Skip to main content

சினிமா பாணியில் 12 கோடி ரூபாய் நகைகள் கொள்ளை; திசை திருப்பிய கொள்ளையர்கள்... காட்டிக்கொடுத்த ஜிபிஎஸ்... பிடிபட்ட 9 பேர் கும்பல்!

Published on 24/01/2021 | Edited on 24/01/2021

 

hosur muthoot finance incident police investigation


ஓசூரில் சினிமா பாணியில், பிரபல தனியார் நகை அடகு நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் 12 கோடி ரூபாய் நகைகளை கொள்ளை அடித்த வடமாநில கும்பலை பதினெட்டே மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். கொள்ளையர்கள் நூதனமுறையில் போலீசாரின் கவனத்தை திசை திருப்பினாலும், ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் மூலம் அவர்களை மடக்கிப் பிடித்த பரபரப்பு பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்- பாகலூர் சாலையில் முத்தூட் பைனான்ஸ் என்ற தனியார் நகை அடகு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தங்க நகைகளுக்கு அடமானத்தின்பேரில் கடன் வழங்கப்படுகிறது. 


இந்நிறுவனத்தின் கிளை மேலாளராக சீனிவாச ராவ் என்பவர் உள்ளார். மாருதி (24), பிரசாந்த் (29) ஆகியோர் அலுவலக ஊழியர்களாகவும், ராஜேந்திரன் (55) என்பவர் பாதுகாவலராகவும் (செக்யூரிட்டி) பணியாற்றி வருகின்றனர். 


ஜன. 22- ஆம் தேதி காலை 09.30 மணியளவில், சீனிவாச ராவ், மாருதி, பிரசாந்த், ராஜேந்திரன் ஆகியோர் நிதி நிறுவனத்தைத் திறந்து உள்ளே சென்றனர். அப்போது நகைகளை அடமானம் வைப்பதற்காக 3 பேர் வந்திருந்தனர். அவர்களிடம் ஊழியர்கள் பேசிக்கொண்டிருந்த நேரத்தில், ஹெல்மெட் அணிந்த நிலையில் 2 பேர் உள்ளே நுழைந்தனர். 


சில வாடிக்கையாளர்கள் ஹெல்மெட்டை வண்டியில் விட்டுவிட்டு வந்தால் யாரேனும் தூக்கிச்சென்று விடுவார்கள் என்பதால் அப்படியே தலையில் மாட்டியபடி அலுவலகத்திற்குள் வருவதும், அங்கு வந்த பின்னர் கழற்றி வைப்பதும் உண்டு. அதனால் ஹெல்மெட் மாட்டியபடி வந்த 2 பேரும் வாடிக்கையாளர்களாக இருக்கலாம் என ஊழியர்கள் கருதி விட்டனர். 


சற்று நேரத்தில் மேலும் மூன்று பேர் அங்கு வந்தனர். அவர்கள் கையில் துப்பாக்கி, கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்ததால் வாடிக்கையாளர்களும், ஊழியர்களும் பதற்றம் அடைந்தனர். மர்ம நபர்கள், நிதி நிறுவனத்தின் வாயில் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டனர். உள்ளே இருந்த வாடிக்கையாளர்கள், ஊழியர்களைத் துப்பாக்கி முனையில் மிரட்டி இருக்கையில் அமர்த்தி, கைகளை பின்பக்கமாக கட்டிப்போட்டு, வாயில், பார்சல் கட்டப் பயன்படுத்தப்படும் டேப் போட்டு ஒட்டினர். 

hosur muthoot finance incident police investigation


அந்த கும்பல், ஊழியர்களைச் சரமாரியாக தாக்கினர். மேலாளரிடம் இருந்த லாக்கர் சாவிகளை எடுத்துச்சென்று, லாக்கர்களைத் திறந்தனர். அவற்றில் இருந்த 25 கிலோ நகைகள், கல்லா பெட்டியில் இருந்த 96 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பெரிய பெரிய பைகளில் அள்ளிப்போட்டுக்கொண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றனர்.


