Skip to main content

ஹண்டேவின் அண்டப்புளுகும்! சைதை துரைசாமியின் சரடும்!

Published on 03/09/2018 | Edited on 04/09/2018
saithai


அது என்னமோ தெரியல, அப்பப்ப சர்ச்சையில சிக்கி படாதபாடு படுவதே சென்னை மாநகரத்தின் மாஜி மேயர் சைதை துரைசாமிக்கு பொழுது போக்காப் போச்சு. தி.மு.க.வின் மா.சுப்பிரமணியன் சென்னை மேயராக இருந்த போது, என்னென்ன பண்ணுனார், எதையெல்லாம் பண்ணல என ஒரு பட்டியலை வெளியிட்டார் சைதை துரைசாமி. இதற்கு பதிலடி கொடுத்த மா.சு., சென்னை மாநகரில் சைதை செய்த ஆக்கிரமிப்புகளைப் பட்டியலிட்டார். அதோடு சைலண்டானார் சைதை. சமீபத்தில் கூட ஒரு நில விஷயத்தில் சோழிங்கநல்லூர் மாஜி எம்.எல்.ஏ. கே.பி.கந்தனுக்கும் சைதை துரைசாமிக்கும் இடையே உரசல் ஏற்பட்டது.

சரி அந்த அரசியல் மேடையை விட்ருவோம். இப்ப சினிமா மேடைக்கு வருவோம். கடந்த 02—ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் பிரசாத் லேப்பில் ஒரு சினிமா ஃபங்ஷன் நடந்துச்சு. ‘எம்.ஜி.ஆர்’ என்ற டைட்டில் பெரிதாகவும் அதற்கு ஏ ஃபிலிம் ஆன் மக்கள் திலகம்’ என்ற சப்—டைட்டிலுடன் கூடிய படத்தின் டீசர் வெளியீட்டு விழா.

‘காமராஜ்’ –தி கிங் மேக்கர்’ என்ற பெயரில் பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கைப் படத்தை தயாரித்து இயக்கிய அ.பாலகிருஷ்ணன் தான் எம்.ஜி.ஆரின் வாழ்க்கையைத் தயாரித்து இயக்கிக் கொண்டிருக்கிறார். பாலகிருஷ்ணனின் தயாரிப்புக்கு கை கொடுப்பவர் அ.தி.மு.க. எம்.பி. டாக்டர் வேணுகோபால். எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த டாக்டர். எச்.வி.ஹண்டே, இரண்டு வருடங்கள் மட்டுமே எம்.எல்.ஏ.வாக இருந்தவரும் மனிதநேயம் அறக்கட்டளை சார்பாக ஐ.ஏ.எஸ்.பயிற்சி மையம் நடத்துபவருமான சைதை துரைசாமி, கவிஞர் பூவை செங்குட்டுவன், எம்.ஜி.ஆரின் ஹீரோயின் லதா, டாக்டர் பழனி ஜி. பெரியசாமி, ஜேப்பியாரின் மகள் உட்பட சிலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய டாக்டர் ஹண்டே எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட என்ஜிரியங் கல்லூரிகளால் தான், தமிழ்நாட்டில் இப்போது இளைஞர்கள் சந்தோஷமாக இருப்பதாகவும் அதன் பின் ஜெயலலிதா ஆட்சி செய்த 15 ஆண்டுகளில் கல்வி வளர்ச்சி அபரிதமாக இருந்ததாகவும் சொல்லிக் கொண்டே வந்தவர், இதில் கருணாநிதிக்கு கொஞ்சம் உரிமையில்லை. இன்னும் சொல்லப் போனால் கருணாநிதி முதல்வரானதே எம்.ஜி.ஆரால் தான். எனவே கருணாநிதி குடும்பம் அந்த நன்றியை மறக்கக் கூடாது என பிட்டையும் போட்டார் ஹண்டே. எம்.ஜி.ஆரைப் புகழ்வது ஹண்டேவுக்கு வாடிக்கையாக இருக்கட்டும், அதற்காக இப்போது கலைஞரைச் சீண்டுவது ஏன்?

