Skip to main content

மது அருந்த அனுமதிக்காத ஹோட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்! - சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி!

Published on 09/01/2021 | Edited on 09/01/2021

 

hotel incident in nagai

 

நாகையில் மது அருந்துவதற்கு அனுமதிக்காத ஹோட்டல் உரிமையாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதோடு, கடையை அடித்து நொறுக்கி துவம்சம் செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

 

நாகை செம்மரக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ஜாஹிர் உசேன். இவர் தோணித்துறை சாலையில் கடந்த 30 ஆண்டுகளாக ஹோட்டல் நடத்திவருகிறார். நேற்று இரவு 10 மணியளவில் கடையை மூடும் நேரத்தில் ஹோட்டலில் சாப்பிட்ட (நாகை அக்கரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த) நிவாஸ் மற்றும் சிலம்பு ஆகியோர் ஆம்லெட் கேட்டுக்கொண்டே, இடுப்பில் மறைத்து வைத்திருந்த மதுபாட்டிலை எடுத்து கடையிலேயே திறந்து மது அருந்தியுள்ளனர். இதைப் பார்த்த கடை உரிமையாளர், ''இங்க மது குடிக்க அனுமதி இல்லை, தயவுசெய்து கிளம்புங்க'' எனக் கூறியுள்ளார். ஆனாலும் அவர்கள் வெளியேபோக மறுத்து தகராறு செய்துள்ளனர். இதனால் கடைக்காரருக்கும், மது குடிக்க வந்தவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

 

அங்கிருந்து புறப்பட்டுச் சென்றவர்கள் மீண்டும், தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு வந்து, ஹோட்டலை அடித்து நொறுக்கி துவம்சம் செய்தனர். கடை கண்ணாடி, மேசை, சிசிடிவி கேமராக்கள் என எதையும் விட்டுவைக்காமல் அடித்து நொறுக்கினர். அவர்களது அராஜகக் காட்சிகள் முழுவதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதோடு கடை உரிமையாளர் ஜாஹிர் உசேன் மற்றும் மாஸ்டர் அப்துல்லா கான் ஆகிய இருவரையும் தாக்கியதோடு, கல்லாவில் இருந்த 12,500 ரூபாய் பணத்தையும் எடுத்துச் சென்றனர். அதோடு நிறுத்திக்கொள்ளாமல் கடை உரிமையாளரின் வீட்டிற்குச் சென்ற அந்த கும்பல் வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கினர்.

 

தலை, கை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுக் காயமடைந்த கடை உரிமையாளர் ஜாஹிர் உசேன் மற்றும் மாஸ்டர் அப்துல்லா கான் ஆகியோர் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

நாகையில் மது அருந்த அனுமதிக்காத ஹோட்டல் உரிமையாளரை தாக்கி ஹோட்டலை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சா போதையால் கூலித் தொழிலாளி பெண்ணை கோயிலில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் அடங்குவதற்குள், இந்தச் சம்பவம் நடந்திருப்பது நாகை பகுதியில் 'சட்டம் ஒழுங்கு' என்ன ஆனது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்; குற்றவாளிகளின் விவரங்கள் வெளியீடு!

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
new information released by nia for bengaluru hotel incident 

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) மூன்று மாநிலங்களில் உள்ள பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது. இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) நேற்று முன்தினம் (27.03.2024) மூன்று மாநிலங்களில் பல இடங்களில் சோதனைகளை மேற்கொண்டது. கர்நாடகாவில் 12, தமிழ்நாட்டில் 5 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் ஒன்று உட்பட மொத்தம் 18 இடங்களில் என்.ஐ.ஏ. குழுக்கள் சோதனை செய்த பின்னர் முஸம்மில் ஷரீப் கைது செய்யப்பட்டு துணை குற்றவாளியாக காவலில் வைக்கப்பட்டார். 

new information released by nia for bengaluru hotel incident 

இந்நிலையில் பெங்களூரு குண்டு வெடிப்பில் தேடப்பட்டு வரும் முஷாவீர் ஹுசைன் ஷாஹிப், அப்துல் மதீன் அகமது தாஹா, ஆகியோரின் புகைப்படத்தையும், இவர்கள்  இருவர் பற்றிய தொடர்புடைய முழு விபரங்களையும் என்.ஐ.ஏ. வெளியிட்டுள்ளது. மேலும் இவர்கள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் தெரிவிக்க விரும்புபவர்கள் info.blr.nia@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, 08029510900, 8904241100 என்ற தொலைபேசி எண்களுக்கோ தெரிவிக்கலாம் என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. 

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.