கொள்ளையர்களில் இருவர் ஊழியர்களுக்கு காவலாக நின்று கொண்டனர். லாக்கரில் நகைகளை கொள்ளை அடிக்கும் வேலையில் ஒருவரும், மற்றொருவர் வாயில் கதவுக்கு வெளியிலும் நின்றிருந்தனர். கொள்ளையர்கள் திட்டமிட்டு, விரல் ரேகை அடையாளம் பதிந்து விடக்கூடாது என்பதற்காக கையுறைகளை அணிந்து வந்திருந்தனர். முகமூடியும் போட்டிருந்தனர். இக்காட்சிகள் அனைத்துமே முத்தூட் நிறுவனத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்தன. 


கொள்ளை போன நகைகளின் இன்றைய மதிப்பு சுமார் 12 கோடி ரூபாய் இருக்கும் என்றார்கள் ஊழியர்கள். 

hosur muthoot finance incident police investigation


சினிமா பணியில் நடந்த இந்த பரபரப்பு கொள்ளை குறித்து தகவல் அறிந்த ஓசூர் ஹட்கோ போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். சேலம் சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. பண்டி கங்காதர் ஆகியோரும் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணையை தீவிரப்படுத்தினர். கொள்ளையர்களை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.


கொள்ளையர்களிடம் இருந்த செல்போன் சிக்னல் டவரை வைத்து, அவர்கள் கர்நாடகா மாநிலத்தில் பதுங்கி இருக்கலாம் என முதலில் தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் கர்நாடகாவில் ஆணேக்கல், சந்தாபுரம், கோலார் ஆகிய பகுதிகளில் சல்லடை போட்டு தேடினர். இரு மாநில எல்லையோர போலீசாரையும் உஷார்படுத்தினர்.


ஆனால் கர்நாடகாவில் அந்த கும்பல் இல்லை என்பதும், அவர்கள் போலீசாரின் கவனத்தை திசை திருப்பிவிட்டு தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்குச் சென்றிருப்பதும் தெரிய வந்தது. சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது வடமாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என்பதால், அந்த கும்பல் லாரிகளில் சொந்த மாநிலத்திற்குச் தப்பிச்செல்ல வாய்ப்பு இருப்பதாக கருதியது போலீஸ். இதையடுத்து ஹைதராபாத் போலீசாரின் உதவியை நாடிய கிருஷ்ணகிரி போலீசார், வாகனத் தணிக்கையை தீவிரப்படுத்தும்படி கோரினர். 

hosur muthoot finance incident police investigation


ஹைதராபாத் ரிங் ரோடு பகுதியில் வாகனத் தணிக்கை நடந்தபோது, ஷேகிதாபாத் ரிங் ரோடு வழியாக ஒரு கண்டெய்னர் லாரி வந்தது. அதை மடக்கி சோதனை செய்தனர். ஓட்டுநரிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணான தகவல்களைச் சொன்னார். ஆனால் குறிப்பிட்ட அந்த லாரியில்தான் கொள்ளை போன தங்கம் இருப்பதாக தமிழக போலீசாருக்கு உறுதியான தகவல் கிடைத்து இருந்ததால், லாரியை தீவிரமாக சோதனையிட கேட்டுக்கொண்டனர்.


தீவிர சோதனையில், லாரியில் ரகசிய அறை அமைத்து அதில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை பெரிய பெரிய பைகளில் போட்டு வைத்திருப்பது தெரிய வந்தது. அந்த லாரியில் இருந்த 4 பேரை பிடித்து விசாரித்தபோது அவர்கள்தான் ஓசூரில் முத்தூட் பைனான்ஸ்சில் கொள்ளை அடித்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. 

hosur muthoot finance incident police investigation


இதையடுத்து உடனடியாக கொள்ளையர்கள் 4 பேர், லாரி ஓட்டுநர் ஆகிய 5 பேரையும் தெலங்கானா போலீசார்  கைது செய்தனர். அந்த லாரியை ஒரு கார் பின்தொடர்ந்து வந்தது. சந்தேகத்தின்பேரில் காரில் வந்த 4 பேரை பிடித்து விசாரித்தபோது, அவர்களும் ஓசூர் சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். ஓசூர் கொள்ளை சம்பவத்தில் இதுவரை மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 

 

அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 25 கிலோ நகைகள், ரொக்கம் மற்றும் 7 கைத்துப்பாக்கிகள், 96 தோட்டாக்கள், கத்திகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். கொள்ளையர்கள் தப்பிச்செல்ல பயன்படுத்திய லாரி, கார், மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 