ஹண்டேவின் இந்த அண்டப்புளுகும் தேவையில்லாமல் கலைஞரைச் சீண்டியதும் பலரை எரிச்சலாக்கியது. சென்னை தரமணி ராஜீவ் காந்தி சாலையில் டைட்டல் பார்க் என்ற ஐ.டி.கம்பெனி வளாகத்தை முதல்வராக இருந்த கலைஞர் தொடங்கி வைத்த பிறகு தான், ஓ.எம்.சாலை முழுவதும் ஐ.டி.கம்பெனிகளாலும் கம்ப்யூட்டர் என்ஜினியர்களாலும் நிரம்பி வழிந்தது. அதே போல் முதல் தலைமுறை பட்டதாரிகளை உருவாக்க முதல்வர் கலைஞர் கொண்டு வந்த திட்டத்தால் எத்தனை எத்தனை கிராமத்து இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேறியுள்ளனர். லட்சக்கணக்கான ஐ.டி.இளைஞர்கள், பட்டதாரி இளைஞர்கள் கலைஞரால் உருவாகியிருந்ததை, கலைஞரின் இறுதி ஊர்வலமே சாட்சி சொன்னது.

இதெல்லாம் டாக்டராக இருக்கும் ஹண்டேவுக்குத் தெரியாமல் போனது. எம்.ஜி.ஆரைச் சொன்னால் ஒத்துக் கொள்ளலாம், ஆனால் கல்வி வளர்ச்சிக்கு ஜெயலலிதா பாடுபட்டார்னு போட்டாரு பாருங்க அதைத் தான் ஜீரணிக்க முடியல.

அடுத்து மைக் பிடித்தார் சைதை துரைசாமி. மேடையில் மொத்தமே இருந்த ஏழு பேரின் பெயர்களைச் சொல்லவே இருபது நிமிடம் நீட்டி முழங்கிய சைதை துரைசாமி, அதன் பின் தான் மேட்டருக்கே வந்தார். “எம்.ஜி.ஆர்.நடித்த 134 படங்களிலும் நல்ல கருத்துக்கள் இருந்தன. வள்ளல் தன்மைக்கு உதாரணமாக இருந்தவர். சைதாப்பேட்டையில் நெசவுத் தொழிலாளர்கள் போராடிய போது, போராடியவர்களுக்கும் அவர்களின் வீட்டாருக்கும் சேர்த்து 20 ஆயிரம் பேருக்கு சாப்பாடு போட்டவர் எம்.ஜி.ஆர். பரமத்தி வேலூர் போன போது எனக்கு சீடை முறுக்கெல்லாம் கொடுத்து எனது பசியைத் தவிர்த்தவர். எம்.ஜி.ஆர். ஒரு அவதார புருஷர்” என்றெல்லாம் எம்.ஜி.ஆர். புகழ் பாடிக் கொண்டே வந்தவர், எங்கள் தங்கம்’ படத்திற்கு எம்.ஜி.ஆர். கால்ஷீட் கொடுத்ததை நினைவு கூர்ந்து முரசொலி மாறன் அப்போது பேசியதாக சரடு ஒன்றைவிட்டார் சைதை துரைசாமி.

“சினிமா எடுத்த வகையில் கையிலிர்ந்த பணமெல்லாம் கரைந்து விட்டது. வீடும் அடமானத்திற்குப் போய்விட்டது. அப்பொழுது புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரும் கலைச் செல்வி ஜெயலலிதாவும் கால்ஷீட் கொடுத்து எங்கள் தங்கம் படத்தை நடித்துக் கொடுத்தனர். அந்தப் படம் மூலம் கிடைத்த லாபத்தால் தான் எங்கள் வீடு மட்டுமல்ல, குடும்ப மானமும் காப்பாற்றப்பட்டது” செல்ஃபோன் வாட்ஸ்—அப் வாந்தியைப் பார்த்து படித்துக் கொண்டே, அப்போது அப்படி இருந்த கருணாநிதி, கலைஞர் கருணாநிதியின் குடும்பம் இப்போது உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருக்கு” என வாந்தி எடுத்து யாருக்கோ முதுகு சொறிந்தார்.

