Skip to main content

ஜெயலலிதா செலுத்தவேண்டிய வரி விவரங்களைத் தாக்கல் செய்யக் கோரிய வழக்கு! – வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு!

Published on 04/01/2021 | Edited on 04/01/2021

 

highcourt jayalalitha income tax


மறைந்த முதல்வர் ஜெயலலிதா செலுத்தவேண்டிய நிலுவை வரி விவரங்களை, தாக்கல் செய்யக் கோரிய வழக்கில், வருமான வரித்துறை பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


போயஸ் தோட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் வீட்டை, அவரது நினைவில்லமாக மாற்ற கடந்த 2017ஆம் ஆண்டு அரசு முடிவெடுத்தது. இதற்கு அவரது அண்ணன் வாரிசுகளான தீபாவும் தீபக்கும் ஆட்சேபனை தெரிவித்து, தாங்களே அவரது வாரிசுகள் என வழக்கு தொடர்ந்தனர்.


அதேபோல, நினைவில்லமாக மாற்ற ஆட்சேபனை தெரிவித்த போயஸ் தோட்டம் - கஸ்தூரி எஸ்டேட் குடியிருப்பினர் சார்பாக, ஜெயலலிதா சொத்துகளுக்கு நிர்வாகியை நியமிக்கக் கோரி தொடர்ந்த வழக்குகளையும் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஜெயலலிதாவின் 188 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்கும் உரிமையை தீபா, தீபக் ஆகியோர் தரப்புக்கு வழங்கியதோடு, அவர்களை முதல்நிலை சட்டப்பூர்வ வாரிசுதாரர்கள் என அறிவித்தது.


வழக்கு விசாரணையின் போது, வருமானவரித்துறை தரப்பு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து, தங்களுக்கு 36.9 கோடி ரூபாய் வரி பாக்கி இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில், நினைவில்லமாக மாற்ற ஏதுவாக, தீபா, தீபக் ஆகியோருக்கு சேரவேண்டிய இழப்பீட்டை வழங்கும் வகையிலும், வருமான வரித்துறைக்குச் செலுத்தவேண்டிய வரியைச் செலுத்தும் வகையிலும், தமிழக அரசு சார்பில் சென்னை மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் 67.9 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது. 


அதன்படி, வேதா நிலையம் அமைந்துள்ள இடத்திற்கு 29.3 கோடி ரூபாய், கட்டிடத்திற்கு 2.7 கோடி ரூபாய் என 32 கோடி ரூபாயை தீபா, தீபக் தரப்புக்கு தரவும், 36.9 கோடி ரூபாய் வரி பாக்கியை வருமான வரித்துறைக்கு தரவும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.


இந்த நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு உள்ள வருமான வரி பாக்கி, சொத்து வரி பாக்கி உள்ளிட்டவை தொடர்பான அனைத்து விவரங்களையும் தங்கள் தரப்புக்கு வழங்கக் கோரி, தீபக் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

 
இந்த வழக்கு, நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுதர்சனம், ‘‘கடந்தாண்டு ஜூலை மாதமே, இதே கோரிக்கையுடன் வருமான வரித்துறையிடம் மனு அளித்தோம். அந்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன் காரணமாகவே நீதிமன்றத்தை நாடியுள்ளோம்" எனத் தெரிவித்தார்.


வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்ரீனிவாஸ், "வருமான வரி,  சொத்து வரி போன்ற விவரங்கள் வேண்டுமானால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரியை அணுக வேண்டுமே தவிர, ஒட்டு மொத்தமாக எல்லா விவரங்களையும் எங்களுக்கு கொடுங்கள் எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியாது" எனத் தெரிவித்தார்.


தொடர்ந்து இந்த வழக்கில் வருமான வரித் துறை உள்ளிட்ட அனைவரையும் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, குறைந்தபட்சம் மனுதாரர் யாரை அணுகவேண்டும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

31 வது முறையாக நீட்டிப்பு; நீதிமன்றம் அதிரடி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Extension for the 31st time; Court action

போக்குவரத்துத்துறையில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்  இன்று நடைபெற்ற விசாரணைக்கு பிறகு மேலும் 15 நாட்களுக்கு செந்தில் பாலாஜிக்கான நீதிமன்ற காவலை 31 ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.