பிடிபட்டவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் ரூப்சிங் பகால், அமீத், சங்கர் சிங் பாகல், பவன் குமார், புபேந்தர் மஞ்சி, விவேக் மண்டல், டீக்ராம், ராஜிவ்குமார், லூயில் பாண்டே ஆகியோர் என்பது தெரிந்தது.

hosur muthoot finance incident police investigation

கொள்ளையர்கள் பிடிபட்டது எப்படி?:


எப்பேர்பட்ட கில்லாடி திருடனாக இருந்தாலும் ஏதாவது ஒரு தடயத்தை விட்டுவிட்டுப் போவான் என்பதுதான் காவல்துறைக்குச் சொல்லப்படும் பாலபாடம். இதை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட தமிழக காவல்துறையினர், முத்தூட் நிறுவன உயரதிகாரிகளிடம் விசாரித்தபோது முக்கிய தகவல் கிடைத்தது.


அதாவது, திருட்டு சம்பவங்கள் நடந்தால் காணாமல் போன நகைகள் எங்கே உள்ளன என்பதைக் கண்டுபிடிக்க அடமானமாகப் பெறப்பட்ட நகைகளை தனித்தனியாக பேக்கிங் செய்து முத்தூட் நிறுவனம் வைத்திருந்தது. சில பேக்கிங் கவரில், இருக்கும் இடத்தை காண்பிக்கக் கூடிய ஜிபிஎஸ் 'சிப்' பொருத்தப்பட்டு இருந்தது. இந்த ஜிபிஎஸ் 'சிப்'தான் கொள்ளையர்களுக்கு எமனாக மாறியது. 

hosur muthoot finance incident police investigation


அதேநேரம், கொள்ளையர்களும் தப்பித்துச் செல்லும்போது, புத்தசாலித்தனமாக நிதி நிறுவன ஊழியர்களிடம் செல்போன்களை பறித்துச் சென்றுள்ளனர். அந்த செல்போன் எண்களின் சிக்னலை எப்படியும் போலீசார் டிரேசிங் செய்வார்கள் என கருதிய அவர்கள், போலீசாரை திசை திருப்பும் நோக்கில் கர்நாடகா மாநிலத்திற்குச் சென்று, அங்கே செல்லும் வழியிலேயே அந்த செல்போன்களை தூக்கி வீசியெறிந்துவிட்டு, அங்கிருந்து லாரியில் தெலங்கானா வழியாக சொந்த மாநிலத்திற்குச் செல்ல முயன்றுள்ளனர். என்னதான் அவர்கள் புத்திசாலியாக இருந்தாலும், ஜிபிஎஸ் 'சிப்' மூலம் அவர்கள் போலீசாருக்கு தாங்கள் செல்லும் இடத்தை தங்களை அறியாமலேயே நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டே போகிறோம் என்பதை அவர்கள் கொஞ்சமும் அறிந்திருக்கவில்லை. 

hosur muthoot finance incident police investigation


விசாரணையில் அவர்கள் மத்தியபிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இச்சம்பவம் நடந்த இடத்தில் 5 பேர் மட்டுமே இருந்துள்ளனர். ஆனால், லாரி ஓட்டுநர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதனால் மேலும் யார் யாருக்கெல்லாம் இதில் தொடர்பு உள்ளது?; இந்த கும்பல் வேறு எந்தெந்த குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்? என்று கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காக அவர்கள் விரைவில் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்படும் எனத் தெரிகிறது. 


கொள்ளைச் சம்பவம் நடந்த 18 மணி நேரத்திற்குள் தமிழக போலீசார், தெலங்கானா போலீசார் உதவியுடன் கொள்ளையர்களை மடக்கிப் பிடித்து அசத்தியுள்ளனர். இதற்காக அவர்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டி, வாழ்த்து தெரிவித்துள்ளார். 

hosur muthoot finance incident police investigation


முதல்வர் பாராட்டு:


இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ''தமிழ்நாடு காவல்துறையினரின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கி வரும் முத்தூட் நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற கொள்ளையில் திருடு போன 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ தங்கத்தையும் கொள்ளையர்களையும் துரிதமாக செயல்பட்டு, 18 மணி நேரத்தில் பிடித்த தமிழ்நாடு காவல்துறையினருக்கு குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறைக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்று வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4.8 கோடி பறிமுதல்; பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