நாம் உடனே இது குறித்து தி.மு.க.சீனியர் ஒருவரிடம் கருத்து கேட்ட போது, “எம்.ஜி.ஆர். பத்துன சினிமா ஃபங்கஷனுக்கு போனோமா, அவரைப் பத்தி நாலு நல்ல வார்த்தை பேசுனோமா, போட்ட சால்வைய கையில வாங்குனோமான்னு இல்லாம சைதை துரைசாமிக்கு ஏன் இந்த வாந்தி எடுக்கும் வேலை? தலைவர் குடும்பத்தைப் பத்தி இவ்வளவு பேசுற சைதை துரைசாமி மட்டும் என்ன மன்னர் பரம்பரையா? வெறும் ரெண்டு வருஷம் மட்டும் எம்.எல்.ஏ.வா இருந்த சைதை துரைசாமியின் இன்றைய சொத்து மதிப்பு எவ்வளவுன்னு யாருக்காவது தெரியுமா?” என்றார் கொதிப்பாய்.

அடடா நாட்ல இந்த அள்ளிவிடுற கோஷ்டியோட தொல்லை தாங்க முடியலப்பா.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவிற்கு நாம்தான் வாரிசு” - எடப்பாடி பழனிசாமி

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
We are Jayalalitha  M.G.R. heir says Edappadi Palaniswami

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னையில் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நெய்வேலி நகர அ.தி.மு.க மற்றும் என்எல்சி அண்ணா தொழிற் தொழிலாளர்கள் ஊழியர்கள் சங்கம் சார்பில் நெய்வேலி டவுன்ஷிப் செவ்வாய் சந்தை அருகே ஜெயலலிதா முழு உருவ வெங்கல சிலை ரூபாய் 10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை ஒன்பது அடி உயரம் கொண்டது. பீடம் ஏழு அடியில் அமைந்துள்ளது. 

இந்த சிலை திறப்பு விழா நேற்று இரவு நடைபெற்றது. இதற்கு தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி கலந்துகொண்டு ஜெயலலிதா சிலையை திறந்து வைத்து பேசுகையில், “அ.தி.மு.கவை நிறுவிய எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களுக்கு வாரிசுகள் கிடையாது; நாம்தான் அவர்களுக்கு வாரிசு. நாட்டு மக்களுக்காக அவர்கள் உழைத்தார்கள். அதனால் தான் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அ.தி.மு.க உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் இயக்கம். அதனால் தான் இந்த இயக்கத்தை யாராலும் உடைக்க முடியாது.  

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. அதில் நாம் வெற்றி பெறுவதற்கு இங்கு கூடி உள்ளவர்களே சாட்சி. இதில் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என கூறுவார்கள்; இங்குள்ளவர்களின் முகத்தில் தெரியும் பிரகாசத்தை பார்க்கும் போது அது தெரிகிறது. எனவே கடலூர் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் வெற்றி பெறுவார் என தெரிகிறது.

நாங்கள் மக்களை நம்பி இருக்கிறோம்; மக்கள் சக்தி பெற்ற இயக்கம் அ.தி.மு.க.  இந்த இயக்கத்தை உடைக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எவ்வளவோ முயற்சி செய்தார். எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை நீதிமன்றத்தில் சந்தித்து வெற்றி காண்போம். ஆனால் தி.மு.க அமைச்சர்கள் பலர் வழக்கைக் கண்டு நடுங்கி கொண்டு இருக்கிறார்கள். அதிமுக 10 ஆண்டுகால ஆட்சியில் வாய்தா வாங்கிய இவர்கள் ஆட்சிக்கு வந்த பின் அவசர அவசரமாக வழக்கை நடத்தினார்கள்.

