அவர் விக் இல்லாமல் இருந்தபொழுது பார்த்து அதிர்ந்தேன். இதுகுறித்து கேள்வி எழுப்பியபோதும், தன்னையும் தன் குடும்பத்தையும் ஏமாற்றியதால் கொடுத்த நகையை திரும்பக் கேட்டபோதும் அவரது தாய் ஜெகதா, தந்தை ஜெகநாதன், அக்காள் சுமதி மற்றும் கணவர் ராஜசேகர் ஆகியோர் அடித்து துன்புறுத்துகின்றனர் எனக்கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.