முன்னதாக கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் தொகுதி பாஜக வேட்பாளர் கே. சுதாகருக்கு நெருக்கமானவர் வீட்டில், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ. 4.8 கோடியை பாஜக வேட்பாளர் சுதாகர் பயன்படுத்த இருந்ததாக பறக்கும்படை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து சுதாகர் மீது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றவியல் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் மாதநாயகனள்ளி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ராஜேஷ் தாஸ் குற்றவாளி! சரணா? கைதா? - இறுதிக்கட்டத்தில் பாலியல் வழக்கு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police are serious to arrest the accused Rajesh Das

கடந்த அதிமுக ஆட்சியில் சிறப்பு டிஜிபியாக இருந்தவர் ராஜேஷ் தாஸ். அவர், அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் டெல்டா மாவட்ட சுற்றுப்பயணத்தை கவனித்துக் கொண்டார். அப்போதைய முதல்வருடன் டெல்டா மாவட்டத்துக்கு பாதுகாப்பு பணியை மேற்கொள்ள ராஜேஷ் தாஸ் உடன் சென்றிருந்தார். அப்போது, மரியாதை நிமித்தமாக டெல்டா மாவட்டத்தில் பணியாற்றிய பெண் எஸ்.பி ஒருவர் ராஜேஷ் தாஸை சந்தித்துள்ளார். ஆனால், அதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ராஜேஷ் தாஸ் காரில் வைத்து பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதைச் சற்றும் எதிர்பாராத அந்த பெண் எஸ்பி புகார் அளிக்க சென்னை சென்றார். அப்போது, வழியில் மறித்த அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி கண்ணன் ராஜேஷ் தாஸுக்கு ஆதரவாக சமாதானம் பேசி பெண் எஸ்பியிடம் கட்டப் பஞ்சாயத்து செய்துள்ளார். இப்படி, பல மிரட்டலையும் மீறி பாலியல் தொல்லைக்கு ஆட்பட்ட பெண் எஸ்பி, அப்போதைய டிஜிபி திரிபாதியைச் சந்தித்து தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து துணிச்சலுடன் புகார் அளித்தார். இதையடுத்து, ராஜேஷ் தாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு அவர் சஸ்பெண்டும் செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் ராஜேஷ் தாஸுக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதில், பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியை தடுத்து புகார் அளிக்க இடையூறு செய்த அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி கண்ணனுக்கு 500 ரூபாய் மட்டும் அபராதம் விதிக்கப்பட்டது.

இதையடுத்து, விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றமும் ராஜேஷ் தாஸுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்தது. ஆனால், ராஜேஷ் தாஸ் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும், சரணடைவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், காவல்துறையினர் குடிமக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். ஆனால், ராஜேஷ் தாஸ் காவல்துறையின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் செயல்பட்டிருக்கிறார். இதன் காரணமாக, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதனால், ராஜேஷ் தாஸ் சிறை செல்வது உறுதியானது. இதையடுத்து, வழக்கை விசாரணை செய்து வந்த சிபிசிஐடி போலீஸார் பாலியல் குற்றவாளி ராஜேஷ் தாஸை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, தண்டனை தீர்ப்பு உறுதியான பிறகு ராஜேஷ் தாஸ் வடமாநிலங்களில் தலைமறைவாக இருந்ததாக சொல்லப்பட்டது. அவரை பிடிக்க போலீசார் அங்கு விரைந்தனர். ஆனால், அதற்குள் ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் அவரைப் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது தண்டனை உறுதியானதால் ராஜேஷ் தாஸ் எங்கு இருக்கிறார் என்று தனிப்படை போலீஸார் விசாரணை செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ராஜேஷ் தாஸ் நீதிமன்றத்தில் சரண் அடையலாம் என்றும், அப்படி இல்லை என்றால் உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, ராஜேஷ் தாஸ் வழக்கு குறித்து சட்ட நிபுணர்களுடனும், காவல்துறை உயரதிகாரிகளுடனும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, போலீசாரின் தேடுதல் வேட்டை தீவிரமடைந்திருப்பதால் ராஜேஷ் தாஸ் தலைமறைவாக இருந்தாலும், கைது செய்யப்படுவார் என சிபிசிஐடி காவல் துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.