அ.தி.மு.க என்ற இயக்கத்துக்கு யார் துரோகம் செய்கிறார்களோ அவர்களுக்கு சிறை தான் தண்டனை; அதற்கு செந்தில் பாலாஜியே உதாரணம். சாதாரண செந்தில் பாலாஜியை அடையாளம் காட்டியது அ.தி.மு.க தான்,  நன்றி உள்ளவராக இருந்தால் கட்சிக்கு பணி செய்திருக்க வேண்டும். ஆனால் தீய சக்தியோடு சேர்ந்து மீண்டும் அமைச்சரானார். அவருக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இரண்டு தெய்வங்கள் இன்று வரை தக்க தண்டனையை கொடுத்துள்ளது. எனவே அ.தி.மு.க.வை உடைக்க நினைத்தாலும், துரோகம் விளைவித்தாலும் அவர்களுக்கு கிடைக்கும் தண்டனை சிறை தண்டனையாக தான் இருக்கும். 

கடலூர் மாவட்டத்தில் புயல் வெள்ளம் என்ற இயற்கை பேரிடர் காலத்தில் விவசாயிகளின் துன்பத்தை உடனடியாக போக்கியது அ.தி.மு.க அரசு.  விவசாயிகள் வாழ்க்கையில் ஏற்றம் பெற ஏராளமான திட்டத்தை கொண்டு வந்தோம். விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இந்த ஆட்சியில் இல்லை. எனவே கடலூர் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை காட்டுங்கள். தேர்தல் என்ற போர்வையில் எதிரிகளை ஓட ஓட விரட்டி வெற்றி காண்போம். வடலூர் வள்ளலார் பெருவெளியை தைப்பூசத்தின் போது 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்துகிறார்கள். இதில் தற்போது தி.மு.க அரசு அந்த நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து சர்வதேச மையம் அமைக்க உள்ளது. இதற்கு இப்பகுதியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மக்களின் கோபத்திற்கு தி.மு.க அரசு ஆளாகியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதே பகுதியில் உள்ள புறம்போக்கு இடத்தில் சர்வதேச மையத்தை அமைக்க வேண்டும்” என்றார்.

Next Story

“எடப்பாடி இதை செய்தால் நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” - ஆ. ராசா ஆவேசம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
 A. Rasa says If Edappadi does this, I will resign from my post

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பற்றி விமர்சித்ததாக, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசாவுக்கு எதிராக திருப்பூர் மாவட்டம் அவினாசியில் இன்று (09-02-24) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “மக்களுக்காக வாழ்ந்த எம்.ஜி.ஆரை பற்றி பேசுவதற்கு ஆ. ராசாவுக்கு என்ன தகுதி இருக்கிறது. அதிமுக கட்சி வளர்ச்சி பொறுக்காமல் இப்படி பேசுகிறார்.

நாட்டிற்காக உழைத்த தலைவர்களை அவதூறாகப் பேசுவதை கைவிட வேண்டும். இல்லையென்றால் ஆ. ராசா மக்களால் அடக்கப்படுவார். நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் ஆ.ராசா போட்டியிடுகிறார். அவரை மக்கள் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். எம்.ஜி.ஆரை பற்றி விமர்சனம் செய்தால் இதுதான் தண்டனை என்பதை அவர் உணர வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஆ.ராசா கோவையில் இன்று (09-02-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு யோக்கிதை இல்லை. எடப்பாடி பழனிசாமி சேர்ந்த முன்னாள் அமைச்சர், முதலமைச்சர் பற்றியும், கலைஞர் பற்றி என்னவெல்லாம் பேசினார்கள் என்று எல்லாருக்கும் தெரியும்.

அது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் இருக்கிறது. அதன் பிறகு, அதிமுக சார்பில் மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் கலை நிகழ்ச்சி என்கிற பெயரில் முதல்வர் குடும்பத்தை கேவலப்படுத்தினார்கள். இதற்கெல்லாம் அவர் வருத்தம் தெரிவித்து, தனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தால் நானும் வருத்தம் தெரிவித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று கூறினார்.