மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தபோது, அந்தச் சட்டத்திற்கு ஆதரவாக சட்டமன்றத்திலிருந்து அதிமுக கட்சியினர் வெளியேறிருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது. இது மன்னிக்க முடியாத குற்றம் என்று கொந்தளிக்கிறார்கள் விவசாயிகளும் பொதுமக்களும். இதுகுறித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறுகையில், “பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு விவசாயிகளுக்கு விரோதமான மூன்று சட்டங்களைக் கரோனா பெருந்தொற்று காலத்தில் மாநில அரசுகள் மற்றும் விவசாயிகளின் கருத்து அறியாமல் கொண்டு வந்தனர்.
மேலும் கூட்டாட்சித் தத்துவத்துக்கு முரணாக விவசாயிகளுக்கு எதிராக, முதலாளித்துவ பெரும் நிறுவனங்களுக்காக சட்டத்தை வேளாண் சட்டம் என்கிற பெயரில் பாராளுமன்றத்தில் விவாதமின்றி நிறைவேற்றினர். இந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய விவசாயிகள் தொடர்ந்து 11 மாத காலமாக வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தை டெல்லியில் இன்றுவரை நடத்திவருகிறார்கள். இதுநாள்வரையிலும் மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தைத் திரும்பப்பெற மறுத்துவருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தானே முன்மொழிந்து வேளாண் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார். இது வரலாற்று சிறப்புமிக்க தீர்மானமாக இருக்கிறது. விவசாயிகள் சார்பில் முழுமனதோடு பாராட்டுகிறோம்.
இதன்மூலம் இந்திய விவசாயிகளுக்கு விடியல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அதே நேரம் இந்தச் சட்டம் கொண்டுவருவதற்கு அடிப்படையாக துணைநின்று, அங்கு வாக்களித்து கொண்டுவர உதவி புரிந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியும், அவர்களது கட்சியும் இவர்களின் செயல்பாட்டால் தமிழ்நாடு விவசாயிகள் உலக அரங்கில் தலைகுனியும் நிலையை ஏற்படுத்தியது. இப்போது வேளாண் சட்டத்திற்கு எதிராக நிறைவேற்றுகிற தீர்மானத்தை ஆதரித்திருந்தால் அதிமுக செய்த தவறை சரி செய்துகொண்டது என விவசாயிகள் அதிமுகவை மன்னித்துவிடுவார்கள். மீண்டும், மீண்டும் அந்தச் சட்டத்திற்கு ஆதரவாக சட்டமன்றத்திலிருந்து அதிமுக கட்சியினர் வெளியேறி இருப்பது வேதனை அளிக்கிறது, இது வன்மையாக கண்டிக்கதக்கது. இது மன்னிக்க முடியாத குற்றம். அதிமுக தொடர்ந்து தமிழக விவசாயிகள் மத்தியில் அன்னியப்படுகிறோம் என்பதை உறுதிப்படுத்துகிறது” என்கிறார்.