High court orders to take over the sbi case

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாடு கிளையில் நடந்த முறைகேடுகள் தொடர்பான புகார் மீது விசாரணையைத் தொடர, சிபிஐ-க்கு உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, செஞ்சிலுவை சங்க நிர்வாகத்துக்கும், தமிழக ஆளுநரின் துணைச் செயலாளருக்கும், சிபிஐ-க்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாடு கிளையில் முறைகேடுகள் நடந்துள்ளதால், அதன் நிர்வாகத்தைக் கண்காணிப்பதற்கு நிர்வாகியை நியமிக்கக் கோரி, அச்சங்கத்தின் துணைத்தலைவர் சங்கர் நாகநாதன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

Advertisment

அந்த மனுவில், செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாடுகிளை, பல கோடி ரூபாய் பணத்தைக் கையாள்கிறது. அதன் நிர்வாகி ஒருவர், சங்க நிதியை தனது வங்கிக் கணக்குக்கு மாற்றியுள்ளார். மேலும், சங்க நிர்வாகத்துக்கும், விளம்பரத்துக்கும், பிரச்சாரத்துக்கும் 70 சதவீத நிதி பயன்படுத்தப்பட்டு உள்ளது. வெறும் 30 சதவீத நிதி மட்டும் சமூக பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ரத்த தான முகாம் மூலம் பெறப்படும் ரத்தத்தை, அரசு மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்குவதற்குப் பதில், தனியார் மருத்துவமனைகளுக்கு விற்கப்பட்டுள்ளது.

கடந்த 2013 முதல் 2019 வரையிலான ஆண்டு காலத்தில் நடந்த வரவு - செலவு கணக்குகளைத் தணிக்கை செய்தபோது, பல முறைகேடுகள் நடந்தது தெரிய வந்ததை அடுத்து, தமிழ்நாடு கிளைத் தலைவரான ஆளுநரின் பரிந்துரைப்படி, சிபிஐ-க்கு புகார் அளிக்கப்பட்டது. அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், விசாரணையை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு, மனுவுக்கு டிசம்பர் 3-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, இந்திய செஞ்சிலுவை சங்கத்துக்கும், தமிழக ஆளுநரின் துணைச் செயலாளர், தமிழக அரசு மற்றும் சிபிஐ-க்கு உத்தரவிட்டுள்ளது.