![Holiday notice for Thoothukudi Tirunelveli students](http://image.nakkheeran.in/cdn/farfuture/fd5o08IJYHCpLBhwSo50yGo13zMzl2fypI6JpfONLK0/1703165486/sites/default/files/inline-images/sa-rain-art-1_2.jpg)
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள், கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் மாநிலப் பேரிடர் மீட்புக் குழு, தேசியப் பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத்துறை, காவல்துறையினர் மற்றும் அனைத்து அரசுத் துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதே சமயம் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. தற்போது பல இடங்களில் வெள்ள நீர் வடியத் துவங்கியுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து 5வது நாளாக நாளையும் (22.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ள பாதிப்பு காரணமாகத் திருநெல்வேலி மாவட்டத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு நாளை ஒரு நாள் மட்டும் (22.12.203) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதே சமயம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நாளை (22.12.2023) பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் புத்தகங்களை இழந்த மாணவர்கள் நாளை (22.12.2023) அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் விவரத்தைப் பதிவு செய்து கொண்டால் விரைவாகப் புதிய புத்தகங்கள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.