Skip to main content

அசாம் விபத்தில் படுகாயமடைந்த இளைஞர், ரயில் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அழைத்துவரப்படுகிறார்...

Published on 30/09/2019 | Edited on 30/09/2019

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த முத்துராமன் என்ற இளைஞர் கடந்த வாரம் தனது நண்பருடன் அசாம் மாநிலம் சென்றார். அங்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் முத்துராமனும், அவரது நண்பரும் படுகாயமடைந்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

 

hospitalized man shifted by rail ambulance from assam to puthukottai

 

 

சுயநினைவின்றி சிகிச்சை நடந்து வந்த நிலையில், தகவல் அறிந்து முத்துராமனின் சகோதரர் அங்கு சென்று தம்பியின் நிலையறிந்து மருத்துவர்களிடம் கேட்ட போது, எங்களிடம் உள்ள வசதிகளை வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவனைக்கு கொண்டு சென்றால் கூடுதல் சிகிச்சை கொடுக்க முடியும் என்று கூறியுள்ளனர்.

இதனால் டெல்லி கொண்டு செல்ல முடியாமல் தவித்த சகோதரர் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சிவகங்கை தொகுதி எம் பி கார்த்தி ப சிதம்பரம், திருச்சி எம்பி திருநாவுக்கரசர் ஆகியோரிடம் உதவிகள் கேட்டிருந்தார்.

6 நாட்களுக்கு மேலும் முன்னேற்றம் இல்லாததால் தனி ஒருவனாக அசாமில் எதையும் செய்ய முடியாமல் தவித்த சகோதரர் தனது தம்பியின் உயிரை காக்க தனியார் முகவர்கள் மூலம் ரூ 1.20 லட்சம் செலுத்தி ஞாயிற்றுக் கிழமை காலை 5.30 மணிக்கு ரயில் ஆம்புலன்ஸ் மூலம் தனது தம்பி முத்துராமனை கொண்டு வந்து கொண்டிருக்கிறார். செவ்வாய்கிழமை அதிகாலை ரயில் சென்னை வந்தடைய உள்ளது. அதன் பிறகு தமிழக அரசு மருத்துவமனையான ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட உள்ளார்.

இது குறித்து முத்துராமனின் உறவினர்கள், " அசாமில் தனி நபராக எதுவும் செய்ய முடியாமல் தவித்து சென்னை கொண்டு வருகிறார். சென்னை கொண்டு வந்த உடன் அவசர சிகிச்சை அளித்து முத்துராமன் உயிரை காப்பாற்ற தமிழக அரசு உதவி செய்ய வேண்டும்" என்றனர் கண்ணீருடன்.

முத்துராமனுக்கு சிகிச்சை அளிக்க மக்கள் நல்வாழ்வுத்துறை தயாராக இருப்பதாக அமைச்சர் தரப்பில் கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“2019ல் நம்பிக்கையோடு வந்தேன், 2024ல்...” - பிரதமர் மோடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 PM Modi campaign and says he came with confidence in 2019 at assam

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 14 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி, முதற்கட்ட தேர்தலானது வரும் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலானது ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தலானது மே 7ஆம் தேதியும் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள சில தொகுதிகளில் நடைபெறும் முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் (19-04-24) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும், வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று(17-04-24) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர், “இன்று நாடு முழுவதும் மோடியின் உத்தரவாதம் நடந்து கொண்டிருக்கிறது. மோடியின் உத்தரவாதத்திற்கு வடகிழக்கு பகுதியே சாட்சி.

70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை வசதிகள் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தேன். அவர்களின் சிகிச்சையை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் பார்த்துக்கொள்வேன். பி.எம். கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் இங்குள்ள விவசாயிகள் ரூ.1000க்கு மேல் பெற்றுள்ளனர். இப்போது, ​​பாஜக இந்தத் திட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளது, இதன் மூலம் அசாமின் விவசாயிகளுக்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் உதவி மற்றும் அதிகாரம் அளிக்கிறது.

2014ஆம் ஆண்டில் எதிர்பார்ப்புடன் மக்களைச் சந்திக்க வந்தேன். 2019ஆம் ஆண்டில் நம்பிக்கையோடு வந்தேன். தற்போது 2024ல் உத்தரவாதத்தோடு வந்திருக்கிறோம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அணுகி அவர்களுக்குத் தகுதியான வசதிகளை வழங்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு மேலும் 3 கோடி புதிய வீடுகள் கட்டித் தரப்படும். பாகுபாடின்றி அனைவருக்கும் அவை கிடைக்கும்” என்று கூறினார்.

Next Story

“கட்சியின் அணுகுமுறை சரியில்லை” - காங்கிரஸ் எம்.பி. ராஜினாமா!

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
Congress MP resigns in assam

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. இதனிடையே, நாளை (16-03-24) மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

தி.மு.க, பா.ஜ.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள், கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது. பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், தங்கள் கட்சி வேட்பாளர்களை ஒவ்வொரு கட்டமாக அறிவித்து வருகின்றன. தி.மு.க, கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து வேட்பாளர் தேர்வை முன்னெடுத்துள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகிறது. 

பா.ஜ,க மற்றும் காங்கிரஸ் கட்சிகள், மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு, அரசியல் வட்டாரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாத மூத்த தலைவர்கள், சிட்டிங் எம்.பிக்கள் என ஒவ்வொருவரும் கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டு வேறு கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு ஹரியானா பா.ஜ.க எம்.பியான பிரிஜேந்திர சிங், பா.ஜ.கவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பே அடுத்த நாளிலேயே, ராஜஸ்தான் பா.ஜ.க எம்.பி ராகுல் கஸ்வான் அக்கட்சியில் இருந்து விலகியும், எம்.பி பதவியை ராஜினாமா செய்தும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ஒருவர் கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். அசாம் மாநிலத்தில் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. 14 மக்களவைத் தொகுதி கொண்ட அசாம் மாநிலத்தில், காங்கிரஸ் கட்சிக்கு 3 எம்.பி.க்கள் ஏற்கனவே உள்ளனர். இதில், 2 எம்.பிக்களுக்கு வரவிருக்கும் 2024 ஆம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட மீண்டும் கட்சி வாய்ப்பு அளித்திருக்கிறது. 3வது எம்.பியாக உள்ள அப்துல் காலிக்கிற்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

அசாம் மாநிலத்தில், இதுவரை 2 முறை எம்.எல்.ஏவாகவும், ஒரு முறை எம்.பியாக பதவி வகித்து வந்த அப்துல் காலிக், தற்போது தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாததால் அவர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து இன்று (15-03-24) அப்துல் காலிக் ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து, தனது ராஜினாமா கடிதத்தை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அவர் அனுப்பியுள்ளார். 

அவர் அளித்திருந்த அந்த கடிதத்தில், ‘எனக்கு கொடுக்கப்பட்ட கடமைகளை முழு மனதுடன் நிறைவேற்றினேன். எனக்கு ஆதரவாக நின்ற எனது தொகுதி மக்களுக்கும், கட்சியினருக்கும், கட்சி தொண்டர்களுக்கும் அளவற்ற நன்றியையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகத்தைப் பாதுகாக்க, மக்கள் சுதந்திரம், சுயமரியாதை மற்றும் ஒருமைப்பாட்டின் தீவிர உணர்வைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஒரு காலக்கட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரின் அணுகுமுறையும், அசாமில் கட்சியின் வாய்ப்பை அழித்துவிட்டதாக நான் உணர்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.