Skip to main content

உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மாற்றம்! 

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

High Court Judge Anand Venkatesh change!

 

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வந்தவர் ஆனந்த் வெங்கடேஷ். இவர், கடந்த கால ஆட்சியின் போது அமைச்சர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களின் வழக்குகளைத் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறார். அந்த வகையில் அமைச்சர்களான பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன், ஐ. பெரியசாமி ஆகியோர் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட வழக்குகளைத் தாமாக முன்வந்து மீண்டும் விசாரித்து வருகிறார். அதேபோல், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ். ஆகியோரின் வழக்குகளையும் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறார். 

 

சமீபத்தில், அமைச்சர் ஐ. பெரியசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி ஆகியோரின் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “கீழமை நீதிமன்றங்களின் செயல்களைப் பார்க்கும் போது நீதித்துறையை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும். வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதால் என்னை வில்லனாகப் பார்க்கின்றனர். ஒவ்வொரு வழக்கிலும் விசாரணையை யாரும் எதிர்கொள்ள விரும்பவில்லை” எனத் தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அக். 3ம் தேதி முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதியாக செயல்படுவார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இவர் விசாரித்து வந்த வழக்குகளை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிப்பார் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்படுவது வழக்கம் அந்த அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

“மகன் சொத்தில் தாய்க்கு உரிமையில்லை” - சென்னை உயர்நீதிமன்றம்

Published on 18/11/2023 | Edited on 18/11/2023

 

 Madras High Court says Mother has no right in property of married son

 

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பவுலின் இருதய மேரி. இவருக்கு மோசஸ் என்ற மகன் இருந்தார். இவருக்கு கடந்த 2004ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த அக்னஸ் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில், மோசஸ் கடந்த 2012ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.

 

இதில் அவர் இறப்பதற்கு முன் அவருடைய சொத்தில் உயில் எதுவும் எழுதி வைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அக்னஸ்க்கும் பவுலின் இருதய மேரிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தன்னுடைய மகனின் சொத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என்று பவுலின் இருதய மேரி நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அப்போது அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மோசஸின் சொத்தில் அவரது தாய்க்கும் பங்கு உள்ளது என்று உத்தரவிட்டுத்  தீர்ப்பளித்தது. 

 

இதனைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மோசஸின் மனைவி அக்னஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான வழக்கு இன்று (18-11-23) விசாரணைக்கு வந்தது. அப்போது அக்னஸின் சார்பில் வழக்கறிஞர் மித்ரா நேஷா வாதிட்டார்.அதில் அவர், “கணவர் இறந்தால், அவருடைய விதவை மனைவி மற்றும் குழந்தைகளுக்கே சொத்தில் பங்கு உள்ளது. ஒருவேளை மனைவியோ அல்லது குழந்தைகளோ இல்லை என்றால் அவருடைய தந்தை தான் சொத்தின் வாரிசு தாரர் ஆவார். இதில் இறந்துபோன நபரின் தந்தையும் இல்லை என்றால் தான் தாய் மற்றும் சகோதர, சகோதரிகள் வாரிசுகள் ஆவார்கள். எனவே, மோசஸுக்கு மனைவி மற்றும் குழந்தை உள்ள நிலையில் அவருடைய சொத்தில் யாரும் பங்கு கேட்க முடியாது” என்று வாதிட்டார்.

 

அவருடைய வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், “திருமணமான மகன் இறந்த நிலையில் அவருடைய சொத்தில் தாய் பங்கு கேட்பதற்கான வழியே இல்லை. இந்திய வாரிசுரிமை சட்டத்தின்படி, சொத்தில் தாய் பங்கு கேட்கமுடியாது என்பதை இந்த நீதிமன்றம் தெளிவுபடுத்த விரும்புகிறது. எனவே, சொத்தில் தாய்க்கும் பங்கு உண்டு என்ற நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்கிறோம்” என்று தீர்ப்பளித்தனர். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

“சனாதனம் குறித்து நான் தவறாக எதுவும் பேசவில்லை” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

Udayanidhi Stalin says I have not spoken anything wrong about Sanatanam

 

சென்னையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். இவரது பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

 

மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு மீதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த மகேஷ் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘மாதவரம் பால் பண்ணை அருகே உள்ள அரங்கத்தில் திராவிட ஒழிப்பு மாநாட்டை நடத்த தனக்கு போலீஸார் அனுமதி வழங்கவில்லை. எனவே, அந்த மாநாட்டை நடத்த போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தது.

 

இது தொடர்பான வழக்கு நேற்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், “மக்கள் மத்தியில் கெட்ட எண்ணத்தை உருவாக்கும் வகையில் பிரச்சாரம் செய்ய நீதிமன்றத்தின் உதவியை நாட முடியாது. இதுபோன்ற கூட்டங்கள் நடத்துவதற்கு அடிப்படை உரிமை என்று மனுதாரர் கூறினாலும், மக்களின் நம்பிக்கைகளை ஒழிக்கும் விதமாக பிரச்சாரம் செய்ய இந்த நீதிமன்றம் அனுமதி வழங்காது.

 

சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டு பேசியது குறித்து இதுவரை எந்த வழக்குப்பதிவும் செய்யப்படவில்லை. இதன் மூலம் காவல்துறையினர் தங்கள் கடமையை செய்ய தவறிவிட்டது. அதிகாரத்தில் இருப்பவர்கள் பொது நிகழ்ச்சியில் பேசும்போது எந்தவித வேறுபாடு இல்லாமலும், கொள்கை ரீதியாக பிளவுபடுத்தாமலும் கவனத்துடன் பேச வேண்டும்” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

 

நீதிமன்றம் கூறிய கருத்து தொடர்பாக நேற்று (06-11-23) செய்தியாளர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த அவர், “சனாதன கொள்கை குறித்து நான் பேசியது எந்த தவறும் இல்லை. நான் சொன்ன வார்த்தையில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன். எதுவாக இருந்தாலும் நான் அதை சட்டப்படி எதிர்கொள்வேன். அம்பேத்கர், பெரியார், திருமாவளவன் ஆகியோர் பேசியதை விடவும் நான் குறைவாகத்தான் பேசியுள்ளேன். நான் பேசியது சரிதான். அமைச்சர், எம்.எல்.ஏ, இளைஞர் அணி செயலாளர் ஆகிய பதவிகள் எல்லாம் இன்று வரும் நாளை போகும். ஆனால், நாம் முதலில் மனிதனாக இருப்பது தான் முக்கியம்” என்று கூறினார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்